Feb 22, 2013

இந்தியாவுக்கு இனியும் ஏன் தயக்கம்?


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பன்னிரண்டு வயது மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள ஆவணப் படங்கள், இங்கிலாந்தின் "சேனல்-4' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அவை பத்திரிகைகளிலும் பிரசுரமாகி, உலகமெங்கும் தமிழர் மனங்களில் அதிர்ச்சி, வேதனை, கோபம் என உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பன்னிரண்டு வயதுச் சிறுவன், கைதொடும் தொலைவில் துப்பாக்கியால் சுடப்படுவதை, "தாக்குதலுக்கு இடையே சிக்கி' இறந்ததாக யாராலும் சொல்ல முடியாது. ஆனாலும் இலங்கை அரசு இதை மறுக்கிறது. இலங்கை அரசின் இந்தியத் தூதரக அதிகாரி கரியவாசம், "இந்தப் படங்கள் கணினித் திரிபு படங்கள்' என்கிறார். இந்தப் பிரச்னையில் சர்வதேச விசாரணை தேவையில்லை என்று கூறிய அவர், பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் கொல்லவில்லை என்றும் சொல்கிறார்.
என்னதான் சொல்ல வருகிறார் இலங்கைத் தூதர் கரியவாசம்? உலக அனுதாபம் பெறுவதற்காக, விடுதலைப்புலிகளே பாலசந்திரனைக் கொன்றிருக்கலாம் என்று சொல்கிறாரா? அது நம்பும்படியாகவா இருக்கிறது?
"போர்நிறுத்தப் பகுதி: இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் காட்சிகள் குறித்த தடயவியல் ஆய்வுகள் சொல்லும் உண்மை- "இவை கணினித்திரிபு படங்கள் அல்ல; இவை ஒரே கேமராவில் எடுக்கப்பட்டவை' என்பதுதான்.
அம்பலம் ஏறியுள்ள இந்த ஆவணத்தை, "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டார்' என்பதைக் கடந்து, இலங்கை ராணுவத்திடம் சிக்கிய சிறுவர்களும் பெண்களும் இவ்வாறுதான் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான போர்க்குற்ற ஆவணமாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இலங்கை ராணுவம், தனது கடைசி கட்டப் போரில், வெற்றியைத் தொட்டுவிட்ட மமதையுடன், எந்த வரையறையும் கட்டுப்பாடும் இல்லாமல் வெறித்தனமாகச் செயல்பட்டுள்ளது என்பதற்கான சாட்சியமாக இது பார்க்கப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று காரணம் கூறிக்கொண்டு, ஒட்டுமொத்தமாக அனைவரின் மீதும் தாக்குதல் நடத்திய இலங்கை ராணுவத்தின் வெறியினால்தான் குழந்தைகளும் பெண்களும் மிக அதிக எண்ணிக்கையில் இறந்தனர். இலங்கை அரசின் பாஷையில் சொல்வதாக இருந்தால் - "காணாமல் போயினர்'!
அப்பட்டமான போர்க்குற்றத்தின் சாட்சியாக, பாலச்சந்திரன் கொல்லப்பட்ட நிழற்பட ஆவணங்கள் அமைந்துள்ளன. இலங்கையின் கடைசிநேர அழித்தொழிப்புப் போரின் அத்துமீறல்கள் குறித்து முழு விசாரணை நடத்திடவும், இத்தகைய போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கவும் வேண்டும் என்பதே அனைவரின் குரலாக இருக்கிறது.
இந்த ஆவணப்படத்தைக் கண்ட தமிழ்நாட்டின் பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, இலங்கையில் நடப்பது "ஹிட்லர் ஆட்சி' என்று கடுமையாகக் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியும், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் கொண்டுவர இருக்கும் கண்டனத் தீர்மானத்தின்போது "இலங்கையை இந்தியா காப்பாற்ற முயலக்கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தப் போர்க்குற்றம் குறித்து இந்திய அரசின் கருத்து என்ன என்பது பற்றி இதுவரை மத்திய அரசு கருத்துத் தெரிவிக்கவில்லை.
ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும் சொல்லிலடங்கா போர்க்குற்றங்கள் செய்த அமெரிக்காவே, இலங்கை அரசின் போர்க்குற்றத்துக்காக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரும் என்றால், ஏன் இத்தீர்மானத்தை எந்தப் போர்க்குற்றமும் செய்யாத இந்தியாவே கொண்டுவரக்கூடாது? இலங்கைத் தமிழர்களைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இல்லையா?
இலங்கையில், குறிப்பாக வட இலங்கையில் மறு நிர்மாணப் பணிக்காகப் பல நூறு கோடி ரூபாய் நிதியுதவி செய்வதோடு இந்தியாவின் கடமை முடிந்து விடாது. போர் ஓய்ந்த நிலையிலும், தமிழர்கள் வீடுகள் இல்லாமல், பள்ளிகளும் ஆசிரியர்களும் இல்லாமல், மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இல்லாமல் வடகிழக்கு மாகாணத்தில் இப்போதும் வேதனை தொடர வாழ்கிறார்கள்.
தமிழர் மாகாணங்களுக்கு தன்னாட்சி வழங்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபட்ச வெளிப்படையாக அறிவித்துவிட்டார். அத்தோடு தமிழர் ஆட்சியும், தமிழர் அரசியலும்கூட இல்லாமல் செய்யும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றி, எல்லாப் பகுதியிலும் அவர்கள் சிறுபான்மையினராக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
வடகிழக்கு மாகாணத்தில் தமிழர் மட்டுமே இருப்பதால்தான் தமிழ் எம்.பி.-க்கள் தேர்வாகிறார்கள். இந்த நிலைமையைத் தகர்க்க, சிங்களர்களைக் குடியேற்றி, தமிழர் வாக்குவங்கியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இலங்கை அரசு. ஊர்களின் தமிழ்ப் பெயர்களை சிங்களத்துக்கு மாற்றி, சிங்களர் குடியேற ஊக்கப்படுத்துகின்றது. அடுத்த பத்தாண்டுகளில் வடகிழக்கு மாகாணத்தில் தேர்வு செய்யப்படும் எம்பி-க்களில் தமிழர்கள் பாதியாகக் குறைந்துபோவார்கள். அரசியல் பங்களிப்பிலும் தமிழர்கள் இல்லாமல் ஒடுக்குவதுடன் நின்றுவிடாமல், தமிழர்களை வெறும் மொழிச் சிறுபான்மையினராக மாற்றும் பணியில் ராஜபட்ச அரசு முனைப்புடன் செயல்படுகிறது.
ஒட்டுமொத்தத் தமிழகத்தின், உலகளாவிய தமிழர்களின் கோரிக்கையை மன்மோகன் சிங் அரசு ஏற்று செயல்படப்போகிறதா, இல்லை போர்க்குற்றவாளியாக உலகமே கருதும் இலங்கை அதிபர் ராஜபட்சவின் பாதுகாவலர்களாக இருந்து அவரைக் காப்பாற்றப் போகிறதா என்பதுதான் கேள்வி. இத்தனை ஆதாரங்கள் கிடைத்த பிறகும் இனியும் ஏன் தயக்கம்?

Feb 20, 2013

பிரபாகரன் மகன் கொலைக்கு முதல்வர் ஜெய லலிதா கடும் கண்டனம் "ஹிட்லர் ஆட்சி நடக்கிறது"



சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு பேட்டி அளித்தார்.  அப்போது அவர்,  பிரபாகரன் மகன் கொலைக்கு முதல்வர் ஜெய லலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் ஈவு இரக்கமின்றி இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். அந்த 12 வயது குழந்தை எந்த குற்றமும் புரியவில்லை.

பிரபாகரன் மகனாக பிறந்த ஒரே காரணத்துக்காக இலங்கை ராணுவம் அவனை சுட்டுத் தள்ளியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பல பத்திரிகைகளில், ஊடகங்களில் வெளிவந் துள்ளன. 
இந்த ஆதாரங்களையும், இன்னும் பல தகவல்களையும் பார்க்கும்போது தற்போதுள்ள இலங்கை அரசின் தன்மை, மனப்பான்மை, எண்ணம் ஆகியவை முன்பு ஜெர்மனி நாட்டில் ஹிட்லரின் ஆட்சியில் நடந்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல், இன்று இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்திருக்கிறது. எனவே மத்திய அரசு இதனை கவனத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை கவனத்தில் கொண்டு இவற்றிற்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும்.  
இதுதவிர, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும். வர்த்தக ரீதியான தடைகளையும் ஒத்த நாடுகளுடன் பேசி விதிக்க வேண்டும். இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கே செல்ல வாழும் வரை, இலங்கையில் உள்ள சிங்கள பிரஜைகளுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டும் அதுவரை இந்த பொருளாதார தடை நீடிக்க வேண்டும். 
12 வயது பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மிகப்பெரிய போர்க்குற்றம். போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கூறினார்.

தமிழகத்திற்கு தடையின்றி தண்ணீர் :காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது!


 மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே இன்று காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து அரசாணை நகல் தமிழகத்திற்கு வழங்கப்பட உள்ளது. 
தமிழகம் - கர்நாடகம் இடையேயான, காவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1989ல், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், 1990ல், இடைக்கால தீர்ப்பை வழங்கியது.அதை, உடனடியாக அரசிதழில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்பின், 2007ல், நடுவர் மன்றம், தன் இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து, உடனடியாக, சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன. 
இந்தப் பிரச்னையால், இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடாமல், ஆறு ஆண்டுகளாக, மத்திய அரசு காலம் கடத்தி வந்தது.இந்நிலையில், இந்த விவகாரத்தில், சமீபத்தில் தலையிட்ட, சுப்ரீம் கோர்ட், "இன்றைக்குள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.உடன், இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில், மத்திய சட்ட அமைச்சகமும், நீர்வளத்துறை அமைச்சகமும் தீவிரம் காட்டின. அதனால், சில நாட்களுக்கு முன்னதாகவே, இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகலாம் என, நம்பப்பட்டது. ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவால், அரசிதழில் வெளியிடுவது தடைபட்டது.
இந்நிலையில் இன்று காவிரி நடுமன்ற தீர்ப்பு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதற்கான அரசாணை நகல் தமிழகம், புதுச்சேரி, கேரள ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.இனி தமிழகத்திற்கு தடையின்றி 419 டி.எம்.சி. தண்ணீர் தடையின்றி கிடைக்‌கும். 
நீர்பங்கீடு எவ்வளவு
அரசிதழில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. ,கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி., கேரளாவிற்கு 30 டி.எம்.சி. , புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி., தண்‌ணீர் த‌டையின்றி கிடைக்கும்.

புலித்தடம் தேடி...மகா. தமிழ் பிரபாகரன் !- பாகம் 15



சரணடைந்த தமிழ் மக்களை, வதை முகாம்களில் அடைத்து உயிரைக் குடைந்து உதிரம் உறிஞ்சிய மாணிக்கம் பண்ணையில் நடக்கிறேன். இப்படிச் சொன்னால் இந்த இடத்தைப்பற்றி உலகுக்குத் தெரியாது... தமிழர்களான நமக்கும் கூட தெரியாது. ஆம், இந்த மாணிக்கம் பண்ணைதான், மெனிக் பார்ம் என அழைக்கப்படுகிறது.
சாலையில் இருந்து உள்ளே நுழையும் போதே ஆளரவமற்ற இடமாகக் காட்சியளித்தது.
இந்த செட்டிக்குளம் பகுதியில்தான் லட்சக்கணக்கான மக் களை அடைத்து வைத்து இருந்தார்களா என்பதை நம்ப முடியாமல் உடன் வந்த நண்பரிடம், ''இங்குதான் முள்வேலி முகாம்கள் இருந்தனவா?'' என்று பலமுறை கேட்டேன்.
இந்த இடத்தைப் பார்த்தால் உங்களுக்கும் இந்தக் கேள்வி தோன்றும். இந்தப் பகுதியில்தான் ஆனந்த குமாரசாமி, இராமநாதன், அருணாசலம், ஜோன் 4, ஜோன் 6, உளுகுளம், மருதமடு என்ற முகாம்கள் இருந்தன.
போரில் இடம்பெயர்ந்த மக்கள் இங்குதான் கழிவுக் குப்பைகளைப்போல கொட் டப்பட்டனர். இந்த முகாம்கள் 'வதை முகாம்கள்’ என்ற முன்மொழியோடுதான் வெளி உலகுக்கு அடையாளப்படுத்தப்பட்டன.
2012-ல் இந்த முகாம்களை இராணுவம் அகற்றியது. ஆனால், வதைகளை நடத்திய முகாம்களை விடுவதற்கு மனம் இல்லாமல், இந்த முகாம்களின் நிலம் தங்களுக்கு வேண்டும் என்று உரிமை கோருகிறது இலங்கை இராணுவம்.
தொழில் நிறுவனங்களும் இந்த இடத்துக்குப் போட்டி போடுகின்றன. ''இரத்தம் குடித்த முகாம்களின் காணிகளில் அப்படி என்னதான் உள்ளதோ, இவர்கள் இன்னும் அடைவதற்கு?'' என்று கடிந்து திட்டினார் உதவிக்கு வந்த நண்பர். 


மெனிக் பார்மில் உள்ள ஒரு தமிழ்ப் பெண்ணைச் சந்தித்தேன். அவர், ''எங்களுக்குக் கொடுத்தது எல்லாம் பள்ளக் காணிகள். எனக்கு நாலு பிள்ளைகள். மழ காலத்துலலாம் தற்காலிக வீட்ல இருக்கவே முடியாது. படுக்க இடமில்லாம தம்பி வீட்லயும் அம்மா வீட்லயும்தான் தூங்குவம். இன்னும் எங்களுக்கெல்லாம் வீடே கொடுக்கலை.
ஆனா, அதிகாரிகள்ட்ட போய் கேட்டா, 'மெனிக் பார்ம்க்கு வீடுகள் கொடுத்தாச்சு... இனி வீடுகள் இல்லை’னு சொல்றாங்கள். எங்களுக்கு எல்லாம் வீடே வரலைன்னு கேட்டா, 'வரும்... வரும்’னு தப்பவே வழி பார்க்கிறாங்கள்.
யுத்தத்துல பாதிச்சு குடும்பத்தை இழந்தவங்களா இருந்தாலும், வீடு இல்லைன்னு சொல்றாங்க. குடும்பத்துல நாலு பேரு இருந்தாதான் வீடுனு சொல்றாங்கள். இந்தியன் வீட்டுத் திட்டத்துல நிறையக் குளறுபடிகள் நடக்குது'' என்றார் வேதனையுடன்.
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு உதவவில்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அறிவிக்கப்பட்ட திட் டம்தான் 'இந்திய வீட்டுத் திட்டம்’. ஆமை வேக செயல்பாடுகளும், நடக்கும் முறைகேடுகளும் அதை நிரூபிக்கிறது.
முதலில் ஒரு வீட்டுக்கு ஒன்பது லட்ச ரூபாய் (இலங்கை ரூபாய்) என அறிவிக்கப்பட்டது. பின் ஏழு லட்சத்துக்கு வந்துள்ளது. இப்போது ஐந்து லட்சத்துக்கு வந்து விட்டது. ஆனால், இன்னும் சில ஆயிரம் வீடுகளைக்கூட முழுமையாக கட்டி முடிக்கவில்லை.
வீட்டை யாருக்குக் கொடுப்பது என்பதை முடிவுசெய்வது அரசு முகவர்கள். இவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு வீடுகளை ஒதுக்குகிறார்கள். 1,000 வீடுகளைக் கட்டத் திட்டம் போட்டால், 50 வீடுகள்தான் கட்டப்படுகின்றன. உண்மையில் இந்த நிவாரணப் பணம் மொத்தமும் இலங்கை அரசுக்குத்தான் போய்ச் சேருகிறது.
நேரடியாகக் கொடுத்தால் எதிர்ப்புக் கிளம்பும் என்பதற்காக, 'தமிழ் மக்களின் பெயரால்’ இலங்கை அரசுக்கு இந்தியா உதவுகிறது. அதேபோல், 'இந்திய அரசு மற்றும் மக்களின் அன்பளிப்பாக’ சென்ற சைக்கிள்கள் அனைத்தும் சிங்களர்கள் வாழும் தென் இலங்கைக்குத்தான் அதிகபட்சமாக சென்று அடைந்தது.
மெனிக் பார்மில் உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரைச் சந்தித்தேன். அவர், 'மெனிக் ஃபார்ம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு பிரிவுக்கு நான் பொறுப்பு. நான் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் உள்ளேன். மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அரசின் பக்கமும் தமிழ் கூட்டமைப்பின் பக்கமும் உள்ளனர்.
இப்போது இங்கு இருக்கிறதில் யார் நல்லவன், கெட்டவன்னு பார்க்க முடியவில்லை. அதனால், நான்கு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு பக்கம் உள்ளோம். எப்படியாவது ஒருவகையில் மக்களுக்கு உதவி கிடைக்காதா என்றுதான் யார் யார் பக்கமோ உள்ளோம். அப்படித்தான் சில உதவிகளை மக்களுக்குச் செய்து வருகிறேன்.
மக்களுக்கு அத்தியாவசியத் தேவையே இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மின்சாரம் இல்லை. பள்ளி க்குப் போகும் பிள்ளைகள், காலை ஆறு மணிக்கே இங்கிருந்து பேருந்துக்கு நடந்து செல்றாங்கள். பேருந்து இல்லாமையால் பள்ளியைவிட்டு சீக்கிரமே திரும்பி விடுகிறார்கள்.
இங்கே ஒவ்வொரு குடும்பத்துக்கும் நான்கு ஏக்கர் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அது அவர்களுக்குச் சொந்தமானது அல்ல. அதற்கு எந்தவிதமான சான்றுகளும் இல்லை. அரசோ, ராணுவமோ இது தேவை என்றால், கதைக்காமல் தந்துவிட்டுப் போகணும். மக்கள் வாழும் நிலத்துக்கான சான்றைக்கூட கொடுக்க அரசு ஒப்புக்கொள்ளவில்லை’ என்றார்.
மகன் காணாமல் போய் பிணமாகக் கண்ட ஒரு தாயைச் சந்தித்தேன். அவர், ''2007-ம் ஆண்டு என்ட மகன் காணாமல் போனான். தலை மயிர் வெட்டிட்டு வரன் என்று சொல்லி செட்டிக்குளம் போனவன், இரவாகியும் வரலை. அந்த நேரத்துல எங்களுக்கு போன் தொடர்பும் இல்ல.
போனவர் காணலை என்று எல்லா இடத்திலும் தேடினம். போலீஸ் இடமும் பொடியனை காணயில என்று சொன்னோம். எங்காவது தகவல் அறிஞ்சு பாருங்கள் என்று சொன்னது போலீஸ். செட்டிகுளத்தில் இருந்த இராணுவத்திடம்கூட பொடியனோட போட்டோவக் காட்டி, காணலை என்று கேட்டோம்.
என்ட மகனோடு மன்னார்ல இருந்த எங்கட வீடு கட்ட வந்த பொடியனும் போனது. அவனையும் காணயில. அவங்களத் தேடிப்போன இன்னொரு ஆளும் காணலை. பெரிய பெரிய ராணுவ முகாம்கள்லகூட போய் கேட்டுப் பாத்தம். எந்தத் தகவலும் இல்ல. மூன்றாம் நாள் விடிய பாடி கிடக்குதுன்னு தகவல் வந்தது.
யார் வம்புதும்புக்கும் போகாத பொடியன். மளிகக் கடைதான் வெச்சிருந்தான். இதுவரைக்கும் என்ட மகனை எதுக்கு யார் காட்டிக் கொடுத்தா, யார் கொன்னானுகூட எனக்குத் தெரியல. இன்னும் அந்த கடவுள்ட்ட மன்றாடிக்கிட்டுதான் இருக்கன், யார் என்ட பிள்ளைய கொன்னான்னு காட்டம்மான்னு'' கலங்கினார்.
அருகில் இருந்த நண்பர், ''நானும் இதற்குப் பயந்துதான் ஈராக் சென்று அங்கு இரண்டு வருடம் ஓட்டுநராக வேலைபார்த்தேன்'' என்றார்.
தகரமும் முள்வேலிக் கம்பிகளும் ஆங்காங்கே கிடந்தன. முகாம்களின் பெயரோடு நிவாரணக் கிராமங்கள் என்ற பலகைகள் இருந்தன. ஒற்றை இராணுவர் மட்டும் மூடப்பட்ட முகாம்களின் நுழைவாயிலில் உட்கார்ந்திருந்தார். முகாம்களின் வழிகள் தடுக்கப்பட்டிருந்தன. உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.
வவுனியாவுக்குத் திரும்பினேன். அங்கே தமிழ்க் கைதியாக இருந்து, விடுவிக்கக் கோரி உண் ணாவிரதம் இருந்தவேளையில் தாக்கப்பட்டு, உயிர் தப்பிய ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. உயிர் தப்பியவர் என்று குறிப்பிடக் காரணம், இவரோடு இருந்த தமிழ்க் கைதி நிமலரூபன் சிறையிலேயே கொல்லப்பட்டார்.
அவர், ''விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களைத் திருப்பிக் கொண்டு வரணும். இனி யாரும் அழைத்துச் செல்லப்படக் கூடாது என்றுதான் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினோம். இந்த வேளையில் நாங்கள் அதிகாரிகளிடம், 'நீங்கள் விசாரணைக்குக் கூட்டிச் செல்வது என்றால், நீதிமன்றம் ஊடாகக் கூட்டிப் போங்கள்’ என்றோம்.
அதிகாரிகள், 'அப்படி எல்லாம் சட்டம் இல்ல. நாங்க செய்வதுதான் சட்டம்’ என்று சமாதானம் பேசுவதுபோல் வந்துதான் கண்ணீர் புகைக்குண்டு அடிச்சுத் தாக்கினாங்கள். அப்பதான் வெலிக்கடா சிறையில இருந்த எங்கள மகர சிறைச்சாலைக்கு மாத்தனாங்கள். அங்கதான் நிமலரூபன் செத்தது.
கால், கை எல்லாம் எனக்கு உடைஞ்சது. இடிப்பு முறிஞ்சது. அது ஸ்குரு பூட்டப்பட்ட நிலையில்தான் இப்ப உள்ளது.
2008-ம் ஆண்டும் அக்டோபர் 28-ம் தேதி 10.45-க்கு இதே வீட்ல இருந்துதான் 'கொஞ்ச வேல இருக்கு... வாங்க, போய்ட்டு வருவம்’ என்றுதான் கூட்டிப் போனார்கள். கொஞ்ச தூரம் சென்று கையில் விலங்கை மாட்டி, கண்களைக் கட்டித் தாக்கினார்கள். பின் பாதுகாப்புச் செயலர் நீதிமன்ற அனுமதியோடு 90 நாட்கள் மேலதிக விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அனுராதபுர சிறையில் தனிமையில் அடைக்கப்பட்டேன்.
அங்கதான் என்னைச் சித்திரவதை செஞ்சாங்கள். அதுலதான் என்னோட கண் பார்வை பாதிக்கப்பட்டது. 2010-ல் நீதிமன்றத்துக்கு அழைத்துப் போனாங்கள். ஆயுதம் வைத்திருந்ததாகச் சொல்லி பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் என்னைக் கைது செய்துள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
உண்மையில் அப்படி என்னிடம் இருந்து எந்த ஆயுதத்தையும் எடுக்கவில்லை. எப்படியோ இப்ப நான் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கன். ஆனா, என்னால என்ட குடும்பத்துக்கு எந்தப் பயனும் இல்லை. ஒரு நடைப் பிணமாகத்தான் உள்ளன்'' என்று நொந்தார்.
இப்படியான அத்துமீறல் சட்டங்கள்தான், எல்லாத் தமிழர்களையும் ஊமையாக்கி, ஊனமாக்கி உலவ விட்டிருக்கிறது.
ஊடறுத்துப் பாயும்...
ஜூனியர் விகடன்

Feb 19, 2013

புலித்தடம் தேடி.. மகா. தமிழ் பிரபாகரன்- பாகம் 14



தமிழனின் கறி இங்கு கிடைக்கும் என்று 1983 ஜூலை படுகொலைகளின்போது பலகை​யில் எழுதிவைத்து ரத்தம் குடித்த சிங்கள ராணுவம்தான், இன்று தமிழரைக் காக்கும் சமாதானத்தை நிலைநிறுத்தும் படையாகவும் காட்டிக்கொள்ள ஆரம்பித்துள்ளது.
அந்தப் படை யின் கட்டுப்பாட்டில்தான் அனைத்து ஊர்களும் இருக்கின்றன. நான் வவுனியாவை அடைந்த இந்நேரம், ஓரள வுக்குப் பழக்கப்பட்ட ஊராக கிளிநொச்சியும் புதுமாத் தளனும் எனக்கு அடையாளப்பட்டது. வவுனியாவில் இப்போது நான் இருந்தாலும், அவ்வூர்களை விட்டு பிரிந்த என் இருப்பு இன்றுவரை வெகுவாக பாதிக் கிறது. கடலைக் கண்டால் அழும் அளவுக்கு நந்திக்கடல் என்னை மாற்றிவிட்டது.

 ஏ9 மரண நெடுஞ் சாலை மீண்டும் மீண்டும் தமிழ் மண்ணில் ராணுவம் நிலைகொண்டு உள்ளதை எண்ணச் செய்து நெஞ்சில் எரிமூட்டிக்கொண்டே இருந்தது. அந்த எரிமூட்டலின் விளைவாகக் கிடைத்த ராணுவ ஆக்கிரமிப்பு ஆதாரங்கள், புலிகளோடு சமாதானம் பேச வந்த அரசாங்கங்களின் பேச்சுகளையே என் மனத்திரையில் ஒளிரச் செய்தது.

 தமிழர்களின் பிரதிநிதிகளாக நாங்கள் இருக்கி றோம் என்று சொல்லிக்கொண்ட புலிகள், நியாயமான தீர்வுகளுக்கு ஒப்புக்கொள்ளவே இல்லை - இலங்கையும் இந்தியாவும் தங்க ளுக்கு இடையேயான ஒப்பந்தங்களை புதுப்பிக்கும்போது எல்லாம் இப்பேச்சை பேசாமல் இருக்காது. இனிமேல் நான் தமிழர் களின் அபிப்ராயம் பற்றி கவலைப்படப் போவ தில்லை. அவர்களுடைய உயிர்களோ கருத்துக்களோ எங்களுக்குப் பொருட்டல்ல.

 தமிழர்களைப் பட்டினி போட்டால், சிங்கள வர்கள் சந்தோஷப்படுகிறார்கள் என்று இலங் கையின் ஜனாதிபதி ஜெயவர்த்தனே அளித்த பேட்டியே, தமிழர்களுக்கு எப்படியான தீர்வை அன்றும் இன்றும் இலங்கை அரசாங்கம் முன்வைத்திருக்கும் என்பதற்கான ஒப்புதல் ஆதாரம். இப்படி சிங்களர்களுக்கு இனவாதத்தைத் தூண்டித் தூண்டியே, இன்று வரை சிங்கள அரசுக் குடும்பங் கள் இலங்கையில் அரசியல் செய்து வருகிறது. அந்த அரசுக் குடும்பங்களின் ஏவல் படைகளாக சிங்கள ராணுவம் கொக்கரித்து ஆடுகிறது.

 இலங்கை அரசின் கணக்குப்படி ராணுவப் பலத்தின் எண்ணிக்கை 1970-ல் 8,500 பேர், 1983-ல் 12 ஆயிரம் பேர், 1986-ல் 30 ஆயிரம் பேர், 1987-ல் 40 ஆயிரம் பேர், 1990-ல் 50 ஆயிரம் பேர், 1994-ல் 1,04,000 பேர், 1996-ல் 90 ஆயிரம் பேர், 2001-ல் 95 ஆயிரம் பேர், 2002-ல் 1,18,000 பேர், 2009-ல் 2,40,000 பேர். பாதுகாப்புச் செய லகம் 2010-ல் வெளியிட்ட கணக்குப்படி 4,50,000 பேர் இலங்கை ராணுவத்தில் இருக்கின்றனர்.

 தமிழ் அரசியல் நண்பர் ஒருவர் ஒரு கணக்கீட்டைச் சொன் னார். 2012-ல் இலங்கை ராணுவம் ராணுவத்தில் இருந்து ஓடியவர்கள் பற்றி ஒரு கணக்கீட்டை வெளியிட்டு இருந்தது. அதில் 71,458 பேர் ராணுவத்தைவிட்டு ஓடி விட்டதாகவும், அவர்களைத் தேடும் பணி தொடர் கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதான் சிங்கள ராணு வத்தின் உண்மையான நிலை. அவர்கள் போராடுவது என்பது சம்பளத்துக்காக. ஆனால், தமிழர்கள் போராடு வது உரிமைக்காக.

 இப்போது வேண்டுமானால் சம்பளத்துக் காகப் போராடியவர்கள் வென்றதாக இருக்கலாம். ஆனால், தமிழர்கள் மீண்டு வருவது உறுதி. பிரபாகரனை (1983 - 2009) எதிர்த்து தமிழர்களைப் பின்னடைவு செய்ய இலங்கையின் ஐந்து ஜனாதிபதிகள் (ஜெயவர்த்தனே, பிரேமதாச, பண்ட விஜேதுங்க, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்‌ஷே) வரவேண்டி இருந்தது என்றால், அவர்களின் வீரம் எப்படிப்பட்டது என்பது உலகுக்கே தெரி யும். எல்லா நாட்டிடமும் உதவிகள் பெற்றுத்தான் தமிழர்களைத் தோற்கடிக்க முடிந்தது என்றால், இந்த உலகமே தமிழனை அழிக்க போரிட்டு உள்ளது. அப்படி என்றால் 2009-ல் புலிகளை எதிர்த்து நடந்தது மூன்றாவது உலகப் போர்தானே என்றார் அந்த நண்பர்.

 இன்று, புலிகள் மீது சர்வதேச அளவில் வைக்கப்படும் பெரும் குற்றச்சாட்டு கட்டாய ஆள்சேர்ப்பு, சிறுவர்களை படையில் சேர்த்தல். இதைப் பற்றி புலிகள் காலத்தில் இருந்தே பத்திரிகையாளராக இருந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன். இயக்க காலத்தில் ஆள் பற்றாக்குறை காரணமாக கட்டாய ஆள்சேர்ப்பு நடந்தது உண்மைதான். ஆனால், இலங்கை அரசு காட்டுவது போல உலக நாடுகள் சொல்வது போல 10 வயதுக்குக் கீழான சிறுவர்களை எல்லாம் சேர்க்கவில்லை. அந்தக் குழந்தைகள் புலி உடுப்பு அணிந்திருந்ததை வைத்து, அவர்களை போராளிகள் என்று கணித்துக் கொண்டனர்.

 அந்தக் குழந்தை களுக்கு புலி உடுப்பு அணி வது என்பது மாவீரர் தினத்தில் தனது தந்தைக்கோ தாய்க்கோ உறவி னருக்கோ வீரத்துக்கான மரியாதையை செலுத் துவதற்காக. அதை ஒரு போர்க்குற்றமாக அடையாளப் படுத்துகிறார்கள். புலிகள் இவர்களைப் பிடித்துச் சென்றனர், அவர்களைப் பிடித்துச் சென்றனர் என்கிறதே அரசாங்கம்... அப்படிப் புலிகள் பிடித்துச் சென்று பின்னர் வீட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்ட பெண்ணை, ஏன் ராணுவம் தேடிப்பிடித்து கற்பழித்தது? வீட்டுக்கு ஒரு வீரன் என்ற பேரில்தான் இயக்கம் ஆட்சேர்ப்பு செய்தது.

 அப்படியே இந்தப் பெண்ணையும் அழைத்துப் போயிருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் குடும்பத்தில் அப்பா, சித்தப்பா, பெரியப்பா, மாமா, அக்கா என்ற பல விதத்தில் 13 மாவீரர்கள். வீட்டுக்கு மீதி இருப்பது அந்த ஒரு பெண் மட்டும்தான் என்றதால், புலிகள் வீட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளனர். அந்தப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்த ராணுவம், நீ கொட்டியா (புலி)தானே என்று கேட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

 18 வயது அடைந்த மனதளவில் முதிர்ச்சி இல்லாத சிங்கள இளைஞர்கள் பலர் பள்ளி முடித்ததும் இலங்கை ராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள். அப்படி என்றால் ராணுவத்தில் சேர 18 வயது ஆகிவிட்டால் போதுமா? பிரபாகரனே 16 வயதில் போராட வந்தவர். அப்படி எனில் சர்வதேச மனித உரிமை விதிப்படி பிரபாகரன் சிறுவர் போராளி என்றால் தகுமா? நாங்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். போராட வயதைப் பார்த்துக்கொண்டு இருந்தால் நாங்கள் வாழவே முடியாது. என்னடா, ஒரு பத்திரிகையாளனா இருந்து புலியப்பத்தி பேசறனு நினைக்காதீங்க. இந்த மண்ணுல வந்து வாழ்ந்து பாத்தாதான் தெரியும், நாங்க அனுபவிக்கும் வேதனை. பத்திரிகை சுதந்திரத்தில் கடைசி வரிசை நாடாக உள்ள சிங்கள தேசத்துக்கு புலிகளைப்பற்றி பேச அருகதையே இல்லை என்று வெம்பினார்.

 போரில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைத்திருந்த செட்டிக்குளத்தை நெருங்குகிறேன். அடைத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் பிள்ளைகளுக்கு பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் விதமாய் சிங்கள தேசிய கீதத்தை கற்றுக்கொடுத்து, சிங்களம் அறியா பிஞ்சுகளை சிறீலங்கா மாத அப சிறீலங்கா நமோ நமோ நமோ நமோ மாத என உளற வைத்துள்ளனர்!
ஊடறுத்துப் பாயும்...

புலித்தடம் தேடி.தமிழ் பிரபாகரன்- பாகம் 13



சிரித்துக்கொண்டே மரணத்தை வென்றவன். அப்படி வென்றவனின் நினைவு ஸ்தூபி (யாழ்ப்பாண நல்லூர் கோயில் அருகே) இடிக்கப்பட்டது என நான் தமிழ்நாட்டில் வந்திறங்கிய டிசம்பர் 7-ம் தேதி செய்தி கிடைத்தது. . அந்தச் செய்தி 2010-ல் திலீபன் சிலை இடிக்கப்பட்டபோது ஈழநாதம் நாளிதழ் வெளியிட்ட கருத்தை மனதில் நினைவு கூர்ந்தது.
நம்புங்கள்... நல்லூர் கோயிலும் நாளை இடிக்கப்படும், நம்புங்கள்... சங்கிலியன் சிலை தூக்கி எறியப்படும், நம்புங்கள்... நாளை மீண்டும் நூலகம் எரிக்கப்​படும்.
மாவீரர் துயிலும் இல்லங்களை இடிக்கும் போது தான் பேசாமல் இருந்தோம். சரி, அவர்கள் பாணியில் சொன்னால் வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள். ஆனால், தியாக தீபம் திலீபனும் அப்படியா?
இவ்வளவு காலமும் இடிக்கப்படாமல் இருந்த தியாக தீபத்தின் சிலை ஏன் இப்போது இடிக்கப்பட்டது?'' என்ற அந்தக் கருத்து என்னை வாட்டியது.
அமைதி வழியானாலும் ஆயுத வழியானாலும் எந்த வழியானாலும் தமிழர்கள் எதற்காகவும் போராடக் கூடாது என்ற நினைப்பைத்தான், இந்த இடிப்பு சம்பவங்கள் குறிப்பிடுகின்றன.
மன்னாரில் இருந்து துக்கத்தோடு யாழ்ப்​பாணத்துக்குச் சென்றதும், திலீபன் காலத்​துக்கு முன்னிருந்து உள்ள ஒரு மனிதரைச் சந்தித்தேன்.
அந்த மனிதர் உண்மையில் இன்றையத் தமிழ் இளைஞர்களுக்கு எல்லாம் தேவையான ஒருவர். இராணுவத்​தின் அதிகாரங்கள் அவரையும் அடக்கி​ வைத்துள்ளது.
யாழ்ப்பாண நல்லூர் கோயில் அருகே உண்ணாநிலை இருந்த திலீபனின் நினைவுகளைப் பகிர்ந்தார்.
உலகின் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திலும் அரசியல் போராட்​டத்திலும் 'ஒற்றை மனிதனின் உண்ணாநிலை’ நடந்தது இல்லை.
ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக அகிம்சையைப் பிரயோகித்த காந்தியே, நீரோடும் பாலோடும்தான் உண்ணாவிரதம் இருந்தார்.
ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல், 265 மணி நேரம் (12 நாட்கள்) உண்ணாவிரதம். 'என் சுயநினைவை இழந்தால்​கூட குளுக்கோஸ், தண்ணீரைத் தந்துவிடாதீர்கள்’ என்று தோழர்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்ட திலீபனின் உயிர், செப்டம்பர் 26, 1987 காலை 10.48-க்கு பிரிந்தது. லட்சக்கணக்கான தமிழ் மக்களின் கண்ணீர் சிந்திய பாதைகளில் திலீபனின் மரணக் கோரிக்கைகள் புதைந்து போயின.
மருத்துவ​னான திலீபன் ஈழவர்கள் நெஞ்சில் உயிராய் பதிந்து​விட்டான். இந்தியாவோ இலங்கையோ, காந்தி வழியே இறந்த திலீபனுக்காக துளியும் வருந்தவில்லை.
இதற்கு முன் சென்னையில் பிரபாகரனும்கூட ஒரு முறை தகவல் தொடர்புக் கருவிகளைப் பறித்ததைக் கண்டித்து, நீர் அருந்தாத உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி இருந்தார்.
ஆயுதம் தாங்கிகளான இவர்களுக்கு அகிம்சை​யின் மீதும் தீராக் காதல் உண்டு என்பதை மெய்ப்பிக்கும் சாட்சியங்கள் அவை'' என நினைவூட்டினார்.
திலீபனின் உயிர் அணு அணுவாய் பிரிந்து​கொண்டு இருந்தபோது... நார்வே, ஸ்வீடன், இங்கி​லாந்து, அவுஸ்திரேலியா நாட்டுத் தூதுவர்கள் வந்து பார்த்துச் சென்றார்கள்.
ஆனால் இந்தியாவோ, அமைதிப் படையின் அதிகாரிகளையும் தூதுவர்​களையும் வைத்து மிரட்டிக்கொண்டு இருந்தது.
உண்ணாநிலை நடந்துகொண்டு இருந்த நேரத்தில் புலிகள் பிரதிநிதிகளைச் சந்தித்த இந்திய உதவி தூதர் நிருபம் சென், 'உண்ணாவிரதப் போராட்டங்களால் இந்தியாவை நிர்ப்பந்திக்க முடியாது’ என எச்சரித்தார்.
திலீபனின் ஐந்து கோரிக்கைகள்:

1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்​பட்டோர் விடுவிக்கப்பட வேண்டும்.

2. புனர்வாழ்வு என்று தமிழர் தாயகத்தில் நடத்தப்​படும் சிங்களக் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை 'புனர்வாழ்வு’ என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
4. வட கிழக்கு மாகாணங்களில் போலீஸ் நிலையங்​கள் திறப்பதை உடனே நிறுத்த வேண்டும்.
5. இந்திய அமைதிப் படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோர்க்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப்பெற்று, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடி​கொண்டுள்ள இராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
25 ஆண்டுகள் கடந்தும் திலீபன் வைத்த கோரிக்கைகள் இன்னும் பழைமையாகாமலே இருக்கிறது. புதிதாக எந்தக் கோரிக்கைகளையும் இந்தியா முன்வைக்கத் தேவை இல்லை. இதையே இப்போதும் முன்வைத்தாலே போதும்.
இந்தியாவின் உதவிகள்தான் இன்று இலங்கையை ஒரு இராணுவ நாடாக உருவாக்கி உள்ளது. அந்த விருட்சங்களே தமிழர் பகுதிகளில் உள்ள இராணுவ ஆக்கிரமிப்புகள்.
அதனால்தானே ராஜபக்ச வருகையின்போது பாதுகாப்புக்கு காவல்துறை, சிறப்புப் படை என 50 ஆயிரம் பேரை இந்தியா காவலுக்கு வைத்தது.
யாழ்ப்பாணத்தை விட்டு கிளிநொச்சி வழியே வவுனியாவுக்குச் சென்றேன். ஓமந்தையில் என் கடவுச்சீட்டு பதியப்பட்டது.
இன்றும் ஓமந்தை (முன்பு புலிகளின் எல்லைப் பகுதி) தமிழ் - சிங்களப் பகுதிகளைப் பிரித்துக் காட்டும் அடையாளமாகவே விளங்குகிறது.
அங்கு இராணுவத்திடம் சிங்களவர்​களுக்கும் தமிழர்களுக்கும் வேறு வேறு விதிகள். வவுனியாவை அடைந்ததும் ஓமந்தை பற்றி உள்ளூர் தோழரிடம் கேட்டேன்.
அவர் ''இங்க ஐ.சி. (அடையாள அட்டை) இல்லாம எங்கையும் நடந்து​கூட போக இயலாது. அப்படி இல்லாம இராணுவம் பிடிச்​சதுனா, சந்தேகப் பிரிவுலதான் போடுவினும். சிலமுறை அப்படித் தப்பிக்க காசு கொடுக்கக்கூட வேண்டியது இருக்கும்’ என்றார்.
தோழர் குறிப்பிடுவதுபோல சிங்கள இராணுவத்தில் உள்ள இடைநிலை ஆட்களுக்குத் தேவை, பணம்​தான். இதற்காகவே பலர் சந்தேக வழக்கில் கைதுசெய்யப்படுகின்றனர்.
நம்ம ஊரில் எப்படி கஞ்சா வைத்திருந்தான் என்று காவல்துறை கைது செய்யுமோ, அதுபோல் அங்கே 'வெடிமருந்து வைத்திருந்தான்’ என்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்வார்கள்.
பலரையும் மிரட்டுவது இந்தச் சட்டம்தான். ''ஐ.நா. சபையை நம்பித்தான் நாங்க இருக்கோம். எங்களுக்கு வேறு எந்த நம்பிக்கையும் இல்லை'' என்றும் அந்த மக்கள் சொல்கிறார்கள்.
2013 தொடக்கத்தில் ஐ.நா. எடுத்துள்ள ஒரு முடிவு மீண்டும் தமிழ் மக்களை சித்திரவதைக்குள் சிக்கவைக்கும் ஒரு முடிவாக உள்ளது.
ஐ.நா. எடுத்த அந்த முடிவு என்னவென்றால், 'இந்த வருடத் தொடக்கத்தில் இருந்து ஐ.நா. தனது பணிகளைக் குறைக்க முடிவெடுத்துள்ளதுடன், வருட இறுதிக்குள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுவது எனவும் திட்டமிட்டு உள்ளது’. இது அந்த மக்களுக்குத் தெரியாது.
'ஐ.நா-வின் மனித உரிமை சார்ந்த செயல்பாடுகளுக்கு இங்கு வேலை இல்லை’ என்றும், 'நிதிப் பற்றாக்குறைக் காரணங்களுக்காக வெளியேறப்போகிறது’ என்றும் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
ஆனால் உண்மையில், ஐ.நா-வின் மனித உரிமை சார்ந்த பணிகளுக்கு யாழ்ப்பாணத்தில் இன்னும் தேவை உள்ளது என்பதை மனித உரிமைப் பணியாளர் ஒருவர் என்னிடம் விளக்கினார்.
யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களில் இன்னும் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. உயர் பாதுகாப்பு வளையங்களாகவே உள்ள அந்தப் பகுதியில் உள்ள கண்ணி வெடிகளை அகற்ற இன்னும் ஐந்து வருடங்களாவது தேவைப்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் பணிகளே இன்னும் முடியாத நிலையில் ஐ.நா. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினால், கண்ணி வெடி அகற்றல் பணி பாதுகாப்புச் செயலகத்திடம் ஒப்படைக்கப்படும் என அறியப்படுகின்றது.
அரசின் கண்ணி வெடிகள் அகற்றல் நிறுவனமான 'டாஷ்’, இந்தப் பணியில் ஏற்கெனவே உள்ளது.
இந்தியாவைச் சார்ந்த 'சர்வத்ரா’வும் கண்ணி வெடிகள் அகற்றலில் ஈடுபடுகிறது. இதோடு மற்ற நாடுகளைச் சார்ந்த 'ஹலோ டிரஸ்ட்’ போன்ற அமைப்புகளும் இதில் ஈடுபடுகிறது.
ஐ.நா. வெளியேறிவிட்டால், இப்படியான பணிகளை மேற்பார்வை செய்வதற்குக்கூட ஆட்கள் இல்லை. ஐ.நா. வெளியேறுகிறது என்ற பிம்பம் 'இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்’ என்ற பொய்யான நிலையைப் பரப்பும்.
போர் முடிந்த பிறகும் காணாமல் போதல், பயங்கரவாதப் பிரிவில் கைது, அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் போன்றவை ஐ.நா-வின் தேவையை இன்னும் வலியுறுத்திக்கொண்டே உள்ளது.
மனித உரிமை சார்ந்த குற்றங்களை மனித உரிமைகள் சபையில் பதிவுசெய்தால், யார் அதைப் பதிவுசெய்தார்கள் என்ற விவரங்கள் புலனாய்வு பிரிவுக்கும் இராணுவத்​துக்கும் பகிரப்படும்போது, மனித உரிமை மீறல்கள் குறைந்துவிட்டது என்று எப்படி ஐ.நா. குறிப்பிட இயலும்?'' என்று அவர் என்னிடம் கேட்டார்.
2009 போரின்போது வெளியேறிய ஐ.நா. செய்த தவறை 2012 நவம்பரில் வெளியிடப்பட்ட சார்லஸ் பெட்ரி (ஐ.நா. அதிகாரி) தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கை உணர்த்துகிறது. ஐ.நா. வெளியேறியதால் நடந்த படுகொலைகள் உலகை அதிரவைத்தன.
பான் கி மூன் 2009 இலங்கைப் போரில் ஐ.நா. செய்த தவறுக்கு வெளிப்படையாக மன்னிப்பு கோரினார்.
2009-ல் நடந்த படுகொலைகள் 'பான் கி மூனின் ருவாண்டா’ எனவும் கூறப்பட்டது.
அப்படியான ஐ.நா. தவறை உணர்ந்ததுபோல் நடித்து, அதே தவறை மீண்டும் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறும் முடிவால் செய்ய இருக்கிறது.
தமிழர்களை முதுகில் குத்தும் இப்படியான ப(லி)ழி வாங்கல் வேலைகளே இலங்கையில் படுவேகமாக நடந்து வருகின்றன.
ஊடறுத்துப் பாயும்...
ஜூனியர் விகடன்