Dec 10, 2011

ஒரே ஓடுபாதையில் வந்த இரண்டு விமானத்தால் பரபரப்பு :400 பயணிகள் உயிர் தப்பினர்


திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை 2 விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. இதனால், 400 பயணிகள் உயிர் தப்பினர். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 11.10க்கு எமிரேட்ஸ் விமானம்  ஒன்று கத்தார் நாட்டுக்கு புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து இந்த விமானம் மேலே எழும்பி கொண்டு இருந்தபோது, கொழும்பில் இருந்து வந்த ஏர்லங்கா விமானம் அதே ஓடுபாதையில் தரை இறங்கியது.


சில வினாடிகள் வித்தியாசத்தில் விமானங்கள் ஒன்றை ஒன்று மிக அருகே கடந்து சென்றன. சில வினாடிகள் தாமதித்து இருந்தால் கூட இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு இருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக அது தவிர்க்கப்பட்டது. இதனால், இந்த விமானங்களில்  இருந்த 400 பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிக்னல் கொடுப்பதில் ஏற்பட்ட குளறுபடிதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த திருவனந்தபுரம் விமான நிலைய இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

No comments: