Dec 1, 2011

திருச்செந்தூர் கோவில் உண்டியல் வசூல் ரூ.1 கோடியை தாண்டியது


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதம் இரண்டு முறை உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் நவம்பர் மாதம் உண்டியல் எண்ணிக்கை கடந்த 8-ந் தேதியும், 29-ந்தேதியும் நடைபெற்றது. கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் உதவி ஆணையர்கள் செல்லத்துரை, வீரராஜன், அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி, முதுநிலை கணக்கு அலுவலர் வெங்கடாசலம், கண்காணிப்பாளர்கள் ராமசாமி, வெங்கடேஷ், கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

8-ந்தேதி திறக்கப்பட்ட உண்டியலில் 53 லட்சத்து 16 ஆயிரத்து 775 ரூபாயும், 29-ந்தேதி எண்ணப்பட்ட உண்டியலில் 44 லட்சத்து 15 ஆயிரத்து 127 ரூபாயும், மாதம் ஒருமுறை எண்ணப்படும் அன்னதான உண்டியலில் 5 லட்சத்து 83 ஆயிரத்து 926 ரூபாயும், கோசாலை உண்டியலில் 29 ஆயிரத்து 844 ரூபாயும் என மொத்தம் ஒரு கோடியே 3 லட்சத்து 45 ஆயிரத்து 672 ரூபாய் உண்டியல் வசூல் கிடைத்து உள்ளது.


நவம்பர் மாதம் எண்ணப்பட்ட உண்டியலில் காணிக்கையாக தங்கம் 923 கிராமும், வெள்ளி 5,020 கிராமும் கிடைத்து உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டு நடைபெற்ற கந்தசஷ்டி திருவிழா மற்றும் தற்போதைய அய்யப்ப பக்தர்கள் சீசன் ஆகியவற்றால் கோவிலில் உண்டியல் வசூல் ஒரு கோடியை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: