Nov 17, 2011

சீனாவை பார்த்து பயப்படவில்லை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா

சீனாவை பார்த்து பயப்படவில்லை'' என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறினார். ஆஸ்திரேலியாவில் கூடுதலாக ராணுவ முகாம்கள் அமைத்து ஆயுதங்களை குவிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்கு சீன பிரதமர் வென் ஜியாபோ கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், ஹவாய் தீவில் நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பெராவுக்கு நேற்று வந்தார். இங்கு பிரதமர் ஜூலியா கில்லார்டை சந்தித்து, ஆஸ்திரேலியாவில் அமெரிக்க ராணுவ முகாம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

பின்னர் ஒபாமாவும் கில்லார்டும் பத்திரிகையாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, ஆசிய பசிபிக் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியாவில் அமெரிக்க படைகள் குவிக்கப்படுகிறதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஒபாமா பதில் அளிக்கையில் கூறியதாவது: சீனாவை பார்த்து அமெரிக்கா பயப்படவில்லை. சர்வதேச சட்டதிட்டங்களின்படி சீனா செயல்பட வேண்டும். வல்லரசு நாடாக இருக்கும் போது சீனாவை பார்த்து அமெரிக்கா பயப்படுகிறது என்று சொல்வது தவறானது.

ஆஸ்திரேலியா -அமெரிக்கா இடையே ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்தவே கூடுதல் படைகள் இங்கு குவிக்கப்படுகின்றன. இங்கு அமெரிக்க முகாம்களை நிரந்தரமாக அமைக்கும் திட்டமில்லை. இருநாட்டு வீரர்கள் ராணுவ பயற்சி, ஆசிய பகுதி பாதுகாப்பு குறித்த பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். இவ்வாறு ஒபாமா கூறினார். ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறுகையில், ஆசிய பசிபிக் பகுதியில் சீனா வரம்பு மீறி செயல்படுகிறது.

குறிப்பாக ஆசிய பசிபிக் கடல் பகுதிக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்த பகுதியில் உள்ள சிறிய நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க ஆஸ்திரேலியாவில் அமெரிக்கா படைகள் குவிக்கப்பட வேண்டும் என்று அந்த நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதுவும் படைகள் குவிப்பதற்கு ஒரு காரணம் என்றார்.

No comments: