Mar 21, 2013

புலித்தடம் தேடி…மகா. தமிழ் பிரபாகரன்-பாகம் 18

திருகோணமலையை அடையும்போது மழை சற்று ஓய்ந்திருந்தது. கடற்கரையை ஒட்டிய பகுதியில் தமிழீழ விடுதலை இயக்கத்தால் (டெலோ)  நிறுவப்பட்ட ‘வெலிக்கடைத் தியாகிகள் நினைவுத் திறந்தவெளி அரங்கம்’ இருந்தது. அந்த எழுத்துக்கள் இலங்கையின் 65-வது சுதந்திரத் தினத்தின்போது அழிக்கப்பட்டுவிட்டன.
திருகோணமலையில் உள்ள ‘திருக் கோணஸ்வரம் ஆலயம்’ இலங்கையில் உள்ள மிக முக்கிய கோயில்களுள் ஒன்று. ஆலயத்தின் கீழ் பகுதியில் எல்லாம் இராணுவ மையங்கள்தான் இருந்தன. ‘கடவுள் இல்லாத இடமே இல்லை’ என்று ஆத்திகர் கூறுவர். ‘தமிழர் பகுதிகளில் இராணுவம் இல்லாத இடமே இல்லை’ என்பதுதான் இப்போதைய நிலை.
அன்று மாலையே மட்டக்களப்புக்குப் புறப்பட்டேன். வழிகளில் காடுகளை நோக்கி இராணுவம் துப்பாக்கி ஏந்தி நின்றது. ‘மாவீரர் நாளை’ எங்காவது கொண் டாடி விடுவார்களா என்ற எச்சரிக்கை உணர்வு. இராணுவ ஆதிக்கத் தால் தமிழ் மக்களே மாவீரர் நாளை மறக்க நேரிட்டாலும், இராணுவம் மறக்கவிடாது போலும்.
மாவீரர் நாளும் கார்த்திகை விளக்கீடும் ஒரே நாளில் வருவதால், ‘விளக்குகள்’ ஏற்றப்படும் என்ற பதற்றம் இராணுவத்திடம் இருந்தது. மட்டக்களப்பை வந்தடைந்தேன்.
விடுதிகளில் அன்று தங்குவது சிரமம். ‘உங்கள் பெயர் தமிழ்ப் பிரபாகரன் என்று இருக்கிறது. இந்தப் பெயருக்கு அறை கேட்டால், சந்தேகத் தோடு பார்ப்பார்கள். ஒருவேளை அவர்கள் இராணுவத்துக்குக்கூட தகவல் தர நேரிடும்’ என்று என்னை இரவு தங்க வைப்பதற்கு உடனிருந்த நண்பர் மிகவும் சிரமப்பட்டார். நண்பர் இந்த அளவுக்கு அஞ்சியதற்குக் காரணம், கருணாவின் ஆட்கள் மட்டக்களப்பு எங்கும் திரிவார்கள் என்பதுதான்.
மாவீரர் நாள் வந்தது. முந்தைய இரவின் நெடுநேரம் வரையில் புலிகள் காலத்தில் மாவீரர் நாள் எப்படியிருக்கும், எவ்வளவு பலத்துடன் புலிகள் நிலைகொண்டு இருந்தார்கள் என்பதைக் கண்கள் கலங்க விவரித்தார்.
அத்தோடு, எங்களின் சுதந்திரத்தை வைத்து தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் எப்படி எல்லாம் அரசியல் செய்கிறார்கள் என்று வேதனையை வெளிப்படுத்தினார். சுதந்திரமற்று வாழ்வது என்பது எவ்வளவு கொடியது என்று தமிழர் நிலங்களில் வாழ்ந்து பார்த்தால் தெரியும்.
உண்மையில் இப்போதைய நிலைமையில் அரசியல் தளத்தில் தமிழ் மக்கள் எந்தக் கட்சியையும் நம்பவில்லை. அவர்கள் எல்லாம் தங்களை வைத்துப் பிழைத்துக்கொண்டு உள்ளார்கள் என்பதை இந்த நண்பரைப்போல் பலர் புரிந்துவைத்துள்ளனர்.
அரசியல்வாதிகளுக்குத் தேவை வரும்போது மட்டும் தமிழ் மக்களுக்கு உரிமை என்ற முழக்கம் ஓங்கும். ஆனால், அந்தத் தமிழ் மக்களுக்காகப் போராட ஒருபோதும் அரசியல் தலைமைகள் ஒற்றுமையாக நின்றது இல்லை. சிங்களவர்களோ ‘சிறு துளி பெரு வெள்ளமாக’ உள்ளார்கள், தமிழர்களோ ‘பெரு துளி சிறு வெள்ளமாக’க்கூட இல்லை” என்ற வேதனையை, நான் பார்த்த தமிழ் மக்கள் அனைவருமே சொன்னார்கள்.
மாவீரர் நாளும் விடிந்தது. ஆசிரியர் ஒருவரைச் சந்திக்கச் சென்றோம். அவர், ”போருக்குப் பின்னால சமாதானம் என்று சொல்லப்படுகின்றது. மக்கள் ஒற்றுமையா இருக்காங்கள், நிம்மதியா இருக்காங்கள், சமாதானத்தோடு இருக்காங்கள், போராட்டம் இல்லாம இருக்காங்கள் என்று வெளியில் சொல்கிறார்கள்.
ஆனால், சமாதானம் என்ற பெயரில் மிகத் திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம் தமிழர் பகுதிகளில் நடக்கிறது. உண்மையில் தமிழ் ஆட்களுக்கு இன்னும் சரியான தீர்வு கொடுக்கப்படவில்லை. தீர்வைக் கொடுக்காது எந்தளவுக்கு இழுத்தடிக்க முடியுமோ… எந்தளவுக்கு மூடி மறைக்க இயலுமோ… அந்தளவுக்கு தமிழர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். விடுதலைப் புலிகள் இல்லை. அதிகாரத்தைத் தர வேண்டிய அவசியமும் இல்லை. ஆனாலும், இப்பவும் தீர்வுக்கு அரசு எண்ண வில்லை.
இப்போது கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள், சிங்கள நிர்வாகம் என சிங்களத் தரப்பு ஆக்கிரமிப்புகள் அதிகமாக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகமாக இருந்தது, இன்று சிங்களமயமாக்கப்பட்டு இருக்கிறது. வர்த்தகங்கள், மருத்துவம் பார்க்கக்கூடிய ஆட்கள், மற்ற வேலைக்கு அமர்த்தக்கூடிய ஆட்கள் என மட்டக்களப்பில் எல்லாமும் சிங்கள மயம்.
இன்னைக்கு வடகிழக்கு முழுக்க போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. ஒரு ஸ்டேஷன்லகூட தமிழ்ல கதைச்சுப் புகார் கொடுக்க முடியாது. இவர்களின் நோக்கம் எல்லாம் தமிழர்களைத் தனித்து வாழவிடக் கூடாது. தனித்து வாழவிட்டால், மீண்டும் போராட்டம் வரும். மீண்டும் உரிமை கேட்பார்கள் என்பதை எண்ணித்தான், இந்த வேலை நடக்கிறது.
ஒரே குடும்பம் என்று சொல்லிக்கொண்டு, எப்படியெல்லாம் எங்களை அழிக்கணுமோ, அப்படியெல்லாம் அழிக்க வேலைகள் நடக்கிறது. தமிழனைத் தலையெடுக்க விடாமல், விழுந்தவனை அப்படியே புதைக்கும் வேலையைத்தான் இன்று சிங்கள தேசம் செய்கிறது. தமிழர்களாகிய நாங்கள் இன்று அனாதைகளாக உள்ளோம்.
மட்டக்களப்பில் இப்போது உள்ள சுற்றுலா பகுதிகள் மிரட்டப்பட்டு, மகிந்த ராஜபக்ச குடும்பத்தால் பறிக்கப்படுது. பாக்கு குடா என்ற இடம், மிகவும் அழகான கடற்கரைப் பகுதி. கடலில் குளித்துக்கொண்டே இருக்கலாம். அலையே அடிக்காது. இது மாதிரியான இடங்கள் ராஜபக்ஷே குடும்பத்தால் மிரட்டி வாங்கப்பட்டு, பெரிய பெரிய சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. பணம் பெருகும் எல்லா இடத்திலும் ராஜபக்ச குடும்பம் இருக்கும். அல்லது கருணா, பிள்ளையான் கும்பல் இருக்கும்.
இந்த நிலத்தில் நாங்கள் 24 மணி நேரக் கண்காணிப்பின் கீழ் வாழ்கிறோம். இன்றைய அளவில் மட்டக்களப்பில் மட்டும் 26 ஆயிரம் விதவைகள் இருக்கின்றனர். வடகிழக்கை மொத்தமாக எடுத்துக்கொண்டால் 89 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாக உள்ளனர். இவர்களில் இப்பவும் பல பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிறார்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. தமிழ்ப் பெண்களை விதவைகளாக்கியது சிங்கள அரசப் பயங்கரவாதம்தான். இன்னும் 100 ஆண்டுகளானால், ராஜபக்சவுக்குப் பின்னால்கூட சிங்கள அரச துவேஷத்திடம் இருந்து எங்களுக்கு விடிவோ, உரிமையோ கிடைக்காது.
என்னோட சிறிய வயசில் நடந்த சில கொடூரமான சம்பவங்கள் என் மனதில் நீங்காத் துயராய் இராணுவத்தின் மிருகத்தனத்தை எனக்கு தினமும் உணர்த்திக்கிட்டே இருக்கு. 1990 காலப்பகுதியில் பெரும்பாலான அழிப்பு சம்பவங்கள் நடந்துச்சு. கொக்குவில் என்ற கிராமத்தைச் சுற்றிவளைச்சு மக்களை கொன்று அங்கேயே புதைத்தாங்கள்.
1990 ஜூன் மாதத்தில் தமிழ் மக்கள் 50 ஆயிரம் பேர் அகதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் தங்கி இருந்தனர். அந்த மாதத்தில் ஒருநாள் விடியற்காலை இராணுவம் பல்கலைக்கழகத்தைச் சுற்றி வளைச்சு, பெண்களையும் ஆண்களையும் தனிமைப்படுத்தினார்கள். ஆண்களை மட்டும் விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்று வரிசையாக உட்காரவைத்தார்கள்.
நானும் ஒருவனாய் அங்கு உட்கார்ந்திருந்தேன். மைதான நுழைவாயிலில் ஆறு தலையாட்டிகள் (முகமூடி அணிந்த காட்டிக்கொடுப்பவர்கள்) வரிசையாக நிறுத்தப்பட்டார்கள். ஒருவர் ஒருவராக நகர்த்தப்பட்டோம். இந்தச் சோதனையில் ஒரு தலையாட்டி தலையாட்டினாலும், சட்டையைக் கழட்டிக் கைகளும் கண்களும் கட்டப்பட்டு இராணுவப் பேருந்தில் ஏற்றுவார்கள்.
தலையாட்டிகளை நெருங்கினேன். ராணுவ ஆள் ஒருவர் என்னை தலையாட்டிகளின் முன் தள்ளினார். ஐந்து தலையாட்டிகள் என்னை சந்தேகிக்கவில்லை. கடைசித் தலையாட்டியிடம் வரும்போது என் இதயம் நடுங்கியது. என்னை சந்தேகப் பார்வையிலேயே பார்த்தான். ‘நீ சென்ட்ரல் காலேஜ்தானே’ என்றான்.
நான் ‘இல்லை’ என்பதற்குள், என்னைத் தள்ளிவிட்டான். என் உயிர் தப்பியது. ஆனால், இந்த தலையாட்டிகள் சொன்னதால், 153 பேர் ராணுவ பேருந்தில் ஏற்றப்பட்டனர். முனாப் என்ற ராணுவ அதிகாரிதான் இந்த ராணுவப் பிரிவுக்கு தலைமைத் தாங்கினார். ஏற்றப்பட்ட யாருமே விடுதலைப் புலிகள் இல்லை.
எல்லாருமே சாதாரணமானவர்கள், அப்பாவிகள். இவர்கள் நாவலடி என்ற பகுதிக்குக் கொண்டுசென்றதாகத் தகவல். அங்கு 153 பேரும் சித்ரவதை செய்யப்பட்டு மயக்கமுற்ற நிலையில், உயிரோடு டயர்கள் அடுக்கப்பட்டு எரிக்கப்பட்டனர். இது மட்டக்களப்பின் அதிபயங்கர சம்பவங்களுள் ஒன்று.
இளைஞர்களை அழிப்பதன் மூலம் போராளிகள் உருவாகாமல் தடுக்கலாம் என்று சிங்கள இராணுவம் எண்ணியது. இவர்கள் எல்லோரும் பின்னர் காணாமல்போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்துக்கு விசாரணைகள், விசாரணை கமிஷன் என்று எதுவுமே கிடையாது.
மனித உரிமை அமைப்புகள் எதுவும் வாய் திறக்கவில்லை. இதைப் போல் ஆயிரக்கணக்கான சம்பவங்கள் இந்த மண்ணில் நடந்துவிட்டன. நாடு அமைதியாகிவிட்டது என்கிறார்கள். அமைதியாகவில்லை. மயானமாகிவிட்டதால் அமைதியாய் தெரிகிறது” என்றார்.
அப்படி தங்கள் உரிமையையும் உயிரையும் மண்ணையும் காப்பதற்காக சாவுண்ட மாவீரர்களின் நாள் இது. ‘அதே தினத்தில் கார்த்திகை விளக்கீடும் வந்துள்ளது. மாவீரர்களின் ஆசியால் அந்த முருகன் கொடுத்த வரம்தான்’ என்று நாங்கள் பார்க்கச்சென்ற பூசாரி கூறினார்.
வீடுகளிலும் கோயில்களும் கடைகளிலும் ஏற்றப்பட்டு இருந்த விளக்குகளைப் பார்த்து எனக்குக் கண்கள் பனித்தன.
- ஊடறுத்துப் பாயும்

ஜூனியர் விகடன்

No comments: