Aug 14, 2013

புலித்தடம் தேடி...! தமிழ் பிரபாகரன் - பாகம் 03

புலித்தடம் தேடி...!  தமிழ் பிரபாகரன் - பாகம் 03
மயான மௌனம் நிலவும் யாழ்ப்​பாணத்தில் நிற்​கிறேன். இன்று அது கட்​-அவுட் நகரம். எங்கே திரும்பினாலும் மகிந்த ராஜ​பக்ச சிரிக்கிறார், 'நீடூழி வாழ்க’ என்று வாழ்த்துகிறார். ராஜபக்ச மட்டுமே வாழ்ந்​தால் போதுமா?
காலையில் தொடங்கிய பயணத்தில் முதலில் கண்டது யாழ்ப்பாண நூலகம். தமிழனின் அறிவையும் ஆற்ற​லையும் ஆளுமை​யையும் வரலாற்​றையும் படைப்புத் திறனையும் பறைசாற்றிய கருவூலம். உலகத்தரம் வாய்ந்த நூலகம்.
ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அந்த இனம் பேசும் மொழியை முதலில் அழியுங்கள். மொழிக்கு அடித்தளமாக இருக்கும் புத்தகங்களைக் கொளுத்துங்கள்’ என்பதுதான் இனவாதத்தின் தாரக மந்திரம்.
நூல் ஒன்று எரிக்கப்பட்டால், அந்த நூலுக்​கான மொழி எரிக்கப்படுகிறது என்பார்கள். சிங்கள இன​வாதமும் அப்படித்தான் நடந்து​கொண்டது.
ஜெயவர்த்தனா இதனுடைய சூத்ரதாரியாக அன்று இருந்தார். 'சிங்கள தேசத்தில் தமிழ் நூலகமா?’ என்று கொக்கரித்தார்.
1981-ம் ஆண்டு வைக்கப்பட்ட தீயில் 97 ஆயிரம் புத்தகங்கள் எரிந்து சாம்பலாகின. தமிழனின் அடை​யாளம் அனைத்தும் அழிக்கப்​பட்டதாக அன்று கருதப்​பட்டது. தமிழ்த் தாய் கண்ணீர் வடித்த ஆண்டு அது.
அரசியல் மாற்றங்கள், பேச்சு​வார்த்தைகள் என காலம் மாறியதும் 2003-ம் ஆண்டு நூலகம் சீரமைக்கப்பட்டது. சிங்கள அரசாங்கமே ஐந்து கோடி ரூபாயைச் செலவு​செய்து மராமத்து செய்து தர​வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது.
தமிழகம் உட்பட உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை அனைத்தும் புதிய புத்தகங்கள். ஆனால், யாழ் நூலகத்தில் இருந்தவை அனைத்​தும் பழைய பனுவல்கள். உலகத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காத பொக்கிஷங்கள். ஆனாலும், இதுவாவது கிடைத்​ததே என்று தமிழன் மகிழத்தக்​கதாக அந்த நூலகம் இப்போது அமைந்துள்ளது.
ஆனால் இன்று, புத்தகங்கள் படிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் தேடுதலுக்காகவும் என்று இல்லாமல் அரசு விழாக்களுக்கும் மாநாடுகளுக்கும்தான், இந்த நூலகம் அதிகம் பயன்படுகிறது.
மாநாடு நடக்கும் அன்று நூலகத்துக்கு விடுமுறை. நான் சென்ற அன்றும் 15-வது ஆளுநர்கள் மாநாடு நடந்தது. அதன் காரணமாக நூலகம் மூடப்பட்டு, இராணுவம் காவலுக்கு நின்றது.
தமிழ் ஆர்வலர் ஒருவர் வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிக்கொண்டு இருந்தார். 'ஏதோ ஒப்புக்குத் திறக்கிறாங்க... மூடுறாங்க’ என்று வருந்தினார்.
அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஒரு கண் காட்சி. 'வடமாகாண கண்காட்சி - ஒன்றிணைந்து முன்னேற்றத்தை நோக்கி’ என்று அதற்குத் தலைப்பு கொடுத்திருந்தனர்.
2009-ம் ஆண்டில் இருந்து 2012 வரை வடக்கு மாகாணம் எப்படி முன்னேறி உள்ளது என்பதை விளக்கும் கண்காட்சியாம்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வட மாகாணத்தை 2009-ம் ஆண்டுதான் இலங்கை அரசாங்கம் கைப்பற்றியது.
அதன்பிறகு கல்வியில், சுகாதாரத்தில், பொருளாதாரத்தில் வட மாகாணம் எந்த வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அரசாங்கக் கணிப்புகள் காட்டியது.
இது, டக்ளஸ் தேவானந்தா முன்னேற்பாட்டுடன் நடக்கும் கண்காட்சி என்பதால், அவரது ஆதரவாளர்கள், அதிகாரிகளை இந்தக் கண்காட்சிக்கு அழைத்து இருந்தனர்.
அங்கு இருந்து, யாழ்ப்பாணம் ஒல்லாந்தையர் (டச்) கோட்டையை அடைந்தேன். சிதிலம் அடைந்த அந்தக் கோட்டையின் புனர்நிர்மாணப் பணிகள் 2009-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது.
இந்தப் பணிகளுக்காக 104.5 மில்லியன் (இலங்கை ரூபாய்) செலவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 62.1 மில்லியன் ரூபாய் நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி. 'அரசின் வாக்குப்படி புனர்நிர்மாணப் பணிகள் இந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடையும். இது சுற்றுலாவாசிகள் பார்ப்பதற்காக அமைக்கப்படுகிறது. அதற்காகத்தான் நெதர்லாந்து அரசாங்கமும் நிதி உதவி செய்துள்ளது’ என்றார் அங்கிருந்த அலுவலர்.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சாலை ஆகிய பகுதிகளில் சாலை அமைப்பதற்கான நிதியை சீனா கொடுத்துள்ளது.
இலங்கையின் 90 சதவிகித சாலைப் பணிகளுக்கு சீனாதான் நன்கொடை. சாலைப் பணியில் ஈடுபடுபவர்கள் அனைவருமே இராணுவத்தினர்தான்.
குழி தோண்டுவது, பாலம் கட்டுவது, அலங்கார மேடைகள் அமைப்பது என அத்தனைக்கும் இராணுவ வீரர்கள்கள்தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.
ஆரம்ப காலத்தில் இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை 30 ஆயிரம்தான். சந்திரிகாவின் ஆட்சியில் ஒரு லட்சத்தைத் தொட்டது. ராஜபக்ச வந்த பிறகு இன்னும் உயர்ந்தது.
பள்ளிப் பருவத்தை முடித்த இளைஞர்கள் அனைவரையும் இராணுவத்தில் சேர்க்க ஆரம்பித்தனர். இதனால், .ராணுவத்தினர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது.
போரின்போது நேருக்கு நேரான யுத்தத்தில், முழுமையாகப் பயிற்சி பெற்றவர்கள் நிறுத்தப்பட்டனர். மற்ற அனைத்து இடங்களிலும் இத்தகைய இளைஞர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.
போர் முடிந்த பிறகு, இத்தகைய இளைஞர்களுக்கு எந்த வேலையும் இல்லை. எனவே பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைப் பணிகளையும் இவர்களே பார்க்கிறார்கள்'' என்று சிங்களவர்கள் சிலரே வேதனையுடன் சொன்னார்கள்.
அதாவது, நம் ஊர் வழக்கப்படி சொன்னால், சாலைப் பணியாளர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்கள் மாதிரியான வேலைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அந்த இளைஞர்கள் முறையான பயிற்சி இல்லாத, இன்னும் சிறுவர்களாகவே இருக்கிறார்கள். அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டு இருப்பதும், கண்காணிக்க கட்டளைத் தளபதிகள் நியமிக்கப்பட்டு இருப்பதும்தான் வித்தியாசம்.
கோட்டையைச் சுற்றி வருகிறேன். வீரசிங்க மண்டபத்துக்கு எதிரில், 'உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நினைவாலயம்’ என்ற எழுத்து காட்சி அளித்தது.
தமிழர் சின்னங்களில் ஒன்றாக எஞ்சி இருந்தது அது. தமிழர் மீதான கோரத் தாக்குதலின் தொடக்கத்தை கண்ணீர் சின்னமாக இன்னும் காட்டிக்கொண்டு இருக்கிறது அந்தச் சின்னம்!
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்தது. மாநாட்டின் இறுதி நாளில் சிங்களப் பொலிஸார் திடீரெனத் தாக்குதல் நடத்தியதில், ஒன்பது தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
அதற்குக் காரணமான பொலிஸ் அதிகாரிகளைப் பழிவாங்கவே தமிழ் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்தனர். அதுவே ஆயுத இயக்கமாக மாறியது.
அந்த இடத்தை நினைவுபடுத்தும் தூணைப் பார்த்து விட்டு, ஸ்ரீ நாக விகாரை என்ற இடத்துக்குச் சென்றேன். அங்கிருந்த புத்த பிக்குவிடம் இராணுவத் தளபதி ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார்.
மூன்றாம் நூற்றாண்டில் நாகர்களால் கட்டப்பட்ட இந்த விகாரையை தமிழ்ப் பௌத்தர்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்துள்ளனர். தேவநம்பியதீசன் என்ற சிங்கள மன்னன்தான் இந்த விகாரையை கட்டி எழுப்பினார் என்று இதற்கு இன்னொரு வரலாறும் எழுதப்பட்டு இருக்கிறது.
இந்த விகாரையைப் பராமரிக்கும் பணியை இராணுவம் செய்கிறது. அதனால் அடிக்கடி இராணுவம் வந்து மேற்பார்வையிடும்’ என்று சொன்னார்கள். அங்கிருந்து தமிழ்க் கோயிலான நல்லூர் முருகன் கோயிலுக்கு நகர்ந்தோம்.
தமிழ் முகங்களை அங்கு​தான் அதிகம் பார்க்க முடிந்தது. எப்படி இருந்த நாடு தம்பி! இன்னைக்கு இந்தச் சனம் எல்லா வலியையும் புதைச்சுக்​கிட்டு வாழுது.
குட்டித் தமிழ்​நாடு போல இருந்த யாழ்ப்பாணம் சிங்களவன் கைக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் பறிபோகுது. சிங்கள உடுப்புக் கலாசாரம் வேகமாப் பரவுது தம்பி.
இயக்கம் இருந்த காலத்​தில் காலுக்கு மேல எந்தப் பெண்ணும் பாவாடை கட்டுறது இல்லை. ஆனா இன்றைக்கு முட்டிக்கு மேல பாவாடை போயிடுச்சு.
முருகன் கோயிலுக்குக் கூட்டம் குறைஞ்சு, புத்தர் கோயி​​​லுக்கு அதிகமாயிடுச்சு. எல்லா இடங்களிலும் புத்தர் கோயில் வந்திருச்சு...’ என்று பதறியபடி சென்றார் ஒரு தமிழர்.
இடையில் வந்த பத்திரிகை நண்பர் யாழில் பரவிவரும் விபசாரம் பற்றிக் கூறினார்.
அனுராதபுரம் என்பது சிங்களக் கலாசார நகரம். போரின்போது இராணுவத்தை வீட்டுக்கு அனுப்பாமல் இராணுவப் பணியிலேயே வைத்திருப்பதற்காக, சிங்களப் பெண்களை இங்கே மொத்தமாக வைத்திருந்தனர்.
போருக்குப் பின் விதிகள் தளர்ந்து போனதால், பொலிஸ் உதவியுடன் சிங்களப் பெண்கள், தமிழ்ப் பகுதிகளில் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். அதுவே இன்று யாழிலும் பரவி இருக்கிறது.
இவர்களைப் பற்றி நாம் எழுதினாலோ அவர்களிடம் ஏதாவது பேட்டி எடுத்தாலோ, அவர்கள் பொலிஸுக்குத் தகவல் கொடுத்து விடுகின்றனர். சுற்றுலா ஊக்குவிப்பின் ஒரு பகுதியாக இங்கே விபசாரம் பரவி வருகிறது என்றார் அவர்.
அடுத்து, கிட்டு பூங்காவுக்குச் சென்றோம். அந்தச் சாலையில் தமிழ் மன்னன் சங்கிலியன் சிலை இருந்தது. அந்தப் பூங்கா இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்ததால் சீரமைக்கப்படவில்லை.
யாழ்ப்பாணப் பழைய புகைவண்டி நிலையத்துக்குச் சென்ற போது, அங்கு ஒரு சிங்களப் பாம்பாட்டிக் குடும்பம் மட்டும் இருந்தது.
கட்டடங்கள் பாழடைந்து கிடந்தன. ''இதைச் சீரமைப்பது இந்தியாதான். ஒவ்வொரு முறை இந்தியப் பிரதிநிதிகள் இங்கு வரும்போதும், '15 நாட்களில் பணிகள் தொடங்கிவிடும்’ என்று கூறிவிட்டுச் செல்வார்கள்.
அவர்கள் அப்படிச் சொல்லத் தொடங்கியே நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால், பணிகள் மட்டும் இன்னும் தொடங்கவே இல்லை.
பளை - காங்கேசன்துறை வரை ஒரு பாதையும், மதவாச்சி - மன்னார் வரை ஒரு பாதையும் போடப்படும் என்று இந்திய அரசு அறிவித்தது. ஆனால், அதற்கான எந்தப் பணியும் நடக்கவில்லை.
வலிகாமத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்க வேண்டும் என்று அங்கிருந்த தமிழ் மக்களை சிங்கள இராணுவம் துரத்தியது. அந்த மக்கள் இந்தப் புகைவண்டி நிலையப் பாதையில் கூடாரமிட்டுத் தங்கினர். அவர்களையும் இந்தியா சீரமைப்புப் பணிகளை ஆரம்பிக்கப்போகிறது என்று சொல்லித் துரத்தினர். ஆனால், இன்றுவரை பணிகள் தொடங்கவில்லை.
உண்ண, உறங்கக்கூட உரிமை இல்லாமல் தமிழன் அலைக்கழிக்கப்படுகிறான் என்றார் ஒரு தமிழர்.
அடுத்த எனது பயணம் வல்வெட்டித்துறையை நோக்கி...
ஊடறுத்துப் பாயும்....!
ஜூனியர் விகடன்

புலித்தடம் தேடி...! தமிழ் பிரபாகரன் - பாகம் 04


வல்வெட்டித்துறை... வீரம் விளைந்த நிலம். பிரபாகரன் பிறந்த மண்! மதிய வெயிலில் வெறிச்சோடிக் கிடந்த வீதியின் வழியாக பிரபாகரன் வீட்டை அடைந்​தேன். ஒரு சுவர் மட்டும்தான் இருந்தது. அதில் ஏதோ எழுதப்பட்டு, அதுவும் கறுப்பு மையால் அழிக்கப்பட்டு இருந்தது.
அருகில் சென்று மிகவும் சிரமப்பட்டு வாசித்தேன். 'தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் இல்லம்’ என்று எழுதப்பட்டு இருந்தது. அதைத்தான் அழிக்க முயற்சித்து இருந்தனர். நான் கவனித்ததைப் பார்த்த முதியவர் ஒருவர், 'ஒன்றரை வருஷத்துக்கு முன் ஆமிதான் இந்த வீட்டை உடைச்சது’ என்று ஒற்றை வரி வரலாற்றைச் சொல்லிச் சென்றார்.
இன்று பாழடைந்து, உருக்​குலைந்து கிடக்கும் அந்த வீட்டில்தான் பிரபாகரன் பிறந்தார். 1972-ம் ஆண்டு மக்கள் இல்லாத அரசுப் பேருந்தை எரித்ததற்காக பிரபாகரனையும் சில தமிழ் இளைஞர்களையும் போலீஸ் தேடியது. அவரது இருப்பை அறிந்த போலீஸ், அதிகாலைப் பொழுதில் அந்த வீட்டைச் சுற்றி வளைத்தது. போலீஸ் பிடியில் சிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்ற பிரபாகரனுக்கு அப்போது வயது 16. அன்றோடு முடிந்தது, அவரின் வல்வெட்டித்துறை வீட்டு வாழ்க்கை.
பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை, மாவட்ட நில வள அதிகாரியாக இருந்தவர். அவரின் பணி... இடமாற்றல்களாலும், சிங்கள ராணுவத்தின் சித்திரவதைகளாலும் கழிந்தது. தனது மகனின் மறை​விடத்தை அறிந்துகொண்டு பார்க்கச் சென்ற வேலுப்​பிள்ளையிடம் 'இனி நான் உங்களுக்குப் பயன்பட மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார் பிரபாகரன். அந்த வீடும் ராணுவக் கண்காணிப்புக்கு இலக்காய் போனது. இதை, இன்று சிதைத்திருப்பதன் மூலமாக, கரிக்கட்டையால் அவரது பெயரை அழித்திருப்பதன் மூலமாக தனது ஆத்திரத்தைத் தீர்க்க முயற்சிக்கிறது சிங்கள இனவாதம்!
அங்கிருந்து, நெல்லியடி மகா வித்தியாலயம். இங்கு நிலைகொண்டு இருந்த சிங்கள ராணுவ முகாம் மீதுதான் 1987-ம் ஆண்டு, மில்லர் தாக்கு​தல் நடத்தினார். புலிகளின் 'முதல் கரும்புலித் தாக்குதல்’ என்று அது வரலாற்றில் பதிவானது. இன்றும் இந்தப் பள்ளியைச் சுற்றி ராணுவம் கண்காணித்து வருகிறது.
'தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன்’ என்றதும், அந்தப் பகுதியில் இருந்த ஒருவர் ஆர்வமாக வந்து பேசினார். ''போர்க் காலத்துல நாங்கள் சந்திச்ச வேதனை, போரைவிடக் கொடியது. அஞ்சு மணிக்கு மேல வெளியே வரக் கூடாதுன்னு இருந்த ராணுவக் கட்டுப் பாட்டாலதான், இப்பக்கூட சன நடமாட்டம் ஏழு மணிக்குள் அடங்கிப் போயிறது.
'தலையாட்டி விசாரணை’யை யாழ்ப்பாணத்துல தெரியாதவங்க இருக்க மாட்டாங்க. ஒரு ஆளைத் தலை​யில் கறுப்புத் துணி போட்டு கண் மட்டும் தெரியும் அளவில் மூடி, மக்கள் முன்னாடி ஆமி நிறுத்திடும். அவன் மக்களில் ஒவ்வொரு ஆளாகப் பார்ப்பான். யாரையாவது பார்த்து அவன் தலையாட்டினால், அந்த ஆளு புலிக்குத் தொடர்புடையவர், அவரை புலி என்று ராணுவம் பிடிச்சிடும். அப்புறம் அவங்களைக் காணாமல் போனோர் பட்டியலில் சேர்த்துடுவாங்க. அந்தத் தலையாட்டி, மக்களோடு மக்களாக உறவாடியவனாத்தான் இருப்பான். ராணுவத்தின் மிரட்டலுக்கோ, பணத்துக்காகவோ காட்டிக்​கொடுப்பவனாக மாறி இருப்பான். இதில் அப்பாவிகள்தான் நிறைய சிக்குவார்கள். அத்தகைய தலையாட்டிகள் இன்னைக்கும் நிறையப் பேர் இருக்காங்க. அவங்க யாருன்னு தெரியாம, யாரைப் பார்த்தாலும் நாங்க பயந்து நடுங்கிக்கிட்டு இருக்கோம்'' என்றார் வேதனையாக. இதுதான் இன்றைய யாழ்ப்பாணத்தின் உண்மையான நிலை.
முன்பெல்லாம் காலை 9 மணிக்குத்தான் தமிழர்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியும். மாலை 5 மணிக்குள் ஊருக்குள் வந்துவிட வேண்டும். வெளியிடத்தில் வேலை பார்ப்பவர்கள் மாலை 5 மணிக்குள் வீட்டுக்கு வருவது சாத்தியம் இல்லை என்றாலும் வேறுவழி இல்லை. வந்துதான் ஆக வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள்தான் கடந்த 10 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் பகுதியில் இருந்திருக்கிறது. இறுதிப்போர் முடிந்த பிறகு இந்த நிபந்தனையைத் தளர்த்தி இருக்கிறது ராணுவம். ஆனாலும், தமிழர்கள் இரவுக்கு முன்னால் வீட்டை அடைந்து விடுகிறார்கள். விசாரணையே இல்லா விட்டாலும் இரவு அவர்களைப் பயமுறுத்தும் விஷயமாக மாறிவிட்டது.
புராதன கதறுகொட விகாரைக்குச் சென்றேன். வட்ட வடிவில் பழங்காலத்து விகாரைகள் இருந்தன. தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை இருந்தது. 'இது இந்திய அரசு அன்பளிப்பாகக் கொடுத்த சிலை’ என்றார் விகாரை காவலாளி. அந்தப் புத்தரிடமும் ஆயுதம் தரித்த ராணுவம் நின்றது.
அங்கிருந்து வலிகாமம்...
இந்தப் பகுதி விவசாயத்துக்கு ஏற்ற செம்மண் கொண்ட பகுதி. கடல் தொழில்களுக்கும் உகந்தது. வலிகாம மக்களின் விவசாய நிலங்களையும் வீடுகளையும் 1990-ம் ஆண்டிலேயே ராணுவம் பிடுங்கிக் கொண்டது. அப்போது, ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் தங்களது வாழிடத்தில் இருந்து விரட்டப்பட்டனர். ராணுவம் எல்லா இடங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டது. அந்தப் பகுதியில், பார்க்கும் பக்கம் எல்லாம் இடிந்த வீடுகளும் குண்டுகள் துளைத்த சுவர்களும்தான் இருந்தன. மின்சாரம் இல்லை. கல்வி இல்லை. மருத்துவமனை இல்லை. ஊரைச் சுற்றிலும் ராணுவ வளையங்கள் மட்டுமே இருந்தன. ஆங்காங்கே தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இத்தனை வலிகளையும் சுமந்துகொண்டுதான் வாழ்கிறார்கள். சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. மனிதர்களைப் பார்ப்பதே அரிதாக இருந்தது.
மீள்குடியேற்றம் பற்றி விவரித்த தமிழ் அரசியல் பிரமுகர், ''ராணுவம் விடுதலை செய்யும் நிலப்பரப்பு என்பது 10-ல் ஒரு பங்குதான். கீரிமலை, மயிலிட்டி, வசாவிளான், குப்பிழான் போன்ற கிராமங்களில் சில பகுதிகளை விடுவித்து உள்ளனர். ஆனால், இன்றும் வலிகாமத்தின் 26 கிராமங்கள் உயர் பாதுகாப்பு வளையங்களில்தான் உள்ளன. இந்த கிராமங்களின் எல்லைப் பகுதிகளில் ராணுவம் புதைத்து வைத்த கண்ணிவெடிகள் பெரும் அளவில் இருக்கின்றன. மக்களின் நிலங்களில் ராணுவம் விவசாயம் செய்கிறது. விவசாயத்தில் கிடைப்பதை சந்தையில் கொண்டுவந்து மக்களுக்கே விற்​கிறது. வலிகாமத்தின் கடலோரப் பகுதிகளை சுற்று​லாவுக்காக அரசு மேம்படுத்துகிறது. ஆனால், சுற்றுலா மீது செலுத்தும் கவனத்தை மக்கள் மீது செலுத்தவில்லை'' என்றார்.
''பலாலி விமானத் தளத்துக்காகவும், காங்கேசன்துறைக் கடற்படைத் தளத்துக்காகவும் பெரும் நிலப்பரப்பை சிங்கள ராணுவமும் கடற்படையும் ஆக்கிரமித்து உள்ளன. இந்தியாவின் பலாலி விமானத் தளச் சீரமைப்புத் திட்டத்தை இலங்கை நிராகரித்து விட்டு தானே செய்கிறது. காங்கேசன்துறைத் துறைமுகம், இந்தியாவின் 20 மில்லியன் டொலர் உதவியோடு சீரமைக்கப்படுகிறது. அதே​போல் யாழ்ப்பாணத்தில் உள்ள அச்சுவேலித் தொழிற்​பேட்டை சீரமைப்புக்கும் இந்தியா 174 மில்லியன் ரூபாயை இலங்கைக்குக் கொடுத்துள்ளது.
காங்கேசன் துறையின் கடலோரப் பகுதியில் ஒரு பெரும் பகுதியை மின்நிலையம் அமைப்பதற்காக கே.எல்.எஸ். என்ற மலேசிய நிறுவனத்துக்கு 22 ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் குத்தகைக்கு விட்டுள்ளது. அதற்காக அந்த நிறுவனம் 250 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது.
காங்கேசன்துறையில் இலங்கை அரசுக்குச் சொந்தமான சீமெந்து ஆலைக்கு அருகே பல ஏக்கர்களை கோத்தபய ராஜபக்‌ஷவின் நண்பர் ஒருவர் சுண்ணாம்புக் கற்கள் எடுப்பதற்காக ஆக்கிரமித்து வைத்துள்ளார். அவர் ஏற்கனவே ராணுவப் பாதுகாப்போடு அங்குள்ள நிலங்களை சுண்ணாம்புக் கற்களுக்காக அழித்தவர்தான்'' என்றும் அவர் சொன்னார்.
பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் எங்கெங்கோ நடக்கின்றன என்றாலும் பசியோடு கிடக்கிறார்கள் தமிழர்கள். வெளிநாட்டு நிதி எதுவும் தமிழர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்காக செலவிடப்படவில்லை என்பதைத் தெளிவாக உணர முடிந்தது.
யாழ்ப்பணத்தின் மேற்கு கடலோரப் பகுதிதான் மாதகல். இங்கு சம்பில்துறை என்ற இடத்தில் கடற்படையால் அமைக்கப்பட்ட புத்த விகாரை உள்ளது. 2009-ம் ஆண்டு போர் முடிந்த சில தினங்களில் ராஜபக்‌ஷவின் மனைவியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த இடத்துக்கு சிங்கள அரசு வைத்துள்ள பெயர், 'டம்புகொலபட்டுன’. அங்குள்ள ஆசீர்வாதச் சொற்களில் 'சங்கமித்த மஹா றஹத் தேரணியின் இவ் உருவச்சிலை இலங்கைவாழ் மக்களுக்காக சிறீமதி ஜனாதிபதி பாரியார் கௌரவ சிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்‌ஷ அவர்களின் பூரண அனுசரனையுடன் ஜூன் 5, 2009 அன்று சிறீ மஹா போதியின் தென்கிளை சிறீலங்காவுக்கு எடுத்துவரப்பட்டு சங்கமித்த விகாரை பூமியில் பதிக்கப்பட்டு உள்ளது’ என்று வரலாறாக எழுதப்பட்டுள்ளது.
1992 முதல் இது முழுக்கமுழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி ஆகும். சம்பில்துறையில் இருந்து பொன்னாலை வரை சிங்களக் கடற்படைக்காக நிரந்தர வீடுகள் கட்டப்படுகின்றன. ராணுவத்துக்குக் கண்ணுக்கெட்டும் தூரம் வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லவே முடியாத நிலை.
20 வருடங்களுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பகுதி​களுக்கான தேவை, கிராமச் சாலைகள்​தான். ஆனால், அரசு அதை அமைப்பதாக இல்லை. மாறாக, சுற்றுலா மேம்பாட்டுக்காக நகர்ப்புறச் சாலைகளைத்தான் விரிவு படுத்துகிறது, அதீதக் கவனமும் நெடுஞ்சாலைப் பணிகளில்தான் காட்டுகிறது. சிங்களக் கிராமங்களில் 100 பாதைகள் அமைக்கப்படுகின்றன என்றால், தமிழ்ப் பகுதிகளில் 10 பாதைகள் அமைக்கத்தான் ஒப்புதல் கொடுக்கிறது சாலை மேம்பாட்டகம். இப்படி நல்ல சாலைகளுக்குக்கூட வழி இல்லாமல் இருக்கிறது தமிழர் வாழிடம். ஊர் முழுக்க ராணுவம், அடிப்படை வசதிக்கு எதுவும் இல்லாத தமிழ் மக்கள் என்பதே அந்தப் பகுதியின் யதார்த்தம்.
'விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. இதனால் ஐ.நா. சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு யாழ்ப்பாணத்தில் எந்த ராணுவ முகாம்களையும், பாதுகாப்பு வளையங்களையும் அகற்ற முடியாது’ என்று டிசம்பர் 31-ம் தேதி இலங்கை கட்டளைத் தளபதி அறிவித்திருப்பதைப் படித்தால், புலிப் பூச்சாண்டியைக் காட்டியே மீதம் உள்ள தமிழர்களையும் சிறுகச்சிறுக மரணிக்க வைக்க, சிங்கள இனவாதம் முடிவெடுத்துவிட்டது!
ஊடறுத்துப் பாயும்...