Jun 12, 2012

இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா !


 ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைத்ததால், இந்தியா உள்பட 7 நாடுகளுக்கு பொருளாதார தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சர்வதேச விதிமுறைகளை மீறி அணுசக்தி திட்டங்களை ஈரான் செயல்படுத்தி வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் புகார் கூறி வருகின்றன. ஈரான் மீது பொருளாதார தடையும் விதித்துள்ளன. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கூடாது என்று இந்தியா உள்பட பல நாடுகளுக்கு அமெரிக்கா நிர்பந்தம் கொடுத்தது. எனினும், ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. இதில் அதிருப்தி அடைந்த அமெரிக்க அரசு, இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க திட்டமிட்டது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் நேற்று கூறியதாவது: அணுஆயுதங்கள் ஈரான் கையில் கிடைப்பதை தடுக்கவும், சர்வதேச சட்ட திட்டங்களை ஈரான் பின்பற்றவும் பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது. அதற்காகதான் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப் படுகிறது. அந்த நாட்டுக்கு ஆதரவு அளிக்கும் பிற நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்க திட்டமிட்டது. ஆனால், ஈரானில் இருந்து இந்தியா, மலேசியா, கொரியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, துருக்கி, தைவான் ஆகிய நாடுகள் கணிசமாக கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துள்ளன. எனவே, பொருளாதார தடையில் இருந்து இந்த நாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அணுசக்தி திட்டங்கள் விஷயத்தில் சர்வதேச விதிமுறைகளை பின்பற்ற ஈரான் தலைவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Jun 11, 2012

வைகோ ஆர்ப்பாட்டம்


மத்திய அரசின் ‘பிளஸ்-2’ பாடத்திட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இடம் பெற்றுள்ளது. கேலி சித்திரத்தை நீக்க கோரி ம.தி.மு.க. சார்பில் சென்னை மெமொரியல் ஹால் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து வைகோ பேசியதாவது:- 

இந்தி மொழி ஆட்சி மொழி என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து 1965-ல் தமிழ்நாட்டில் மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. 8 பேர் தீக்குளித்து உயிர் நீத்தார்கள். உன்னதமான இந்த போராட்டத்தில் மாணவர்கள் வீதியில் இறங்கி போராடினார்கள். 

இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தற்போது பாடப் புத்தகத்தில் வெளிவந்துள்ள கேலி சித்திரத்தை நீக்கவேண்டும். நீக்கும் வரை போராட்டம் தொடரும்.