Jan 12, 2013

புலித்தடம் தேடி. தமிழ் பிரபாகரன் - பாகம் 06


எச்சங்களே மிச்சங்களாய் ஆன மண்ணாய் உள்ளது முள்ளிவாய்க்கால். பதறிய மனங்கள், கதறிய குரல்கள், மரண ஓலங்கள், குண்டடிச் சத்தங்கள் எனப் படுகொலைகளின் காட்சிகள் கண்ணை​விட்டு அகலவே இல்லை.
இரத்தம் படிந்த வழிகளிலும் நந்திக்கடலை ஒட்டியும் நிற்கிறேன். முல்லைத்தீவுக்கு வந்திருந்த தொண்டு ஊழிய நண்பரே அன்றும் என்னுடன் இருந்தார்.
அவர் சுற்றுலாப் பேருந்துகளைப் பார்த்துவிட்டு, ''போரின்போது மக்கள் எப்படிக் கொல்லப்பட்டனர் என்பது நமக்குத் தெரியும் அளவுக்குகூடச் சிங்கள மக்களுக்குத் தெரியாது. 'புலிகள் நம் நாட்டை ஆக்கிரமித்து இருந்​தனர், அவர்களை நாம் விரட்டிவிட்டோம்’ என்ற கதைதான் அவர்களுக்கு வரலாறாகச் சொல்லப்​படுகிறது.
உடைத்து நொறுக்கப்பட்ட நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்களின் முன் நின்று இந்த மக்கள் படம் எடுத்துக்கொள்கின்றனர். எத்தனை பேர் செத்தனர், எவ்வளவு மரண ஓலங்கள் கேட்டது என்பதுகூடத் தெரியாமல், இந்த மண்ணைக் கண்டு ரசிக்க வார விடுமுறைகளில் பேருந்துகளில் கூட்டம் கூட்டமாய் சுற்றுலா வருகின்றனர்.
புலிகளை வெற்றிகொண்ட இராணுவ பூமி இது, நம் நாட்டின் வீரம் சொல்லும் கதை இது என்ற கற்பனை மட்டுமே அவர்களிடம் உள்ளது. எப்படிப்பட்ட நச்சுக் குண்டுகள் வீசப்பட்டன என்றெல்லாம் இவர்களுக்குத் தெரியாது.
இராணுவத் தலைமைப் பீடத்தில் இருந்து வரும் காணொளிகள் மட்டுமே போர்க் காலத்தில் சிங்கள மக்களுக்குக் காட்டப்பட்டன. இனரீதியான பாகுபாட்டையும், இலங்கை சிங்கள தேசம் என்ற நிலைப்பாட்டையும் சிங்கள மக்கள் மனதில் திணித்துக்கொண்டே இருக்கிறது சிங்கள அரசு என்றார்.
அப்போது நாங்கள் இருந்த இடம் 'போர் அருங்காட்சியகம்’. விளக்கங்கள் அனைத்தும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மட்டும்தான் இருந்தன. அதில் ஆயுதங்களின் விளக்கம் சிங்களத்தில் மட்டும்தான். 'தீவிரவாதிகளின் தற்கொலைப் படகு’ தொடங்கி நிலவன், இசையரசி, பரந்தாமன், ஊடுருவி போன்ற கடல் புலிகளின் படகுகள் அங்கு இருந்தன.
சாதாரணமாக ஒரு என்ஜினை வைத்தாலே படகில் நிற்க முடியாது. ஆனால், கடல் புலிகள் நான்குக்கும் மேலான என்ஜின்களை பொருத்தி நின்று செல்வார்கள். அந்தப் படகுகள்தான் இவை என்று கூறினார்.
இந்தப் பகுதிகள் எல்லாம் கடல் புலிகளின் கையில் இருந்த பகுதிகள். அப்போது பழுதான படகுகளை இங்கு சரிபார்ப்பார்கள். இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள எல்லாமே பழுதானவை. செயல்பாட்டில் இருந்தவை என்ன ஆகின என்பது இராணுவத்துக்கே தெரியாது.
புலிகளின் நீர்மூழ்கி, ஆட்லறி, பீரங்கி, விமானப் பாகங்கள், குண்டுகள், துப்பாக்கிகள், கண்ணி வெடிகள் என்று பலவிதமான ஆயுதங்கள் இருந்தன. அதில் ஆட்லறி, பீரங்கி போன்றவை புலிகளின் சொந்தத் தயாரிப்புகள். இதைப் பார்க்கத்தான் கூட்டம் கூட்டமாக சிங்கள சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
தமிழர்களுக்கு சிங்களத்தின் கொடூரத்தை சொல்லும் 'வெற்றிச் சின்னம்’ நந்திக்கடலில் இருந்தது. அந்த இடத்தைப் பார்க்கும் முன், ஓர் வயல்வெளியைக் காட்டி, 'இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதைப்பற்றிச் சொல்கிறேன்’ என்று நண்பர் கூறி இருந்தார்.
அதை நினைவுபடுத்திக் கேட்​டேன். ''புலிகள் கடைசியாக ஓர் விமானத் தாக்குதல் நடத்தினர். அந்த விமானத்தை அந்த வயல்வெளியில்தான் டேக்-ஆப் செய்தனர்'' என்றார். ஆனால், அந்த வயல்வெளி ஓர் ஓடுதளம் போலவே இல்லை. விவசாய நிலம்​போலத்தான் இருந்தது.
யுத்தக் காலத்துல நானும் இங்கதான் இருந்தன். எத்தனை பிணங்கள்... கால் தனியா கை தனியா தலை தனியா... எல்லாம் இரத்தமும் சதையுமா இருந்தன. மூட்டையும் முடிச்சுமாக இந்த வழியே​தான் நடந்தோம்.
நடந்துகொண்டு இருக்க பிடரி​யில் வந்து செல் விழும்... கிபீர் விழும். செத்த பிறகுகூட அந்தப் பிணங்களை கிபீரும் செல்லும் தாக்கிக்​கொண்டு இருந்தன'' என்று கம்மியான குரலில் சொல்லிக்கொண்டே இருந்தார் நண்பர். ஒவ்வொரு இடங்களுக்கும் அவர் கொடுக்கும் விளக்கம், கண்ணில் நீரைத் ததும்ப வைத்தது.
இங்குதான் அண்மையில் விடுமுறைக் கால 'போர் சுற்றுலாத் துறை’ ஹோட்டலை மகிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் திறந்து வைத்தனர். இது​குறித்து கருத்து வெளியிட்டுள்ள நோமடிக் தாட்ஸின் சுற்றுலா இயக்குநர் ஜுனோ வேனன் பவல்,
ஐக்கிய நாடுகளால் கொலைகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடத்தில், சிங்கள இராணுவம் போர்க் குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்படும் இடத்தில் சுற்றுலாவை ஊக்கப்படுத்துவது மனிதாபிமானத்துக்கு எதிரான செயல் என்று கண்டித்துள்ளார்.
நந்திக்கடலில் உள்ள அனைத்துக் கடைகளும் விடுதிகளும் இராணுவத்துக்குச் சொந்தமானவை. சுற்றுலாப் பகுதிகள் யாவும் இராணுவ வசமே உள்ளது. இது இராணுவத்தை சுற்றுலாத் துறைக்குள் கொண்டுவரும் முயற்சி என்று வெளிநாட்டு ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

நந்திக்கடல் கடற்கரைக் காயலில் 'மூன்று படுக்கை கொண்ட வசதியோடு 15 ஆயிரம் ரூபாயில் ஓய்வறைகள்’ என்றும் 'பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் விடுமுறையைக் கழிக்க வாருங்கள்’ என்றும் சிங்களப் பத்திரிகைகளில் விளம்பரங்களும் வெளியாகி வருகின்றன.
அதாவது, புலிகளை வென்றதை தனது வீரமாகவும் புலிகள் இருந்த இடத்தை சுற்றுலாத் தளமாகவும் மாற்றிவிட்டது இலங்கை அரசாங்கம்!
கொழும்பில் விக்கிரமபாகு கருணரட்னவைச் சந்தித்தபோது அவர் இந்தக் குற்றச்சாட்டைப் பகிரங்கமாக வைத்தார். ''இன்றைக்கு இந்த அரசாங்​கத்தின் ஒரே இலக்கு, மக்கள் அல்ல. சுற்றுலாவை ஊக்குவிப்பதுதான்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூரத்தை முழுமையாக மறைப்பதற்கு இந்த சுற்றுலா உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். 2009 மே மாதம் போர் முடிந்ததில் இருந்து நான் இதை எழுதி வருகிறேன்.
முள்ளிவாய்க்காலின் கொடூரப் போரில் குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் பேர் செத்திருப்பார்கள் என்பது என்னுடைய கணிப்பு. ஆனால், ஐ.நா-வின் அறிக்கை 40 ஆயிரம் பேர் என்கிறது. நான் சொல்லும் கணக்கு தவறு என்றால், என்னை அரசு கைது செய்து இருக்கலாமே?  என்று கொதித்தார்.
அவர் சொல்வது போல், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் என்பது ஐ.நா-வின் கண்துடைப்புக் கணக்கு. போர் இறுதி நேரத்தில் ஐ.நா. இந்த இடத்தைவிட்டு வெளியேறி விட்டதாகச் சொல்லும்போது எப்படி 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்று எப்படி ஐ.நா-வால் கணக்கிட முடியும்?
ஆக, இது இலங்கை அரசின் கணக்கு. இலங்கை அரசுக்குத் துணையாக உள்ள இந்தியாவின் மதிப்பீடு. இந்தியாவின் முடிவை வைத்தே ஐ.நா-வின் முடிவு அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முள்ளிவாய்க்கால் எங்கும் சிதறிக்கிடக்கும் வாகனங்களைக் கண்டாலே, லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள் என்பது புரியும்.
மலைபோலக் குவிந்து கிடந்த வாகனங்கள். சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், பஸ், வான், லொறி, அம்புலன்ஸ், உழவுயந்திரம் என்று எண்ணிக்​கையே லட்சத்தைத் தொடும். இன்று அத்தனை வாகனங்களும் பழைய இரும்புக்குத்தான் போகிறது. அதையும் வந்த விலைக்கு விற்றுக்கொண்டு இருக்கிறது இராணுவம்.

பனை மரங்கள் எல்லாம் குண்டு மழைத் தாக்குதலில் முறிந்து அழிந்து கிடந்தன. கரை முள்ளிவாய்க்கால், வெள்ள முள்ளிவாய்க்காலின் அகோரங்களைக் கண்டுவிட்டு, மீண்டும் கிளிநொச்சி திரும்பினேன்.
அங்கு செல்லும் வழியில் ஓர் மூத்த ஆண் போராளியைச் சந்தித்தோம். அவர் தனது போர்​ வாழ்க்கை, புனர்வாழ்க்கையைப் பற்றி விபரித்தார்.
புனர்வாழ்வுல ஒன்டுமே பண்ணல ஆமி. நாங்க​ளாகத்தான் எங்களைத் தயார்படுத்திக்கொண்டமே ஒழிய, அவங்களாக எதையும் செய்யவில்லை. நான் இரண்டு ஆண்டு காலம் புனர்வாழ்வுல இருந்தன். எங்களையே தயார்படுத்திக்கொள்ள ஓவியம் தீட்டுவம், கவிதை எழுதுவம், பூந்தோட்டம் செய்வம். பின் எங்களுக்கு என்ன வேல தெரியும் என்று கேட்டு செய்ய வைத்தனர்.
கண்டல் காடு பகுதிக்குக் கூட்டிச்சென்று சில காலம் விவசாயம் செய்ய வைத்தனர். மரணக் குழிக்குள் இருந்து பிழைத்து வந்த எங்களுக்கு அப்போது தேவையாக இருந்தது உளவியல் ரீதியான புனர்வாழ்வு.
ஆனால், அதை ஆமி செய்யலை. மாறாக அவர்களின் வீர தீரச் செயல்களைப் புகழ்ந்தும், 'நாங்க அடிச்சு நீங்க தோல்வி கண்டிங்க’ என்று கேலி செய்தும், அடிமையாக நடத்தும் மனநிலைதான் அவங்களிடம் இருந்தது.  நாங்க உடுப்பு கழுவிக் காயப்போடுவதைக்கூட அவர்கள் விரும்பலை. தினம் ஏதோ ஒரு விதத்துல பிரச்சினை வரும்.
2009-ம் வருஷம் மே 18-தான் எங்களப் பிடிச்சாங்க. 16, 17-ம் தேதி எல்லாம் கடைசி நிலைமைக்கு வந்துட்டோம். அந்த நேரத்துல ஐ.நா-வோ அமெரிக்காவோ உதவி செய்யும்னு எதிர்பார்த்திருந்தம். தமிழ்நாட்டு அழுத்தத்துல இந்தியா நிலைமை மாறும்னுகூட நினச்சம். ஆனா, எதுவும் நடக்கல.
கனரக ஆயிதம் பயன்படுத்த மாட்டோம்’னு ஆமி சொன்ன நேரத்துல பயங்கரமான யுத்தம் நடந்து கொண்டிருக்கு. நாங்க இருந்த பங்கரில் நாலா பக்கமும் செல் அடிச்சுக்கொண்டிருக்கான் ஆமி. செய்தித் தொடர்புகள் சட்டலைட் போன் வழியாக இருந்துகொண்டே இருந்தன.
யார் யார்கிட்ட செய்தி அனுப்பணுமோ அனுப்பிக் கொண்டேயிருந்தது எங்களோட தலைமைப்பீடம். ஆனா எதும் நடக்கல. சனமும் போராளிகளும் கொத்துக் கொத்தா செத்துக்கொண்டுதான் இருந்தனம். எங்களுக்கு வெளியுலகத் தொடர்பு இருந்ததே ஒழிய, உள்ளகத் தொடர்பு முழுமையா துண்டிக்கப்பட்டுருச்சி.
செல் குண்டுகள் மழைபோல் கொட்டிக்கொண்டே இருந்தது. போரின் கடைசி நேரத்துல வரி உடுப்புலாம் (சீருடைகள்) இல்ல. தலைவரோட இருந்தவங்க மட்டும்தான் வரி உடுப்புல இருந்தாங்கள்.
எனக்கு அருகால இருந்த பங்கரில் இசைப் பிரியா இருந்தவள். அவள் எனக்கு நன்கு அறிமுகம். என் மணிக்கூடு பழுதானததால மணிக்கூடு வாங்குவதற்கு அவளிடம் போனேன். 'நீங்க போயிட்டு நாளைக்கு வாங்கள். நான் தேடி எடுத்து வைக்கறன்’ என்றாள்.
நான் அடுத்த நாள் போனபோது, 'மணிக்கூடு கிடக்கலைன்ணா’ என்றுபோட்டு கொஞ்சம் அவுல் பிரட்டி தந்தாள். 'அடுத்து என்ன செய்யப் போறீங்கள். நிலவரம் மோசமாகிட்டு வருது... வாங்க, எல்லோரும் சேர்ந்து போகலாம்’ என்றேன். 'அவர் (இசைப்ரியாவின் கணவர் சிறீராம்... தளபதி) வந்து முடிவு சொல்லும் வரை பாத்திருக்கிறன்’ என்றாள். நான் என் பங்கருக்குள் வந்து விட்டேன்.
இசைப்பிரியாவின் மூன்று மாதக் குழந்தை சுகவீனம் காரணமாக மூன்று மாதத்துக்கு முன் மாத்தளனில் இறந்துபோனது. அவள் அக்காவின் கணவரும் இரண்டு மாதத்துக்கு முன் கிபீர் தாக்குதலில் செத்துட்டார்.
நான் இசைப்பிரியாவைக் கண்டது மே 18 தேதின்னு நினைக்கேன். ஒரு கொட்டிலிடம் பின்னுக்குக் கையை குத்திக்கொண்டு கால் முன் நீட்டிக்கொண்டு கட்டப்பட்டதுபோல் உட்கார்ந்து இருந்தவள். பின், அவளை நான் கண்டது 'சனல் 4’-ல்தான்...'' அதற்கு மேல் அவரால் பேசவே முடியவில்லை.
ஊடறுத்துப் பாயும்...
ஜூனியர் விகடன்

Jan 11, 2013

பூத்தது! புதிய பொதுவுடைமைப் பூ!-பழ. நெடுமாறன்

இராமகிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் தொடக்கம் முதல் என்னை வெறுப்பவர் என்று எனக்குத் தெரியும்; இளம் பிராயத்திலிருந்தே நானும் ஒரு கம்யூனிஸ்டு என்றும், அந்தக் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டவன் என்றும் பலமுறை சொல்லியிருக்கிறேன். இராமகிருஷ்ணனுக்கு உண்மையான கம்யூனிஸ்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது'' என தி.மு.க. தலைவர் கருணாநிதி 3-1-2013 அன்று கூறியுள்ளார்.
எத்தனையோ நாடகங்களில் பலவிதமான வேடங்களில் நடித்த கருணாநிதி, இப்போது "கம்யூனிஸ்டு' வேடம் பூண்டிருப்பதன் பின்னணி என்ன?
""காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசு காலம் கடத்துவதைக் குறித்து, அந்த அரசில் பங்கேற்றிருக்கும் தி.மு.க. தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நிர்பந்தம் செய்யவில்லை. மாறாக மௌனம் காக்கிறது. அனுசரித்துப் போகிறது'' என மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. இராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருந்ததற்குப் பதில் சொல்லும் வகையில் "கம்யூனிஸ்டு வேடத்தை' கருணாநிதி பூண்டிருக்கிறார்.
இராமகிருஷ்ணன் கேட்ட கேள்விக்குப் பதில் இல்லை. மாறாக, வழக்கம் போல பிரச்னையைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதோடு புதிதாக, "செங்கொடித் தோழர்' வேடம் தரித்திருக்கிறார். கருணாநிதி உண்மையில் யார் என்பதும் அவர் எத்தகையவர் என்பதையும் தமிழக மக்கள் அறிவார்கள்.
செஞ்சீனத்தின் தலைவரான மாசேதுங் உண்மையான கம்யூனிஸ்டு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பின்வரும் இலக்கணத்தை வகுத்துள்ளார். "கம்யூனிஸ்டு என்பவர் பரந்த உள்ளம் படைத்தவராக இருக்க வேண்டும். நேர்மையும் ஊக்கமும் உடையவராக விளங்க வேண்டும், புரட்சியின் நலன்களைத் தனது சொந்த உயிர்போல் கருத வேண்டும். தனது சொந்த நலன்களைப் புரட்சியின் நலன்களுக்குக் கீழ்ப்படுத்த வேண்டும். எந்தக் காலத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு கம்யூனிஸ்டு தனது சொந்த நலன்களை முன்னிறுத்தக்கூடாது. அவர் அவற்றை தேசத்தின் நலன்களுக்கும் மக்களின் நலன்களுக்கும் கீழ்ப்பட்டதாக்க வேண்டும். எனவே சுயநலம், வேலையில் அசிரத்தை, ஊழல், புகழ்நாட்டம் முதலியவை எல்லாம் மிகவும் இகழத்தக்கவை. ஆனால் சுயநலமின்மை, தனது முழுச் சக்தியையும் கொண்டு வேலை செய்வது, பொதுக்கடமைக்கு முழுமையான விசுவாசம், அமைதியான கடினமான உழைப்பு முதலியவை அவருக்கு உரியவையாகும்' எனக் கூறியுள்ளார்.
மாசேதுங் வகுத்த இலக்கணத்தின் எந்த அம்சமாவது இந்த "உண்மையான கம்யூனிஸ்டுக்கு' கடுகளவாவது பொருந்தியிருக்கிறதா? கருணாநிதியின் மனசாட்சிதான் இதற்குப் பதில் கூற வேண்டும்.
இந்தியாவின் - ஏன் ஆசியாவின், முதல் கம்யூனிஸ்டான சிங்காரவேலர் செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்திருந்தும் எளிய வாழ்வு வாழ்ந்தார். தனது செல்வத்தையும் உழைப்பையும் மக்களுக்காக அர்ப்பணித்தார். இன்று அவரது குடும்பத்தினரின் நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாது.
அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் கேரள மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தனது சொத்து முழுவதையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி தந்த பணத்தில் வாழ்ந்தார்.
தமிழ்நாட்டில் செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்து லண்டனுக்குச் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் திரும்பிய தமிழகக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கே.டி.கே. தங்கமணி தனது சொத்து முழுவதையும் கட்சிக்கே அளித்தார். கட்சியின் தொண்டராக இறுதிவரை வாழ்ந்து மறைந்தார்.
தமிழ்நாட்டின் மூத்த கம்யூனிஸ்டுத் தலைவர்களான நல்லகண்ணு, சங்கரய்யா, உமாநாத் ஆகியோர் தியாகத் தழும்புகள் பல ஏற்றவர்கள். சிறைக்கொடுமைகளையும் சித்திரவதைகளையும் இன்முகத்துடன் ஏற்றவர்கள். 90 வயதை இவர்கள் எட்டியும் இன்னமும் லட்சிய உறுதி மாறாதவர்களாக, எளிய வாழ்வுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து ஏழை மக்களுக்காகத் தொடர்ந்து தொண்டாற்றுகிறார்கள்.
மேலே கண்ட தலைவர்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டக் காலத்திலும் அதற்குப் பின்னரும் மிகக்கொடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளானவர்கள். சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டவர்கள். எதற்காகவும் அஞ்சி - ஒருபோதும் - தங்கள் கொள்கையைக் கைவிடாத தீரர்கள். இவர்கள் ஆற்றிய தியாகத்திற்கு ஈடு இணை கிடையாது. இரு கம்யூனிஸ்டுக் கட்சிகளிலும் உள்ள தலைவர்களும் தோழர்களும் செய்த தியாகத்திற்கும் சந்தித்த அடக்குமுறைகளுக்கும் ஒப்புவமை கூறத்தக்கவர்கள் வேறு எந்தக் கட்சியிலும் இன்று கிடையாது.
மாசேதுங் வகுத்த கம்யூனிஸ்டு இலக்கணத்திற்கும் இந்தியக் கம்யூனிஸ்டுகள் வாழ்ந்து காட்டும் லட்சிய வாழ்விற்கும் கருணாநிதியின் ஆரவார, ஆடம்பர வாழ்விற்கும் ஏதாவது ஒற்றுமை உண்டா?
கொடிய அடக்குமுறைகளுக்கு உள்ளாக நேர்ந்தபோதிலும் தங்களின் கொள்கைகளைக் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் கைவிட்டதில்லை. ஆனால், "பிரிவினை கேட்பவர்கள் தேர்தலில் போட்டிபோட முடியாது' என்ற சட்டம் வந்தவுடன் "திராவிட நாடு' கோரிக்கையை அடியோடு கைகழுவியவர் கருணாநிதி. இன்றளவும் அதைப்பற்றி வாய்திறக்காதவர்.
"பிரிவினை கேட்பவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள்' என சட்டம் வரவில்லை. "தேர்தலில் போட்டிபோட முடியாது' என்றுதான் சட்டம் கொண்டுவரப்பட்டது. பதவி சுகத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடுமே என்ற பதைப்பினால் அதுவரை "முரசொலித்த' கொள்கையை ஆழக் குழிதோண்டிப் புதைத்தவர் கருணாநிதி.
"அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு' என மேடைதோறும் முழங்கப்பட்ட வீர முழக்கம் காற்றோடு போயிற்று.
தான்தான் உண்மையான கம்யூனிஸ்டு என கம்யூனிஸ்டுகளோடு போட்டிபோடுவதற்குப் பதில் அம்பானி, டாடா, பிர்லா போன்ற பெரு முதலாளிகளுடன் கருணாநிதி தன்னை ஒப்பிடுவதுதான் பொருத்தமானதாகும். பொதுவாழ்வில் ஈடுபட்டு அதற்குப் "பொன்'விழா கொண்டாடிய ஒரே குடும்பம், தலைவர் கருணாநிதியின் குடும்பம். இந்தியாவின் "முதல்ரக' பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகியிருக்கிறது!
சோஷலிஸ்ட் தலைவர்களில் ஒருவரும் மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்தவருமான ஜார்ஜ் பெர்னாண்டûஸ ஆசிரியர் குழுத் தலைவராகக் கொண்டு வெளிவரும் "தி அதர் சைடு' எனும் பத்திரிகை, 2011-ஆம் ஆண்டு ஜூலை இதழில், கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இந்தியாவையே திகைப்புக்குள்ளாக்கிற்று.
"கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தமிழகத்திலும் தென்னிந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துகளின் பட்டியல் இதுவாகும். இது முழுமையான பட்டியல் அல்ல; கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் விவரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை' என்றும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது. இதுவரை இதை கருணாநிதி மறுக்கவில்லை.
5 முறை முதலமைச்சராகப் பதவி வகித்த கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் கம்யூனிஸ்டாக எப்போதாவது நடந்துகொண்டாரா என்ற கேள்வி எழுகிறது.
இந்தப் "புதிய கம்யூனிஸ்ட்' ஆட்சியில்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் துவக்கப்பட்டு, ஏழை விவசாயிகளின் நிலங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு பெரு முதலாளிகளுக்கு வழங்கப்பட்டன. கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமான முதலீடுகள் அன்னிய நிறுவனங்களால் தமிழ்நாட்டில் செய்யப்பட்டன. இவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்பட்டன.
தமிழக அரசின் ஏராளமான சலுகைகளைப் பெற்றுத் தொடங்கப்படும் இத்தொழிற்சாலைகளின் மூலம் கிடைக்கும் ஆதாயத்திலும் தமிழகத்திற்குப் பங்கு இருக்க வேண்டும். சீனா போன்ற பொதுஉடைமை நாடுகளில் அதைத்தான் செய்கிறார்கள். ஆனால் இவர்தான் "உண்மையான கம்யூனிஸ்டாயிற்றே', அப்படியெல்லாம் செய்வாரா என்ன?
காமராஜர் காலத்தில் ஏழை எளிய மாணவர்களும் கல்வியறிவு பெறும்வகையில் கல்வி இலவசமாக்கப்பட்டது. ஆனால் இவர் ஆட்சியில் கல்வி வணிகமயமானது.
"இலவச மருத்துவக் காப்பீடு திட்டம்' பெரும் விளம்பரத்துடன் இவரால் தொடங்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டு மட்டும் இத்திட்டத்தின் மூலம் 415.43 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. "யாருக்கு' என்று சொன்னால் - தனியார் மருத்துவமனைகளுக்கு - அள்ளித் தரப்பட்டது. இந்தப் பணத்தை அரசு மருத்துவமனைகளுக்கு அளித்திருந்தால் அவை மேலும் வசதிகளைப்பெற்று மக்களுக்குத் தொண்டாற்றியிருக்கும். ஆனால் இவர்தான் "உண்மையான கம்யூனிஸ்டாயிற்றே!' அரசு மருத்துவமனைகளை நலிவடையவைத்து தனியார் மருத்துவமனைகளை ஊக்குவித்தார்.
அரசுத் துறையில் இருந்த கனிமங்களை வெட்டியெடுக்கும் உரிமை 1993-ஆம் ஆண்டிலிருந்து தனியாருக்கும் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் விலை உயர்ந்த "கிரானைட்' போன்றவையும் ஆற்று மணலும் தங்கு தடையில்லாமலும் அனுமதி பெறாமலும் தனியாரால் சுரண்டப்படுகின்றன. இதை அரசுத் துறையில் செய்திருந்தால் ஆண்டிற்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் அரசுக்குக் கிடைத்திருக்கும். ஆனால் இவர்தான் "உண்மையான கம்யூனிஸ்டாயிற்றே!' அப்படியெல்லாம் செய்வாரா என்ன?
மின்சாரக் கட்டணத்தில் மீட்டருக்கு அரை பைசா குறைக்க வேண்டும் என்றுதான் விவசாயிகள் போராடினார்கள். ஆனால் 20 விவசாயிகளைச் சுட்டுக்கொன்று பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைச் சிறையில் அடைத்த பெருமை இந்த "உண்மையான கம்யூனிஸ்டுக்கே' உண்டு.
சிம்சன் நிறுவனத் தொழிலாளர்கள் போராட்டம் போன்ற பல தொழிலாளர் போராட்டங்களை அடக்கி ஒடுக்கிய பெருமையும் இந்த "உண்மையான கம்யூனிஸ்டுக்கே' உண்டு.
தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாத கொடுமை இந்த "உண்மையான கம்யூனிஸ்டு' ஆட்சியில் அரங்கேறியது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், அனுமதி பெறாமல் அத்துமீறி நுழைந்து வழக்கறிஞர்களை விரட்டிவிரட்டித் தாக்கியது இவருடைய காவல்படை; நீதிபதிகளும் இத் தாக்குதலிலிருந்து தப்பமுடியவில்லை. தலைமை நீதிபதியின் அனுமதியில்லாமல் உள்ளே புகுந்த காவல் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கும்படி உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் இறுதிவரை மழுப்பிய பெருமை இந்த "உண்மையான கம்யூனிஸ்டுக்கே' உண்டு.
"மோதல் சாவுகள்' என்ற பெயரில், யாரை வேண்டுமானாலும் சுட்டுக்கொல்லும் அதிகாரத்தை இவரது ஆட்சிக்காலத்தில் காவல்துறை பெற்றது. கடந்த முறை இவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ஓராண்டுக் காலத்தில் 12 பேர் மோதல் சாவுகள் மூலமும் 13 பேர் காவல்நிலையச் சாவுகள் மூலமும் கொல்லப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் "சமூக விரோதிகள்' என குற்றம்சாட்டி இந்தக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க இந்த "உண்மையான கம்யூனிஸ்டு' முயன்றார்.
இவர் ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கந்துவட்டி, கட்டைப்பஞ்சாயத்து ஆகியவற்றின் மூலம் ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் தொடர்ந்து ஆட்டிப்படைக்கப்பட்டார்கள். அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம், சமூக விரோதிகள் ஆகிய முத்தரப்பு கூட்டு உருவாகி மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அக்கிரமங்களையும் தங்கு தடையின்றி நடத்தியது.
"வாரிசு அரசியல்', "குடும்ப அரசியல்' என்பவை கம்யூனிஸ்டுகளின் அகராதியிலேயே கிடையாது. ஆனால் இந்த "உண்மையான கம்யூனிஸ்டு' அவற்றையே அப்படியே பின்பற்றுபவர்.
""நூறு பூக்கள் பூக்கட்டும், நூறு கருத்துகள் மோதட்டும்'' என்றார் மாசேதுங். நூற்றியோராவது பொதுவுடைமைப் பூவாகப் பூத்திருக்கிறார் கருணாநிதி!


Jan 9, 2013

புலித்தடம் தேடி...மகா. தமிழ் பிரபாகரன் - பாகம் 05

புலித்தடம் தேடி...மகா. தமிழ் பிரபாகரன் - பாகம் 05
சூன்யப் பிரதேசமாகக் காட்சி அளிக்கிறது முல்லைத் தீவு. அகோரங்கள் நடந்து முடிந்து அதற்கான ஆதாரங்களோடு உலகத்​திடம், 'நீதி கொடு’ என்று கெஞ்சிக் கிடக்கும் முள்ளிவாய்க்கால், இன்று வாழ்வாதரத்துக்கான போரில் தவிக்கிறது.
கொடூரப் போர் நடந்ததற்கான சாட்சியங்களை இன்றும் சாலையின் இருமருங்கிலும் தலை இழந்து நிற்கும் பனை மரங்கள் மூலமாகவும் குண்டுகளால் சிதைக்கப்பட்டுக் கிடக்கும் வீடுகள் மூலமாகவும் பார்க்க முடிகிறது.
ஏ 35 நெடுஞ்சாலையின் வழியில் முல்லைத் தீவுக்குப் பயணிக்கிறேன். எத்தனை பிணங்கள் கிடந்த வீதி, எவ்வளவு உயிர்கள் துடிதுடித்த பாதை என இரத்த நினைவுகள் மனத்திரையில் ஓடியது. அந்த இடத்தில் எவர் நடந்தாலும் அவர்கள் தங்களது சுயத்தையே சில நிமிடங்கள் இழக்க வேண்டி இருக்கும்.
வந்தடைந்தது முல்லைத்தீவு பேருந்து நிலையம். அங்குதான் சாலை ஓரத்தில் நான்கு பேருந்துகள் நின்றுகொண்டு இருந்தன.
'சேற்றில் உள்ள அந்தச் சாலை ஓரம்தான் பேருந்து நிலையம்’ என்றார் உடன் வந்திருந்த நண்பர். அவர் ஒரு தொண்டு நிறுவன ஊழியர்.
கருநாட்டுக் கேணி என்ற பகுதிக்குச் செல்லத் தீர்மானித்து இருந்தோம். அங்கு செல்வதற்கான பேருந்து இன்னும் ஒரு மணி நேரம் கழித்துதான் வரும் என்றனர்.
செம்மலை, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் என அந்த வழியே உள்ள கிராமங்களுக்குச் செல்ல பொதுமக்களும் நிறையவே காத்திருந்தனர். பேருந்து வருவதற்குள் அந்த வட்டாரத்தில் உள்ள பகுதிகளைச் சுற்றி வந்தோம்.
ஓர் கடையில் பாதுகாப்புப் படை எச்சரிக்கைப் பிரதி ஒன்று இருந்தது.
அதில், 'ஆயுதம் வைத்திருப்பது சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டு உள்ளது. ஒருவேளை உங்களிடம் ஆயுதம் உள்ளது என்று அறியப்பட்டால், பிணையில் வராத தடுப்பில் நீங்கள் வைக்கப்படுவீர்கள். அதனால் உங்கள் குடும்பம், குழந்தைகள் வாழ வழியின்றித் தவிக்கும் நிலை ஏற்படும். ஆயுதம் வைத்திருப்பவர்களைக் காட்டிக் கொடுத்தால் பரிசு தரப்படும்’ என்று எழுதப்பட்டு இருந்தது. ஒவ்வொரு ஆயுதங்களுக்குமான பரிசுத் தொகையும் வகைப்படுத்தப்பட்டு இருந்தது.
அதில், கைக்குண்டுக்கு 2,000 ரூபாய், கைத்துப்பாக்கி, கிளோமோர் ரகக் கண்ணிவெடி, கவச எதிர்ப்புக் கண்ணிவெடிக்கு 5,000.... ரி56 ரகத் துப்பாக்கி, ஆர்.பி.ஜி. உந்துகணை செலுத்திக்கு 10 ஆயிரம்... கனரகத் துப்பாக்கிக்கு 15 ஆயிரம் ரூபாய் பரிசு... என்று பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.
புலிகள் மிகப்பெரிய இராணுவக் கட்டமைப்பை வைத்​திருந்த இடம் அது. அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களில் குறைந்த அளவே இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. மீதி எங்கே போயின என்பதே தெரியவில்லை. எனவே, பொதுமக்கள் மூலமாக அதைக் கண்டுபிடிக்கும் விதமாக இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.
அரசு, இராணுவக் கட்டடங்களைத் தவிர, மற்றவை எல்லாம் அழுக்காகவும், பாழடைந்தும் கிடந்தன. கழிவறைகள் எங்கும் இல்லை. மருத்துவ வசதி மோசமான நிலைமையில் இருந்தது. பள்ளிகள் இடிந்து கிடக்கின்றன. அவை இருந்ததற்கான சுவடு மட்டுமே இருக்கிறது. வளர்ச்சிப் பணிகள் அறிவிப்புகளில் மட்டுமே அனைத்து இடங்களிலும் உள்ளன.
மிதிவண்டி, பைக், டிராக்டர் என்று எல்லா வாகனங்களிலும் எல்லாவிதமாகவும் இராணு​வம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. பேருந்துக்கு நேரமாகவே, கிளம்பினோம்.
நாயாற்றுப் பாலத்தை கடந்தது பேருந்து. அங்கு இருந்து பார்க்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கண்ணுக்குத் தட்டுப்பட்டது. 'அது புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல்’ என்றார் நண்பர். ''அந்தக் கடலோரப் பகுதி இப்போது உயர் பாதுகாப்பு வளையமாக உள்ளது. இந்த நாயாற்றுப் பாலம்தான் முன்பு புலிகள் எல்லைப் பகுதியாக விளங்கியது.
இந்த வழியில் தனியார் வேன்களில் செல்வது ஆபத்து. ஏனெனில், நாம் இப்போது செல்வது சுற்றுலாப் பகுதி அல்ல. 27 ஆண்டுகளாக இராணுவத்தின் கையில் உள்ள பகுதி. 'கெமுனு வாட்ச்’, 'சிறப்புப் படைப் பிரிவு’ என ஆறு இராணுவ முகாம்கள் இந்த வழியே உள்ளது'' என்றார் அவர்.
புதர்கள் மண்டிய பகுதிகளின் உள்ளே முள்வேலிக் கம்பிகளோடு முகாம்கள் தெரிந்தன. 'அதுதான் மணலாற்றுக் காடு’ என்றார் நண்பர்.
பிரபாகரன் முதன் முதலில் கால் ஊன்றிய காடு இது. 1986-ம் ஆண்டில் பிரபாகரனுக்கும் இந்தியப் படைக்கும் கடுமையான சண்டை நடந்தது இந்தக் காட்டில்தான்.
கொக்குத்தொடுவாய் தொடங்கி குண்டும்குழியுமான மண் சாலைகள், ஜல்லி கொட்டப்பட்ட சாலைகள் என்று போக்கு​வரத்துக்கே சிரமமான சாலைகளாக இருந்தன. மழைக் காலங்களில் இந்த ஊருக்கும் முல்லைத்தீவுக்குமான சாலை இணைப்பு தண்ணீரால் துண்டிக்கப்பட்டு விடுமாம்.
சுந்தரம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை பயண வழியில் தற்செயலாகச் சந்தித்தேன். ''துரோகி இல்லாத காலமே கிடையாது. சனத்துல நூத்துக்கு அம்பது சதம் உயிருங்க துரோகத்தால போனதுதான்.
சிங்களவன்கூட ஒரு நாளும் கதைச்சு வெல்ல இயலாதய்யா. அவன் எல்லாமே தெரிஞ்சுதான் கொல்றான். இந்த நாட்டுல காட்டிக்கொடுத்தா நல்லா வாழலாம்'' என்றவர், தன் அருகில் இருந்த பெண்ணைக் காட்டினார்.

''அவக புருசன், மகன் ரெண்டு பேரையுமே யுத்தத்துல பறிகொடுத்துட்டாங்க. இப்ப அவளுக்கு இந்தியா வீடு கிஃப்ட் தந்திருக்கு. இவ புருசனையும் மகனையும் கொன்னதுக்கு கிஃப்ட்டா? எனக்கு இந்திய அமைதிப் படை கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?'' என்று முகத்தில் உள்ள வெட்டையும் உடைந்த காலையும் காட்டினார்.
''இந்தியன் ஆமி ஊர் ஊரா புகுந்து எங்க கிராமங்களை அழிச்​சதய்யா. அவர்களுக்கு என்ன பாவம் செய்தது எங்கட சனம்? இந்தியன் ஆமியில் குர்காஸ் மாறி முக அமைப்புல இருந்தவங்க சுட மாட்டாங்க. துவக்கத் (துப்பாக்கி) திருப்பி முகத்துலே இடிப்பாங்க. அதில் வெட்டுப்பட்டு வலி உயிர் போகும். அப்படித் துவக்குல அடிச்சுதான் என் கால் உடைஞ்சது.
அதுக்கப்பறம் தமிழ்நாட்டு முகாமில் அகதி வாழ்வு வாழ்ந்தேன். எங்கட வாழ்வு இத்தன நாள் ஆயுத யுத்தத்துல இருந்துச்சி. இப்போ அமைதி யுத்தம் நடக்குது. உரிமையைக் கொடுக்காம புலி பேரச் சொல்லியே எங்கள ஒடுக்குது ஆமி.
ஒண்ணு சொல்றனய்யா... நான் புலி இல்ல... ஆனா, பிரபாகரன் இருக்காரோ இல்லையோ... அவர் இல்லைனாலும் எங்கட இனத்துல இருந்து ஒருத்தன் எழுவான். எங்களுக்குத் தேவையான நிம்மதியை அவன் கொடுப்பான்’ என்று கொந்தளித்தார்.
கருநாட்டுக்​கேணி நெருங்கியது. விடைபெறும்போது கையை பிடித்தவர், ''இங்க சுயமரியாதையோட பேசுனாவே அவனுக்கு புலிப் பட்டம்தான் தம்பி. கொடுக்காத நிவாரணப் பொருளக்கூட நாங்க கேட்டு வாங்க முடியல. ஊமப் பொம்மயாதான் இங்க வாழறம். உசுரு மட்டும் இருக்கு. போய் வாருங்கள் தம்பி'' என்று கையை இறுக்கமாகப் பிடித்தபடி நின்றார். சொன்னது அனைத்தும் கனத்தது.
காடுபோல கிடந்த இடத்தில் ஆங்காங்கே சிறிய சிறிய கொட்டாய்கள். தொண்டு நிறுவனங்கள் நிதி வழங்கியதற்கான அறிவிப்புப் பலகைகள். ஆனால், அதில் போடப்பட்டு இருந்த தொகைக்கும் அங்குள்ள வளர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை.
27 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதி அது. அப்படி குடியேற்றப்பட்ட லிங்கம் என்பவரைச் சந்தித்தேன். ''நான் இந்த ஊர விட்டுப் போகையில எனக்கு 15 வயசு. 42 வயசுல மீண்டும் எங்கட மண்ணுக்குத் திரும்பி இருக்கேன். விவசாயம் எல்லாம் அழிஞ்சிருச்சி. வீடுனா அது பனங் கொட்டாய்தான். ராவுல தூங்க முடியாது. அந்த அளவுக்கு பாம்பு மேயுது. பாம்பு கடிச்சாக்கூட மருத்துவம் பாக்க வழியில்ல.
எங்க காணியோட உரிமப் பத்திரம் எதும் இல்ல. அரசாங்கத்திட்ட கேட்டா, பதில் இல்ல. எங்கட நில உரிமப் பத்திரத்த எல்லாம் அரசு அழிச்சிருச்சி. முல்லைத்தீவு மாவட்டத்தோட இருந்த எங்க பகுதியப் பிரிச்சு 'வெலியோயா’னு ஒரு மாவட்டத்தை உருவாக்கினாங்க. நிலப் பத்திரங்களை எல்லாம் எடுத்து அழிச்சிட்டு உருவாக்கின மாவட்டத்தை அப்படியே மறுபடியும் முல்லைத்தீவோட சேத்துட்டாங்க. எங்க காணிக்கான உரிமம் எதும் இப்ப எங்ககிட்ட இல்ல. எங்க வயத்துக்கே தினம் அல்லாடறம்'' என்று வெதும்பினார்.
இவரைப்போலவே இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ''முல்லைத்தீவு- திரிகோணமலை சாலையை இணைக்கும் பாலத்தை முகத்துவாரத்தில் இந்தியா கட்டுது. ஆனால் வயிற்றுக்கு இல்லாமல் காயற எங்களை எந்த நாடு கண்டுக்குது?'' என்று நொந்தார் இன்னொருவர்.
அப்போது மணி மதியம் இரண்டு. இங்கு சாப்பாட்டுக் கடை எதுவும் இல்லை. 'ஒரு கி.மீ. நடந்து சென்றால் ஒரு டீ தண்ணிக் கடை இருக்கிறது’ என்று சொன்னார்கள். நடக்க ஆரம்பித்தோம். வெயில் கொளுத்தியது. வெட்டவெளியாய் பார்க்கும் தூரத்தில் கடலும் குளங்களும் இருந்தன. மின்சார வசதி எங்குமே இல்லை. டீக்கடை வர, 'டீத்தூள் தீந்துடுச்சு’ என்று ஒரு சிறுவன் சொன்னான். காய்ந்துபோன பன் மட்டும் இருந்தது. அந்த வட்டாரத்து மக்களுக்கு இருக்கும் ஒரே கடை இதுதான்.
'இனி முல்லைத் தீவுக்கு பேருந்து இல்ல’ என்று சொன்னார்கள். சிறிது நேரத்தில் ஒரு டிராக்டர் வந்தது. அதில் ஏறிக்கொண்டோம். 'இந்திய அரசாங்கம் அன்பளிப்பாக கொடுத்த டிராக்டர் இது’ என்றார்கள். அதில் ஏற்கெனவே ஒருவர் உட்கார்ந்து இருந்தார். தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று சொன்னதும் அவர் பேசினார். தன்னுடைய ஊர் கொக்கிளாய் என்று அவர் சொன்னார்.

''1984ம் வருஷத்துல நாங்க இடம்பெயர்ந்து போனோம். அதன்பிறகு, சிங்களக் குடும்பங்கள் சில வந்து எங்க இடத்துல குடியேறியது. 10 வருஷம் இருந்தா ஒருவருக்கு அந்த இடம் சொந்தம் என்ற விதிப்படி 'இப்ப உங்க நிலம் அவங்களுக்கு சொந்தம்’னு சொல்றாங்க.
எங்க மீன் வளம் தொடங்கி எல்லா வளங்களையும் சிங்களர்கள் எடுத்து அனுபவிக்கிறாங்க. இந்த வளங்களோட ஒட்டுமொத்த லாபமும் சிங்கள முதலாளிகளுக்குத்தான் போய்ச் சேருது.
இன்னைக்கு 300 சிங்களக் குடும்பம் கொக்கிளாய்ல இருக்கு. அங்க ஆய்வுக்கு வந்த அரசு அதிகாரிகளும் எங்க நிலத்தை அவங்களுக்குத் தர்றதா உறுதியளிச்சிட்டுப் போறாங்க.
எங்க நிலத்தை விட்டுப்போட்டு நாங்க கூலி வேலைக்குப் போறம். சிங்களப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் கான்கிரீட் கட்டடம். ஆனா, எங்க பிள்ளைங்க படிக்கக் கூர கொட்டாய். இதுதான் இப்போதைய நிலைமை. இந்தக் கூரையாவது கிடைச்சதேனு நிம்மதிப்பட்டுக் கிடக்கோம்'' என்றார்.கொக்கிளாயில் இருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் நிலைமை இதுதான்!முல்லைத்தீவை வந்தடையும்போது, மாலை 6 மணி ஆகிவிட்டது. இன்னும் கொஞ்சம் தாமதித்தால், அதன் பிறகு பேருந்து சேவை கிடையாது என்றனர். அங்கே தங்கும் வசதியும் கிடையாது. உடனடியாக கிளிநொச்சி கிளம்பினோம்.
ஊடறுத்துப் பாயும்.....
ஜூனியர் விகடன்

Jan 8, 2013

பாராளுமன்றதேர்தலில் அ.தி.மு.க. 40தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற பாடுபடவேண்டும்- நாஞ்சில்சம்பத்

டெல்லி செங்கோட்டையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக கொடி ஏற்ற பாராளுமன்றதேர்தலில் அ.தி.மு.க. 40தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற நாம் அனைவரும் பாடுபடவேண்டும் என்று ராமநாதபுரத்தில் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில்சம்பத் பேசினார். 
ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க சார்பில் அரசின் நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனையை விளக்கியும், தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும் கருணாநிதியின் கபட நாடகத்தை அம்பலபடுத்தியும் ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கே.சி.ஆணிமுத்து தலைமையில் நடைபெற்றது. கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் அங்குச்சாமி வரவேற்று பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் கழக கொள்கைபரப்பு துணை செயலாளர் நாஞ்சில்சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது:- வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாமல் கடந்த 19 ஆண்டுகள் செயல்பட்ட இயக்கத்திலிருந்து அ.தி.மு.க.வில் இணைவேன் என்று நான் கனவில் கூட நினைத்தது கிடையாது. அந்த இயக்கத்தில் வாழ்க்கையின் வசந்தத்தை பார்க்காமல் வறுமையில் வாடி, அடக்கு முறைக்கு உள்ளாகி அங்கு இருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு 67நாட்கள் முடிவெடுக்க முடியாமல் பாம்பின் வாயில் மாட்டிக்கொண்ட தேரையைப்போல் திண்டாடினேன். அதன்பின்னர் தான் தேனும் கெடாது தன்னை சார்ந்தவர்களையும் கெடவிடாது என்று உள்ள அ.தி.மு.க.வில் சேர முடிவு செய்தேன். முதலமைச்சர் என்னை கழகத்தில் இணைத்து எனக்கு பதவி கொடுத்து அழகுபார்த்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் 40தொகுதிகளிலும் முதலமைச்சர் வெற்றி பெற வேண்டும் என்பதை எனது லட்சியமாக கொண்டு மாவட்டந்தோறும் கிளம்பிவிட்டேன். நான் எத்தனையோ மேடைகளில் பேசியிருந்தாலும் இந்த இயக்கத்தில் சேர்ந்த பிறகு தான் அரசனுக்குரிய கம்பீரத்துடன் மேடையில் ஏற்றப்பட்டுள்ளேன். இன்று நாடெல்லாம் அதிகம் என்ன எதிர்பார்க்கிறது. இந்தியாவின் அடுத்த பிரதமர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் என்ற வார்த்தைதான் நாட்டில் அதிகம் கேட்கிறது. டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி மன்ற கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து பேச வாய்ப்பளிக்காமல் மணி அடித்தவர்களுக்கு சாவு மணி அடிக்கும் நாள் நெருங்கி விட்டது. காலம் மாறும், இந்திய அரசியலின் தட்பவெட்பம் மாறும். மணி அடிக்கும் இடத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா நிச்சயம் இருப்பார். மத்தியில் உணர்ச்சியற்ற பிரதமரை வைத்துக்கொண்டு தமிழர்களின் உரிமை போராட்டத்தை நாம் நடத்தி கொண்டு இருக்கிறோம். தமிழகத்தினை மின்மிகை மாநிலமாக முதல்அமைச்சர் ஜெயலலிதா வைத்திருந்தார். ஆனால், தேவை கருதி மின்திட்டங்களை செயல்படுத்தாமல் தமிழகத்தை மின்தேவை மாநிலமாக மாற்றியவர் கருணாநிதி. கருணாநிதியால் தமிழக மின்வாரியம் திவாலாகிவிட்டது. அந்த நிலையை முதலமைச்சர் ஜெயலலிதா மாற்றி வருகிறார். கடந்த 5ஆண்டு கால கருணாநிதி ஆட்சியில் வெறும் 206 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்துள்ளார். இதனால் மின்தேவை அதிகமாகிவிட்டது. தற்போது மின்தடைக்காக கருணாநிதி பொதுக்குழு கூட்டம் போடுகிறார். டெல்லியில் உபரியாக உள்ள மின்சாரத்தை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று மத்தியில் அங்கம் வகிக்கும் கருணாநிதி ஒரு தீர்மானம் போட்டாரா?. பிரதமருக்கு நமது கோரிக்கைக்காக கடிதம் எழுதுவது செத்தவனுக்கு முன் தாரைதப்பட்டை வாசிப்பது போல ஆகும். இதனால் முதலமைச்சர் யாரையும் எதிர்பார்க்காமல் உச்சநீதிமன்றத்தை அணுகி மின்சாரத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மின்சாரம் வழங்க மின்பாதை இல்லை என்று கூறிஉள்ளனர். அதிகாரிகளுடன் ஆய்வு செய்து மின்பாதை உள்ளது என்று முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தமிழகத்திற்கு மின்சாரம் வழங்காத பிரதமர் பாகிஸ்தானுக்கு 5ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்குகிறார். காவிரி தண்ணீர் இல்லாமல் இன்று தஞ்சை பகுதி வறண்டு போய்விட்டது. தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் கோர்ட்டு உத்தரவை ஏற்று சந்தித்தார். ஆனால், கர்நாடக முதல்வர் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட தரமுடியாது என்று மறுத்துவிட்டார். இதனால் மீண்டும் கோர்ட்டு உதவியை முதலமைச்சர் நாடி உள்ளார். காவிரி தாய் தமிழகத்தில் கால் வைக்க காவிய தாயால் மட்டுமே முடியும். ஆனால் கருணாநிதி என்ன செய்தார். அவருக்கு வரும் தேர்தலில் 40தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்காக குடிகாரனாக இருந்தாலும் கூட்டணி வைக்க தயார் என்ற நிலையில் உள்ளார். முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்தபோது அதை கருனாநிதி அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது என்று கேரள முதல்வர் அறிவித்தார். அப்போது மட்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தால் அப்படி சொல்ல விட்டிருப்பாரா?. தமிழக சட்டமன்றத்தில் முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர முடியாது என்று நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீாமானத்தை ஆதரிக்க கருணாநிதி முன்வரவில்லை. பொறுப்புமிக்க எதிர்க்கட்சி தலைவரும் முன்வரவில்லை. பாராளுமன்ற தேர்தல் மேகங்கள் திரண்டு வருகின்றன. காங்கிரஸ்-பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்று தீர்க்கமாக முதலமைச்சர் அறிவித்துவிட்டார். காங்கிரஸ் தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் ஆதரவாக இருந்தது இல்லை என்பதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார். இத்தாலி கப்பல் துப்பாக்கி சூடு நடத்தி இருவர் பலியான சம்பவத்தில் ரூ.3கோடி நஷட்டு பெற்று இத்தாலியர்களை கைது செய்தது மத்திய அரசு. இதற்கு பின்பலமாக மத்திய ராணுவ மந்திரி அந்தோணி இருந்தார். ஆனால், தமிழக மத்திய மந்திரிகள் இந்த மக்களுக்காக என்ன செய்தார்கள். இந்திய கப்பல் ரோந்து வரும் என்று மத்திய மந்திரி வாசன் அறிவித்தால் சிங்களபடை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த அருகில் வருவார்களா?. அழகிரியின் அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குடும்ப அரசியல் நடத்தினால் இந்த நிலைதான் வரும். கருணாநிதி மீண்டும் வந்திருந்தால் தமிழகத்தில் மேல்சபை கொண்டு வந்திருப்பார். அவர் தேர்தலில் ஜெயித்திருந்தால் ராஜாத்தி மேல்சபை தலைவராகி இருப்பார். நல்லவேலை கருணாநிதி தேர்தலில் வெற்றி பெறவில்லை. முதல்அமைச்சர் ஜெயலலிதா அந்த மேல்சபை தீர்மானத்தை ரத்து செய்து விட்டார். இலங்கையில் நான்காம் தமிழ் ்ழப்போர் நடத்த காரணமாக இருந்தவர் சோனியா. ஆதற்கு ஆதரவாக இருந்தவர் கருணாநிதி. ஆனால், மக்களை ஏமாற்ற டெசோ மாநாடு நடத்துகிறார்.  சாமானியர்களையும் அரியணையில் அமரவைத்து அழகு பார்க்கும் அ.தி.மு.க.வை போல சோஷலிச கட்சி இந்தியாவில் எதுவும் இல்லை. இந்திய அரசியலில் ஆண்மை உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க. தான். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஆபத்து ஆகும். தற்போது இந்தியாவின் தலைவிதியினை, தட்ப வெட்ப நிலையை மாற்றும் சூழ்நிலை வந்து விட்டது. கேட்கும் இடத்தில் இருந்து நாம் கொடுக்கும் இடத்திற்கு வரவேண்டும். யார் அந்த இடத்தில் இருந்தால்; தமிழகத்திற்கு பலன் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். அதற்கான காலம் கனிந்துவிட்டது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றும் நிலை வரவேண்டும். இதற்கு பாராளுமன்ற தேர்தலில் 40தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறவேண்டும். இந்த வெற்றிக்காக நாம் அனைவரும் அயராது பாடுபட்டு வெற்றிகனியை சமர்ப்பிக்கவேண்டும்.  இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், மாவட்ட துணைசெயலாளர் முனியசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா சசிக்குமார், முன்னாள் நகர் செயலாளர் கே.சி.வரதன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சேதுபாலசிங்கம், ஒன்றிய செயலாளர்கள் மண்டபம் தங்கமரைக்காயர், ராமநாதபுரம் அசோக்குமார், திருப்புல்லாணி முனியாண்டி, ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்த், போகலூர் நாகநாதன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி, மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் முனியம்மாள் முனியசாமி,  மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் மருதுபாண்டியன், பட்டணம்காத்தான் ஊராட்சி மன்ற தலைவர் சித்ராமருது, சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நூர்முகம்மது, பாசறை செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன்,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 7, 2013

ஜெயலலிதா பிரதமராவது காலத்தின் கட்டாயம் - நாஞ்சில் சம்பத்

அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் கொள்ளை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதாவின் 100 ஆண்டுகள் பேசும் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டதில் பேசுவதில் மிகுந்த பெருமை அடைகிறேன். தமிழகத்தில் பாசிச, கொடுங்கோல், இருண்ட ஆட்சி நடத்தி வந்த கருணாநிதியை எதிர்த்து மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.கவை தொடங்கினார். அவரது வழியில் இன்று ஜெயலலிதா மக்களுக்கான நல்லாட்சி நடத்துகிறார். திறமையிருப்பவர்களுக்கு அ.தி.மு.க. வில் பதவி கிடைக்கும் என்பதற்கு, நானே முன்உதாரணம். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை பேசுவதற்காக டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதாவை 10 நிமிடங்கள் மட்டுமே பேசிய நிலையில், மணி அடித்து உ்ட்கார சொல்லி அவமானப்படுத்தி விட்டனர். ஏழு கோடி மக்களின் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசின் அநாகரீகமாக செயலை கண்டித்து முதல்வர் அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி விட்டார். தொடர்ந்து தமிழகம் புறக்கணிக்கப்படுவதை எடுத்துரைக்க முதல்வர் டில்லிக்கு சென்றார். அவரை அவமானப்படுத்த மத்திய அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? முதல்வரை திட்டமிட்டு அவமானப்படுத்தி உள்ளனர். பட்டி மன்றத்தில் பேசுபவர்களுக்கே 30 நிமிடங்கள் ஒதுக்குகின்றனர். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை பேச வெறும் 10 நிமிடங்களை டில்லி ஒதுக்குகிறது. இது எந்த விதத்தில் நியாயம். தமிழக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச, உயர் அதிகாரிகள், கலெக்டர்கள் மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா 3 நாட்கள் கூட்டி விவாதித்தார். முடிவில் 343 மக்கள் நலத்திட்டங்களை அறிவித்தார். 234 தொகுதி மக்களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்கு 3 நாட்கள் மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா நடத்துகிறார். ஆனால் டில்லி ஏகாதிபத்தியமோ, 30 மாநில மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு ஒரு நாள் கூட்டம் நடத்துகிறது. டில்லியின் காலடியில் நாம் இருக்கிறோம் என டில்லி நம்மை ஏறி மிதிக்கிறது. இதை கருணாநிதி போன்றவர்கள் சகித்துக் கொள்ளலாம். ஆனால், நாம் எப்படி சகித்துக் கொள்வது. முன்பு அண்ணா கூறினார், மாநிலங்கள் மாநிலங்களாகவே இருக்கின்றன. முதல்வர் என்ற சூழ்நிலை கைதியாக உள்ளேன். மாநில சுயாட்சி வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். அவரது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது அ.தி.மு.க. ஆனால், மின் வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, கருணாநிதி தி.மு.க. செயற்குழுவை கூட்டுவதாக அறிவிக்கிறார். செத்துக் கிடக்கும் தி.மு.க. விற்கு உயிர் கொடுக்க ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நாடகம் ஆடுகிறார். 2001-2006 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியின் முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆட்கிக்காலத்தில் தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்ந்தது. மொத்த மின் தேவை 10 ஆயிரம் மெகாவாட் மட்டுமே. ஆனால் மின் உற்பத்தி 10 ஆயிரத்து 500 மெகாவாட். உபரியாக இருந்த 500 மெகாவாட் மின்சாரத்தை ஜார்கண்ட் மாநிலத்திற்கு விற்பனை செய்து அரசு கஜானாவிற்கு வருவாய் சேர்த்தவர் ஜெயலலிதா.
ஆனால் அடுத்த வந்த கருணாநிதி, தமிழகத்தை சின்னாபின்னமாக்கி விட்டார். தற்போதைய தமிழகத்தின் மொத்த மின் தேவைக்கும் மொத்த பற்றாக்குறைக்கும் உள்ள இடைவெளி நான்காயிரம் மெகாவாட் ஆகும். தமிழகத்தில் உற்பத்தி ஆகும் மொத்த மின்சாரத்தையும் தமிழகத்திற்கே கொடுத்தால் மின் தேவை பூர்த்தியாகிவிடும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதா கொண்வந்த மின் உற்பத்தி திட்டத்தை, அடுத்த வந்த கருணாநிதி நிறைவேற்றியிருந்தால், தற்போது தமிழகத்தில் மின் வெட்டு அறவே இருக்காது.
அதுமட்டுமின்றி அப்போதைய முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில், கொடர் மின் இழப்புகளாக ரூ. 50 ஆயிரம் கோடியும், அனைத்து வங்கிகளிலும் 50 ஆயிரம் கோடி மின்துறைக்கு கடன், தனியார் நிறுவனங்கள்மூலம் 11 ஆயிரம் கோடி கடன், ஆக மொத்தம் ரூ. 1.6 லட்சசம் கோடி கடனில் மின்வாரியத்தை கடனாக்கியவர் கருணாநிதி.
அதன்பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா, துருப்பிடித்திருந்த மின்வாரியத்திற்கு நிதி ஒதுக்கீடு செசய்து, உயிர்ப்பித்தார். முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றபின்னர், தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் பற்றாக்குறையை அறவே நீக்கும் வகையில், போர்க்கால அடிப்படையில், உப்பூரில் 2 ஆயிரம் மெகாவாட், உடன்குடியில், 800 மெகாவாட், எண்ணூரில் 600 மெகாவாட், வடசென்னையில் 800 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க உத்தரவிட்டு, நிதியும் ஓதுக்கீடு செய்தார். அங்கு பணிகள் துரிதமாக நடக்கிறது.
தமிழகத்தில் மே மாதத்திற்குள் மின்வெட்டு அறவே நீக்கப்பட்டு, மின் மிகை மாநிலமாக திகழும். இதுதவிர வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் விலைக்கு வாங்க நடவடிக்கைகளையும் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ளார். இதற்கான புரிந்துணர்வு ஓப்பந்தமும் போடப்பட்டு விட்டது. இதுமட்டுமின்றி, பரமக்குடியில், ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து, ரூ. 920 கோடியில், சூரியசக்தி மின்சாரம், ஆண்டுக்கு ஆயிரம் மெகாவாட் தயாரிக்க நிதி ஓதுக்கீடு செய்து, திட்டம் விரைவில் செயல்பட உள்ளது.
டில்லி அரசு திரும்ப ஒப்படைத்த உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு கொடுக்க மறுக்கிறது டில்லி ஆட்சி. பல முறை மத்திய அரசுக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியும் அதற்கான பதில்கூட இல்லை. இதானால், முதல்வர் நீதி மன்றத்தை நாடினார். நீதிமன்றம், தேசிய மின்வாரியத்திடம், தமிழகத்திற்கு உபரி மின்சாரம் தரமுடியுமா? முடியாதா? எட்டு நாளில் பதில் தரவேண்டும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தமிழகத்திற்கு உபரி மின்சாரம் கொண்டு செல்ல கேரிடர் வசதி இல்லை. என்றது மின்வாரியம். ஆனால், இந்தியாமீது பகையை கக்கும் பாக்கிஸ்தானுக்கு 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை, மத்திய அரசு கொடுக்கிறது.
மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் தி.மு.க, தலைவர் கருணாநிதி, உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு கொடுக்குமாறு கேட்டாரா? கருணாநிதி கேட்டால், பிரதமர், சோனியாகாந்தி மறுப்பார்களா? அல்லது இதற்காக செயற்குழுவில்தான் கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றினாரா ? , அ.தி.மு.க., ஆட்சிக்கு சரிவை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அதுமட்டுமின்றி காவேரி பிரச்னையில், தமிழக மக்களுக்கு துரோகம் செய்தவர்தான் கருணாநிதி. இந்திராகாந்தி பிரதமராவதற்கு, தமிழகத்தில் ஒரு கைக்கூலியை தேடினார். அதில் கருணாநிதி வீழ்ந்தார். சர்க்காரியா கமிஷன் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து விடுபடுவதற்காக, இந்திராகாந்தியின் கட்டளையை ஏற்று, காவிரி பிரச்சினை வழக்கை மீண்டும் தமிழக அரசு தொடராமல் மவுனம் காத்தார். அப்படி வழக்கு தொடர்ந்திருந்தால், தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு 1974 ல் கிடைத்திருக்கும். தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தும் தனது சுயநலத்திற்காக, தமிழகத்தின் வாழ்வாதார உரிமையை கருணாநிதி தான் வழக்கில் இருந்து விடுபட விட்டுக் கொடுத்தார்.
காவிரி பிரச்சினையில், நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது எம்.ஜி.ஆர்.தான். அவரை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்சினைக்காக கர்நாடகா சென்று, முதல்வர் ஷெட்டருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஆனால் ஷெட்டரோ காவிரியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட தரமுடியாது என ஆணவமாக பதில் கூறினார். மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடினார் முதல்வர் ஜெயலலிதா. காவிரி தண்ணீர் பிரச்சனையில் இவ்வளவு கஷ்டத்திற்கும் யார் காரணம். கருணாநிதி தானே.
பதவிமீது கருணாநிதிக்கு அவ்வளவு மோகம். சாகும் வரை கட்சி தலைவர் பதவி மற்றவர்களுக்கு இல்லை என சூசகமாக சமீபத்தில் கருணாநிதி கூறியுள்ளார். அவருக்குப்பின் கட்சி பதவிக்காக மகன்கள் அடித்துக் கொள்ளப் போகின்றனர். கருணாநிதிக்கு சுயநலம் மட்டுமே முக்கியம். தன்னை காக்க யாரையும் பலி கொடுப்பார். மத்திய அமைச்சராக உள்ள அழகிரி மதுரையை புனரமைக்க ஏதாவது திட்டம் செயல்படுத்தினாரா? நாடாளுமன்றத்தில் பேசினாரா? .
தமிழகத்தில் மின் உற்பத்திக்கு தரமான நிலக்கரியை மத்திய அரசு தர மறுக்கிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் 4330 மெகாவாட் மின்சசாரம் முழுவதையும் தமிழகத்திற்கு தரமறுக்கிறது மத்திய அரசு. மண்ணென்ணை அளவை குறைக்கிறது மத்திய அரசு. இப்படி தமிழகத்தை எப்படியெல்லாம் வஞ்சிக்க முடியுமோ அப்படியெல்லாம் வஞ்சித்து வருகிறது. இதை எதிர்த்து கருணாநிதியோ, எதிர்கட்சி தலைவரோ குரல் கொடுத்தது உண்டா?
இலங்கை தமிழர்கள் விஷயத்தில் தற்போது டெசோ மாநாட்டை கூட்டுகிறார் கருணாநிதி. எதற்காக இந்த டெசோ மாநாடு. சோனியாவை குளிர்விக்க, தமிழ் இனத்தை காட்டிக் கொடுத்தவர்தானே கருணாநிதி. இலங்கைக்கு போர்விமானங்கள், ஆயுதங்கள், படைகளை மத்திய அரசு அனுப்பியபோது, அதற்கு வழிவகை செய்தவர் கருணாநிதிதானே? அப்போது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ முதல்வர்களாக இருந்திருந்தால், அது நடந்திருக்குமா? உண்மையிலேயே இலங்கை தமிழர்கள்மீது கருணாநிதிக்கு பாசம் இருந்தால், முதல்வராக இருந்தபோது, மத்திய அரசிலிருந்து தி.மு.க, வெளியேறும் என அறிவித்திருந்தால், டில்லி நடுங்கி இருக்கும்.
ஆனால் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என கல்வெட்டு தீர்மானம் நிறைவேற்றி, தமிழ் உணர்வை வெளிக்காட்டினார்.
அதுமட்டுமின்றி ராஜீவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தண்டனையை ரத்து செய்து, ஆயுள்தண்டனை வழங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா.
மத்திய அரசின் அனைத்து எதிர்ப்புகளையும்மீறி தமிழக மக்களின் நல்வாழ்விற்காக பல அரிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். அனைத்து திட்டங்களும் மக்களுக்காகத்தான். இதுபோன்ற ஓரு சிறப்பான ஆட்சி இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. முதல்வர் ஜெயலலிதாவின், மாணவர்களுக்கான லேப்டாப் திட்டத்தை அறிவித்து, தான் முதல்வராக வெற்றி பெற்றதாக உத்திரபிரதேச முல்வர் அகிலேஷ் கூறுகிறார்.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்ததன் மூலம், இந்தியாவிலு்ள்ள 20 கோடி விவசாயிகளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு மத்திய அரசு தள்ளி விட்டுள்ளது. ஏழை, நடுத்தர விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களை நேரடியாக இனி விற்பனை செய்ய முடியாது. பலர் தியாகம் செய்து பெற்ற சுதந்திரத்தை தற்போது மத்திய அரசு மீண்டும் வெளிநாட்டவருக்கு விற்று விட்டது. சோனியாவிற்காக பிரதமர் இந்தியாவை விற்று விட்டார்.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு அனைத்கட்சியினரும் தடம் மாறியபோது, துணிச்சலாக, எதிர்த்து ஓட்டளித்து, இந்தியாவின் மானத்தை காப்பாற்றியவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் முதல்வர் அவமானப்படுத்தப்பட்டார். இப்போது நாம் கேட்கின்ற இடத்தில் உள்ளோம். அதை விடுத்து கொடுக்கிற இடத்திற்கு செல்ல வேண்டும். இந்தியாவின் மானத்தை காக்க யுத்தம் நடக்கப் போகிறது. அருமையான நிர்வாகத்திறன், 8 மொழிகள் பேசும் ஆற்றல், மக்களின் நல்வாழ்விற்கான நலத் திட்டங்கள், திறமையான நிர்வாகத்துடன் தமிழகத்தில் முதல்வராக உள்ள ஜெயலலிதா, விரைவில் பிரதமர் நாற்காலியில் அமர உள்ளார். இது காலத்தின் கட்டாயம். கருணாநிதி குடும்பத்தினரின் செல்வாக்கிற்கு காரணம் எம்.ஜி.ஆர்.தான்:
தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தாரே துரைமுருகன், அவர் படிப்பதற்கு உ்தவி செய்தவர் எம்.ஜி.ஆர்., அதுமட்டுமின்றி, கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன் கடன்பட்டு, துன்பப்பட்டபோது, அவரை நாடிச் சென்று, நீங்கள் சினிமா எடுங்கள் நானும், ஜெயலலிதாவும் இலவசமாக நடித்து தருகிறோம் எனக் கூறிய எட்டாவது வள்ளல் எம்.ஜி,ஆர்., அவரது யோசனையில் பிறந்ததுதானே மேகலா பிக்சர்ஸ், அதன் முதல் படம்தானே எங்கள் தங்கம். அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியின்மூலம் கிடைத்த பணத்திலிருந்து பெற்றதுதானே முரசொலி மாறன், கருணாநிதியின் செல்வாக்கு. அதுதானே இன்று வரை நீடிக்கிறது.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.