Dec 21, 2011

எனது இந்தியா! - எஸ். ராமகிருஷ்ணன்.(எவரெஸ்ட் என்பது மலை இல்லை! )



இந்திய வரைபடத்தைப் பார்க்கும்போது எனக்குள் நிறைய கேள்விகள் உருவா​கின்றன, இந்திய வரைபடம் எப்படி, யாரால் வரையப்பட்டது? எவ்வாறு நதிகளையும் நிலத்தையும் வேறுபடுத்திப் பிரித்தார்கள்? யார் முதன்முதலாக இந்திய வரைபடத்தை அச்சிட்டது? இன்று உள்ள இந்திய வரைபடமும் அசோகர் கால இந்திய வரைபடமும் ஏன் வேறு​பட்டு இருக்கின்றன? இப்படிக் கேள்விகள் கிளைவிட்டுக்கொண்டே இருக்கின்றனஇதற்கான பதிலின் பின்னே பல நூற்றாண்டு கால உண்மைகள் புதையுண்டு இருக்கின்றன. ஆகவே, இந்தப் பதில்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக இன்னொரு துணைக் கேள்வி இருக்கிறது.சென்னையில் உள்ள பரங்கிமலைக்கும் வடக்கில் உள்ள இமயமலைக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கிறது?இரண்டும் வெவ்வேறு உயரமான மலைகள் என் பதைத் தவிர, வேறு என்ன இருக்கப்போகிறது என்றுதான் பொதுப்புத்தி யோசிக்கிறது. ஆனால் அப்படி இல்லை. தொடர்பு இல்லாத இந்த இரண்டு புள்ளிகளும் ஒரே கண்ணியால் இணைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த ஒன்றிணைக்கும் புள்ளியாக இருந்தது, இந்தியாவில் நடைபெற்ற நில அளவைத் திட்டம். இந்திய வரைபடம் உருவாக்கப்பட்டதன் பின்னணியில் அரசியலும் விஞ்ஞானமும் ஒன்று கலந்திருக்கின்றன. இன்று நாம் காணும் வரைபடம் இந்தியா கடந்து வந்த வரலாற்றுப் பாதையின் ஓர் அடையாளம்.



இந்தியாவில் ஆரியபட்டா காலத்தி​லேயே மரபுக்கணித முறைப்படி பூமியின் சுற்றளவு குறிக்கப்பட்டு இருக்கிறது. தூரத்தைக் கணக்கிடும் முறைகள் நடைமுறையில் இருந்தன. ஆனாலும், பூகோள இயல்பு குறித்து முழுமையாக அறியப்படவே இல்லை. ஆகவே, மன்னர்கள் காலத்தில் முறையான பூகோள வரைபடங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. காரணம், சிதறுண்டுகிடந்த தனித்தனி ராஜ்ஜியங்களும் அதன் எல்லைகளும் வரையறுக்கப்படாமல் இருந்ததுதான். மொத்த இந்தியா எவ்வளவு பெரியது என்ற துல்லியமான கணக்கு எந்த ஒரு பேரரசரிடமும் இல்லை. அவர்கள் பயண தூரத்தை வைத்துநிலத்தைக் கணக்கிட்டார்கள். ஆகவே, ஓர் ஊர் கடல் மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்ற விவரத்தை அவர்களால் துல்லியமாக அறிய முடியவில்லை. படையெடுப்பின்போது அவர்களுக்கு இருந்த பெரிய சிக்கல்... படைகள் எந்தப் பாதையில் செல்ல வேண்டும்? எவ்வளவு உயரத்தில் அந்த ஊர் இருக்கிறது? எங்கே பதுங்கி சண்டையிடுவது என்பதே. அதற்காகப் பலவிதமான ரகசிய வரைபடங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், எதுவும் துல்லியமானதாக இல்லை.இதன் காரணமாக ஓர் ஊரின் பரப்பளவு எவ்வளவு பெரியது? அதில் எவ்வளவு தூரம் காடும் மலைகளும் இருக்கின்றன? நதி எந்த திசையில் செல்கிறது? இரண்டு நகரங்களுக்கு இடைப்பட்ட நிலவெளி எவ்வளவு நீளமானது? மலையை எப்படிக் கடந்து செல்வது? என்பன போன்ற அடிப்படை விவரங்கள்கூட குழப்பமானதாக இருந்தன.இன்று நாம் பயன்படுத்துவது போல சகலரும் பூகோள வரைபடத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. வரைபடம் என்பது மிகவும் ரகசியமான ஒன்று. அது, பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். போர்க் காலங்களில்தான் அதை வெளியே எடுப்பார்கள். மற்ற காலங்களில் திசையை வைத்தும், சூரியனை வைத்துமே தூரத்தைக் கணக்கிட்டுக் கொண்டார்கள். நிலவரைபடம் உருவாக்கும் விஞ்ஞானம் தனித்த அறிவுத் துறையாக வளரவே இல்லை.11-ம் நூற்றாண்டில் பெர்ஷியாவைச் சேர்ந்த அல்பெருனீ இந்தியாவுக்கு வந்து, அன்றிருந்த ராஜ்ஜியங்களை மாதிரியாகக்கொண்டு ஒரு பிரத்யேக வரைபடத்தை உருவாக்கி இருக்கிறார். ஆனால், அந்தப் படம் முழுமையானதாக இல்லை.

மொகலாய காலத்தைய வரைபடங்களைப்பற்றி, அக்பரின் 'அயினிஅக்பரி’ என்ற நூல் விரிவாகப் பேசுகிறது. அவை, அலி கஷ்மீரி இபின் லுமான் என்பவரால் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறது. அதுவும் துல்லியமானது இல்லை.அடிப்படையான நிலவியல் விவரங்கள் இல்லாத காரணத்தால் பயணம் போவதும், வணிகச் சந்தை அமைப்பதும், நிர்வாகத்தைப் பிரித்து வரிவசூல் செய்வதும், படை நடத்திப்போவதும் நடைமுறைப் பிரச்னையாக இருந்தது. அதுதான் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசுக்கும் முக்கியமான சிக்கலாக இருந்தது.வெள்ளைக்காரர்கள் இந்தியாவுக்கு நன்மை பயக்கும் எதைச் செய்தாலும், அதற்குள் அவர்களது சுயநலம் ஒளிந்தே இருக்கும். அப்படி, நன்மையும் சுயநலமும் கலந்து உருவானதே இந்தியன் லேண்ட் சர்வே. குறிப்பாக, கிரேட் திரிகோண மெட்ரிக் சர்வே எனப்படும் நில அளவைத் திட்டம்.இந்த நில அளவையியலை முன்னின்று நடத்தியவர் கலோனியல் வில்லியம் லாம்டன் என்ற பிரிட்டிஷ் அதிகாரி. முக்கோண முறையின் அடிப்படையில் கிரேட் ஆர்க் எனப்படும் மாய வளைவை வரைந்து, அதில் இருந்து இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரத்தைக் கணக்கிட்டார்கள். இந்தப் பணிக்கு 'தியோடலைட்’ என்ற கருவி பயன்படுத்தப்பட்டது.எனது 'யாமம்’ நாவலை, லாம்டன் சர்வேயை மையமாகக்கொண்டு எழுதியிருக்கிறேன். அதில், இந்தநிலஅளவைப் பணி விரிவாகப் பேசப்பட்டி​ருக்கிறது. இந்தியாவை அளக்கும் இந்த மாபெரும் திட்டம் சென்னையில்தான் துவங்கியது. அதுவும் பரங்கிமலையில்தான் துவங்கியது. இந்த நில அளவையின் முடிவில்தான், உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் என்று கண்டுபிடிக்கப்பட்டது என்றால், எங்கோ இருக்கும் எவரெஸ்ட்டுக்கும் சென்னையில் உள்ள பரங்கிமலைக்கும் தொடர்பு இருக்கிறதுதானே!பரங்கிமலையில் உள்ள புனித தாமஸின் தேவாலயத்தை நிறையப் பேர் அறிந்திருப்பார்கள். அந்த தேவாலயத்தின் அருகிலேதான் லாம்டன் தனது நில அளவைப் பணியைத் துவக்கிய இடம் உள்ளது. அங்கே ஒரு நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டு இருக்கிறது.

தேவாலயத்தின் கிழக்குப் பகுதியில் இந்தியன் சர்வே துறையால் லாம்டன் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி 1797-ம் ஆண்டு ஜேம்ஸ் ரென்னலை சர்வேயர் ஜெனரலாகக் கொண்டு, சர்வே ஆஃப் இந்தியாவை வங்காளத்தில் துவக்கியது. 1783-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் வரைபடம் என்று ஓர் இந்திய வரைபடம் இங்கிலாந்தில் அச்சிடப்பட்டு கம்பெனி வணிகத்துக்காக விநியோகம் செய்யப்பட்டது.1798ம் ஆண்டு மைசூரை ஆண்ட திப்புவை ஒடுக்குவதற்காக படை நடத்திப் போன கிழக்கிந்திய கம்பெனியின் படைப்பிரிவு ஒட்டுமொத்த ராணுவத்தையும் வைத்துப் போராடியும் திப்புவைப் பிடிக்க முடியாமல் திண்டாடியது. திப்பு சுல்தான், போரில் முதன்முதலாக ராக்கெட்டுகளைப் பயன்படுத்தினார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளை போர்க்களத்தில் செலுத்துவதற்காக 5,000 பேர் இருந்தார்கள் என்று கூர்லான்ட் கேன்பையின் புத்தகம் சொல்கிறதுநேர்கொண்டு வெல்ல முடியாத திப்பு சுல்தானை துரோகத்தின் வழியே மடக்கத் திட்டமிட்ட கிழக்கிந்திய கம்பெனி, அவரது மந்திரியான மீர்சாதிக்கைக் கைக்குள் போட்டு, திப்புவின் படையைப் பலவீனப்படுத்தி அவரைக் காட்டிக் கொடுக்க வைத்து திப்புவைக் கொன்றது.திப்புவுக்குப் பிறகு அவர்கள் கைவசமான மைசூர் பகுதியை எப்படி ஆட்சிபுரிவது என்பதற்காக முறையான நில வரைபடங்கள், காடுகளின் பரப்பளவு ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தப் பணியின் துவக்கமாகவே புதிய சர்வே ஒன்றினை மேற்கொள்ள கிழக்கிந்திய கம்பெனி முடிவு செய்தது. இதற்காகவே, கர்னல் வில்லியம் லாம்டன் தலைமையில் 1802-ம் ஆண்டு நில அளவைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு, அன்றைய மதராஸ் கவர்னர் ஜெனரலாக இருந்த ஆர்தர் வெல்லெஸ்லி அனுமதி வழங்கினார்.

லாம்டன் கூடவே  பிரான்சிஸ் புகானின் என்ற தாவரவியல் ஆய்வாளர் மைசூர் பகுதியில் உள்ள தாவரங்களை முறையாகப் பட்டியலிட்டு வகைப்படுத்தும்படி அனுப்பி வைக்கப்பட்டார். இந்தத் திட்டங்களை முன்மொழிந்தவர் காலின் மெக்கன்சி.மொத்த நிலப்பரப்பை அளவிடுவது என்பது எளிதானது இல்லை. அதற்கான விசேஷ உபகரணங்கள் எதுவும் இந்தியாவில் கிடையாது. கூடுதலாக எப்படித் தகவல்களைப் பதிவு செய்வது? எந்த முறையில் கணக்கிடுவது? அதை எவ்வாறு தொகுத்து வரைபடமாக்குவது? என்ற சிக்கல்கள் எழுந்தன. அந்தப் பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க, கணிதம், பொறியியல் துறைகளைச் சார்ந்தவர்கள் பணிக்கு அமர்ந்தப்பட்டார்கள். 200-க்கும் மேற்பட்ட கூலிகள், சர்வே பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். 12 யானைகள், 30 குதிரைகள், 42 ஒட்டகங்கள் சுமைகளைக் கொண்டுசெல்லப் பயன்படுத்தப்பட்டன.
நன்றி : ஜூனியர் விகடன்


4 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அடடே.... நீளமா இருக்கே பதிவு.....


வாசிக்க:
ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...

MANO நாஞ்சில் மனோ said...

புதிய தகவல் அறிந்து கொண்டேன்...!!!

Anonymous said...

ஜூனியர் விகடன் லயும் படிச்சேன்.. பகிர்வுக்கு நன்றி

வாங்க வாழ்த்துங்க

செல்லக் குட்டி பிறந்தநாள்

MaduraiGovindaraj said...

நன்றி ஜூனியர் விகடன்