Nov 22, 2011

புதிய மின் கட்டண முறைகளில் அதிரடி மாற்றம்: ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்?

மின் கட்டண முறைகளில், ஒவ்வொரு பிரிவிலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய கட்டண முறை, ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் தவிக்கிறது. இதை சரி செய்ய, மின்
கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், மின் கட்டண உயர்வு கோரி, மனு தாக்கல் செய்துள்ளது. இதில், மின் கட்டண முறைகளில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

என்ன மாற்றம்?இதுகுறித்து, எரிசக்தி துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:செயல்பாட்டில் இருக்கும் கட்டண முறைப்படி, இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்குள் பயன்படுத்துவோர் மற்றும் இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோர் என, இரண்டு பிரிவாகவும், ஒன்று முதல் 50 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும், 51 முதல் 100 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும் இருந்து வந்தது.இதேபோல், ஒவ்வொரு பிரிவிலும், யூனிட்களின் பயன்பாடுகளுக்கு ஏற்ப, கட்டண விகிதம் மாறுபாடாக உள்ளது. இக்கட்டண முறை அனைத்தும், தற்போது அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.அதன்படி, ஒன்று முதல், 200 யூனிட்களுக்கு ஒரு கட்டணம், 201 முதல், 500 யூனிட்களுக்கு ஒரு கட்டணம், 501 யூனிட்களுக்கு மேல் ஒரு கட்டணம் என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விசைத்தறி பிரிவில், 500 யூனிட்கள் வரை இலவசமாகவும், அதற்கு மேல் பயன்படுத்தும் யூனிட்டிற்கு ஒரு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், சிறு, குறு தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், சினிமா ஸ்டூடியோக்கள், படப்பிடிப்பு தளங்கள், கல்வி நிறுவனங்கள், ரயில்வே ஆகியவற்றிற்கு, ஒரே விதமான கட்டண முறை அமலுக்கு வரவுள்ளது.இவ்வாறு எரிசக்தி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
:புதிய மின் கட்டணம் குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விரைவில் விசாரணை நடத்தி, பொதுமக்கள், தொழிற்சாலை அதிபர்கள், நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கும்.இக்கருத்து கேட்பு கூட்டங்கள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் நடக்கும். இதையடுத்து, ஏப்ரல் 1ம் தேதிக்குள் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

No comments: