Jul 25, 2014

நலம் 360' - 6

சாப்பிடாத குழந்தைக்கு....

வாய்க்கால் வரப்பில் வேலை செய்யும் களத்துமேட்டுப் பெண்கள் முதல் வாட்ஸ்-அப்  பெண்கள் வரை கவலையுடன் பகிர்ந்துகொள்ளும் விஷயம், 'என்ன செஞ்சாலும் என் குழந்தை சாப்பிடுவேனானு அடம் பண்ணுது’ என்பதுதான். 'அதட்டி, மிரட்டி, கொஞ்சி, கெஞ்சி எல்லா ஆட்டமும் ஆடிப் பார்த்தாச்சு. தட்டுல போட்டது அப்படியே கெடக்கு. ஸ்கூலுக்கு டப்பால கொண்டுபோனது அப்படியே திரும்பி வருது. என்ன சார் செய்ய?’ என மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கும் பெற்றோரின் எண்ணிக்கை இப்போது அதிகம். 'சிறுதானிய சுண்டல், பழம், காய்கறிகள்னு என்னென்னவோ சொல்றீங்க. ஆனா, குழந்தை வாயைத் திறந்தாத்தானே அதெல்லாம் கொடுக்க முடியும்’ என அம்மாக்கள் வருத்தப்பட, 'எதுக்கு இந்தக் கவலை? அதான் அத்தனை நல்ல சத்துக்களையும் நாங்க துரித உணவுல, ஊட்டச்சத்து பானத்துல ஒளிச்சுவெச்சுத் தர்றோம்ல’ என அந்த வருத்தத்திலும் வணிகம் பார்க்க நினைக்கின்றன சத்துணவு நிறுவனங்கள். அந்த உணவு மற்றும் பானங்களின் பணப்பரிவர்த்தனை இந்தியாவில் 3,000 கோடிகளைத் தாண்டுகிறதாம்.

சரி... பிரச்னைக்கு வருவோம்!
பசி வந்தால் எந்தக் குழந்தையும், 'மம்மூ தா’ எனக் கேட்டு வாங்கிச் சாப்பிடும். ஆக, குழந்தைகளுக்குப் பசியைத் தூண்டுவதே, உணவூட்டலின் முதல் செயல். ஆனால், 'பள்ளி செல்லும் குழந்தைக்குப் பசியைத் தூண்டுவது எப்படி?’ என்று திட்டமிட்டு பிரயோஜனம் இல்லை. ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்தே, அந்த அக்கறை தேவை என்கிறது நம் பாரம்பரியம்.
தமிழர் மருத்துவத்தில், வாழ்வியலில் 'மாந்தம்’ என்ற அற்புதமான ஒரு சொல் வழக்கில் இருந்தது. ஆனால், இன்றைய துரித யுகத்தில் அது ஒட்டுமொத்தமாகத் தொலைந்துவிட்டது. மாந்தத்தைச் சரிசெய்யாவிட்டால், குழந்தைகளுக்கு சுலபத்தில் பசியெடுக்காது. அதுவே, வருங்காலத்தில் பல நோய்களுக்கு வழிவகுக்கும்.  குழந்தை உடல் எடை குறைந்து, நோஞ்சானாக இருக்கும். பசி குறைந்திருத்தல், மலக்கட்டு, ஜீரணம் இன்றி மலம் கழிதல், நீர் அல்லது சீதமுடன்கூடிய வயிற்றுப்போக்கு... என, பச்சிளங்குழந்தைகள் மந்தமாக இருப்பதைத்தான் மாந்த நோய்களாக அடையாளம் காட்டினார்கள் நம்மவர்கள்.
குழந்தை அழுவதைவைத்தும், அதற்கு வரும் காய்ச்சலின் தன்மையைக்கொண்டும், வீசிங் எனும் இரைப்பில் அது படும் அவஸ்தைகளைக்கொண்டும் அதற்கு அள்ளு மாந்தம், போர் மாந்தம், சுழி மாந்தம் என மிக அழகாக விவரித்த 'பீடியாட்ரீஷியன்’ பாட்டிகள் அன்றே நம்மிடையே உண்டு. டயாப்பர் இல்லாத காலத்தில் ஒரு பேருந்து பயணத்தின்போது பக்கத்து இருக்கையில் அம்மா கையில் இருந்த குழந்தை ஒன்று மலம் கழித்துவிட, 'முதல்ல மாந்தத் தைச் சரிசெய்யுமா... இல்லைனா கணச்சூடு ஏறி குழந்தை வாடிப்போயிடும். அப்புறம் நீ எதைக் கொடுத்தாலும் உடம்பு பிடிக்காது’ எனச் சொல்லிய அக்காக்களை இப்போது பார்க்க முடியவில்லை. வருங்காலத்தில் கணச்சூடு போன்ற உபாதைகள் வராமல், குழந்தைகளின் மாந்தப் பருவத்திலேயே வாரம் ஒரு நாள் வேப்பங்கொழுந்து, ஓமம், மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து மிளகு அளவுக்கு உருட்டி, அதில் தேன் கோட்டிங் கொடுத்து, வயிற்றுப்புழு நீக்கும் பழக்கமும் காணாமல் போய்விட்டது.
தாய்ப்பால் கொடுக்கும் சமயம், நிலக்கடலை உள்ளிட்ட ஜீரணிக்கச் சிரமம் தரும் பொருட்களைச் சாப்பிடாதீர்கள் என நம் முன்னோர்கள் சொல்வதை, நவீனம் முன்பு மறுத்தது. ஆனால், இப்போது அதே நவீனம், 'பிரசவித்த தாய் ஒருவேளை சாப்பிடும் ஏதேனும் புரதப்பொருள், தாய்க்கு ரத்தத்தில் lgE-ஐ அதிகரித்தால் (lgE- உடலின் அலர்ஜி பாதிப்புக் குறியீடு), அது தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு வரக்கூடும். அதனால், குழந்தைக்கு மாந்தமோ, கரப்பான் எனும் அலர்ஜி தோல்நோயோ வரலாம். எனவே, நிலக்கடலை குறைச்சுக்கலாமே, சோயா வேண்டாமே’ என்கிறது. ஒரே விஷயம்தான்... வேறு மொழியில்; வேறு வார்த்தைகளில்!
குழந்தைக்கு தாய்ப்பால் வழியாக நல்ல விஷயங்களைக் கொண்டுசென்று, திட உணவு (weaning food) சாப் பிடத் தொடங்கும் சமயம் ஜீரணத்தைத் தூண்டி, நன்கு பசிக்கவைக்கவும்தான், 'பிரசவ நடகாய் லேகியத்தில்’ அத்தனை மணமூட்டி மூலிகைகளையும் சேர்த்து, பிரசவித்த பெண்ணுக்கு அன்று தாய் வீட்டில் கொடுத்தனர். வீட்டிலேயே கிளறிக் கொடுக்கப்படும் அந்தச் சிறப்பு உணவில் உள்ள தண்ணீர்விட்டான் கிழங்கும், வெந்தயமும், பூண்டும் தாய்க்கு அதிக பால் சுரப்பைக் கொடுக்கும் என்றுதான் நெடுநாட்களாக சித்த ஆயுர்வேத மருத்துவர்கள்கூட நினைத்திருந்தனர். ஆனால், சமீப ஆய்வுகள் அந்த வெந்தயமும் பூண்டும் தாய்க்கு மட்டுமல்ல குழந்தைக்கும் உரமூட்டும் என்று உணர்த்துகிறது!
ஒன்றரை, இரண்டு வயதில் மாந்தத்தினால், அடிக்கடி வயிறு உப்புசத்துடன் வயிற்றுப்போக்கும் இருக்கும் குழந்தைக்கு, மிக அதிகமாகப் பயன்படும் மூலிகைக் கீரை உத்தாமணி. 'உத்தமம்’ என மகுடம் சூட்டி நம் சமூகம் கொண்டாடிய மூலிகை அது. வீட்டிலேயே விளக்கெண்ணெயில் உத்தாமணிச் சாற்றை சேர்த்துக் காய்ச்சி, அந்த எண்ணெயைக் குழந்தைகளுக்கான முதல் கைவைத்திய மருந்தாகப் பயன்படுத்திய நெடுநாள் வரலாறு நம்மிடையே உண்டு. அதைவிட அசரவைக்கும் செய்தி, அதைக் குழந்தைக்குப் பரிமாறிய விதம்! 'டிராப்பரில்’ வைத்து வாயில் ஊற்றினால், கொடுக்கும்போது ஒருவேளை குழந்தை திமிறி, மருந்து உணவுக்குழாய்க்குப் பதில் மூச்சுக்குழாய்க்குப் போய் நிமோனியா வந்துவிடக் கூடாது என எச்சரிக்கைகொண்டிருந்தனர் அப்போதே. அதனால் உத்தாமணி எண்ணெயை, தாயின் மார்புக்காம்பில் தடவி பால் கொடுக்கும்போது முதல் துளியாக உறிஞ்சவைக்கச் செய்திருக்கிறார்கள். அதுவும் குழந்தை குளித்ததும் பசித்திருக்கும்போது, எண்ணெயின் சுவை உணராதபடி வேகமாக உறிஞ்சும் என்பதால், அந்தச் சமயமே மருந்தைத் தடவச் சொன்ன நம் பாட்டி எந்தப் பட்டமும் படிக்காத விஞ்ஞானி!
பிறக்கும் முன், பிறந்த குழந்தைகளுக்கு இதெல்லாம் சரி..? வளர்ந்த குழந்தைகளின் மாந்தத்துக்கு என்ன செய்வது? 'போக்கை அடக்குமாம் பொடுதலை; ஆற்றை அடக்குமாம் அதிவிடயம்’ என்கிறது மாந்தத்துக்கான சித்த மருத்துவ முதுமொழி. மாந்தத்தில் வரும் வயிற்றுப்போக்கை அடக்கும் குணம் பொடுதலைக்கு உண்டு. ஆறு சீற்றத்துடன் பாய்வதைப்போல நீராகக் கழியும் வயிற்றுப் போக்குக்கு அதிவிடயம் அருமருந்து. பொடுதலையைச் சாறாக எடுத்துச் சூடாக்கி சுரசம் பண்ணியும், அதிவிடயத்தைக் கஷாயமிட்டும் கொடுத்தால் மாந்தம் மறையும்.
பின்னாளில் 'கணச்சூடு’ என்று அன்று சொன்ன பிரைமரி காம்ப்ளக்ஸ் எனும் இளங்காச நோயின் வருகைக்கு, சிவப்புக் கம்பளம் விரிப்பதுகூட இந்த மாந்தம்தான். 'மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் எனும் கிருமிதானே அதைத் தருகிறது. மாந்தக் கழிச்சலுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?’ எனப் படித்தவர்கள் வினவலாம். கழிச்சலில் குறைந்த நோய் எதிர்ப்பாற்றலில் சாதாரணமாகத் திரியும் அந்தக் கிருமி உடலுக்குள் குடித்தனம் நடத்த ஆரம்பித்து, நுரையீரலில் தொடங்கி அத்தனை உறுப்புகளையும் பதம் பார்ப்பது அதனால்தான். நவீன மருத்துவத்தில் 6 - 8 மாத காலத்தில் இதனை முற்றிலுமாக ஒழிக்க மருந்து இருக்கும் நிலையிலும், 'எங்களுக்கெல்லாம் இது வருமா?’ என்ற அலட்சியத்தில் மெலிந்த பல குழந்தைகள், பசியில்லாக் குழந்தைகள் காசநோயின் கணிப்பில் இருந்து தப்பி பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
'காசம் மட்டுமல்ல... ஆட்டிச நோய் நிவாரணத்துக்குக்கூட இந்த மாந்தக் கழிச்சலை முதலில் சரிசெய்யுங்கள். அது குழந்தையின் மூளைச் செயல்சிதறலைச் சரியாக்கி மீட்டெடுக்கும்’ என ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இத்தனைக்கும் காரணமான மாந்தத்துக்குத் தடுப்பாக நம் வாழ்வியலோடு ஒட்டியிருந்த விஷயங்கள் ஏராளம். பல்லூறும் பருவத்தில் வாயில் கடிக்க கையில் வசம்பு வளையல், வைத்து விளையாட வேங்கை மரத்தில் செய்த மரப்பாச்சி பொம்மை எல்லாம் இப்போதைய பார்பி டால்களிடமும் டெடி பியர்களிடமும் தோற்றுவிட்டன.
'போர்மாந்தக் கட்டை’ என்ற ஒன்று, திருச்சி மாவட்டப் பகுதிகளில் இருந்து வந்திருக்கிறது. 'குழந்தைகள் பசி இல்லாமல் மாந்தமாக இருக்கும்போது இந்தக் கட்டையில் உரைத்தோ அல்லது உடைத்துக் கஷாயமாக்கியோ பயன்படுத்தி மாந்தம் போக்கியிருக்கின்றனர்’ என்ற குறிப்பை தமிழ் மூதறிஞர் கி.ஆ.பெ. வரை பலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இப்போது அதைக் கேட்டால் பலருக்கும் தெரியவில்லை. மாந்தத்துக்கு அதிகம் பயன்படுவது நுணா மரக்கட்டையா, வேங்கை மரக்கட்டையா எனச் சித்த மருத்துவர்கள் இப்போதும் ஆராய்ந்து வருகின்றனர்.
கருச்சிதைவு குறைந்திருப்பது, மகப்பேறு சமயத்தில் தாய்-சேய் மரணங்கள் பெருவாரியாகக் குறைந்தது, பெருமளவில் அதிகரித்துள்ள தாய்-சேய் நலம் எல்லாமுமே நவீன மருத்துவமும் பொதுச் சுகாதாரப் புரிதலும் வந்ததால்தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதே சமயம் கொஞ்சம் அழுக்குப் படிந்திருக்கிறது என்பதற்காக, கழுத்துச் சங்கிலியைக் கழட்டி எறிவோமா நாம்? ஆனால், மரபு விஷயத்தில் அப்படித்தான் நடக்கிறது. நவீன அறிவியலாளரும் நவீன மருத்துவத் துறையும், இணைந்து பாரம்பரிய மருத்துவத்தில் தொலைந்தும், தூசி ஏறியும், மறைந்தும் இருக்கும் பல மகத்துவங்களை மீட்டு எடுக்க வேண்டிய காலம் இது. இணைவதில் மீட்டு எடுக்கவேண்டியது, பன்னாட்டுப் பிடியில் சிக்கியிருக்கும் நலவாழ்வு மட்டுமல்ல; இந்திய மண்ணின் உற்பத்தித் திறனும்தான்!
- நலம் பரவும்...
பஞ்சமூட்டக்கஞ்சி!
'பஞ்ச காலத்தில் ஊட்டக்கஞ்சி’ என்றும், 'ஐந்து பொருட்களால் செய்யப்படுவதால்’ என்றும்... இதற்குப் பெயர்க் காரணம் சொல்வார்கள். அரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, சிறுபருப்பு, துவரம்பருப்பு எல்லாவற்றிலும் சமபங்கு எடுத்துக்கொண்டு, நன்கு வறுத்து வெள்ளைத்துணி ஒன்றில் தளர்வாக முடிந்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு, நீரின் மத்தியில் இது தொங்கும்படியாக பாத்திரத்தின் குறுக்கே ஒரு கம்பியில் கட்டி நீரைக் கொதிக்கவிட வேண்டும். நீரில் மூழ்கி இருக்கும் பொட்டலத்தின் தானியங்கள் நன்கு வெந்து,  புரதமும் சர்க்கரையும் பிற சத்துக்களும் நீரில் கஞ்சியாகக் கரைந்துவரும். இந்தக் கஞ்சி, உடலுக்கு மிக ஊட்டம் தந்து உடல் எடையை அதிகரிக்கவைக்கும்!
நேந்திரம்பழக் கஞ்சி
நேந்திரம் வாழைக்காயைத் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, வெயிலில் உலரவைத்துப் பொடித்துக்கொள்ளவும். அந்தப் பொடியில் துளி சுக்கு சேர்த்து, கஞ்சி காய்ச்சுவதுபோல காய்ச்சிக் கொடுக்க எடை கூடும். இது கேரளா ஸ்பெஷல்!
பஞ்ச தீபாக்கினி சூரணம்
சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம்... இவற்றின் கூட்டணிக்கு இப்படி ஒரு பெயர் உண்டு. சுக்கை மேல் தோல் சீவியும், பின் எல்லாவற்றையும் லேசாகப் பொன் வறுவலாக வறுத்தும் பொடி செய்துகொள்ளவும். அந்தக் கூட்டணிப் பொடியின் எடைக்குச் சமமாக நாட்டு ஆர்கானிக் வெல்லம் கலந்துகொண்டால், பஞ்ச தீபாக்கினி சூரணம் ரெடி. பசியைத் தூண்டும் இந்தப் பொடியை, 3 சிட்டிகை எடுத்து, ஒரு ஸ்பூன் அளவு தேனில் கலந்து, குழந்தைகளுக்குக் காலை உணவுக்கு முன் கொடுத்து வந்தால், மதியம் லன்ச் பாக்ஸ் எப்போதும் காலியே!

சாப்பிடாமல் மெலிந்திருக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு...
1. அன்பு, அரவணைப்பு, பாராட்டு, அக்கறை,   உணவில் அழகூட்டுதல் போன்றவற்றை நீங்கள் சமையலுக்கு முன்னும் பின்னும் சேர்க்காமல் இருப்பதும் பசியின்மைக்குக் காரணங்களாகும். அதில் முதலில் கவனம் செலுத்துங்கள்.
2. 'ஸ்வீட் எடு.. கொண்டாடு!’ என இருக்க வேண்டாம். கொண்டாட்டம் என்றால், 'பழம் எடு... பரவசமாகு’ என கற்றுக்கொடுப்போம். அத்தனை இனிப்புப் பண்டங்களும் பசியடக்கி கபம் வளர்க்கும். குறிப்பாக 'மில்க் ஸ்வீட்’!
3. 'எல்லாத்தையும் சேர்த்துக் கொடுத்திருக்கோம்! அது புத்திசாலியாக்கும், ஓட வைக்கும், உயர வைக்கும், அழகாக்கும்...’ என சந்தையின் பாக்கெட் உணவுகளை முடிந்தவரை அன்றாட உணவில் இருந்து நீக்கிவிடுங்கள். பசி தானாக வரும்.
4. சாதாரண கீரை சாதம், மாவடுடன் மோர் சாதம், பால் கொழுக்கட்டை, மோதகம், ராகி உருண்டை, கருப்பட்டி சோளப் பணியாரம், உளுந்தங்களி, மாலாடு, கறிகோலா உருண்டை, சுறா மீன் புட்டு... இந்த உணவுகள் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கும்!
5. 'எல்லாம் கெடக்கு... அப்படியும் வாயைத் திறக்க மாட்டேங்கிறான்’ என்போர் ஏதேனும் வியாதி இருக்கிறதா என உங்கள் குடும்ப மருத்துவரிடம் கேளுங்கள். தைராய்டு, காசம் முதல் சிலியாக் வியாதி, சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் வரை பல வியாதிகள் பசியின்மைக்குக் காரணங்களாக இருக்கலாம்!

Jul 23, 2014

நலம் 360’–5


வ்வொரு பெண்ணும் பூப்பெய்தியதில் இருந்து, தோராயமாக 35 வருடங் களாகவது, மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்களை கொஞ்சம் வலி, கொஞ்சம் சிரமம், கொஞ்சம் பயம், கொஞ்சம் சுகவீனம் கலந்தே நகர்த்தி வருகிறார்கள். 47-51 வயதை எட்டும்போது மாதவிடாய் நின்று, ‘இனிமேல் இது இல்லை’ என்ற விடுதலையைத்தான் ‘மெனோபாஸ்’ என்கிறார்கள். இது நல்ல உடல்வாகைப் பெற்றிருக்கும் 35 சதவிகிதத்துக்கும் குறைவான பெண்களுக்குத்தான். மீதமுள்ள 65 சதவிகிதத்தினர் இந்த நாட்களில் படும் அவஸ்தைகள், அனுபவித்தால் மட்டுமே புரியும். சாதாரண ரத்தசோகையில் இருந்து, வாந்தி, தலைவலி, பிழியும் வயிற்று வலி, வயிற்று உப்புசம்… என உபாதைகள் அவஸ்தையாக, ‘சனியன்… இது எப்போ ஒழியும்?’ என்று உதிரத்துக்கு முன்னதாகவே கண்ணீர் ஊற்று எடுக்க, இறுதி யுத்தத்துக்குக் காத்திருப்பார்கள்.

‘மாதவிடாய் நிறுத்தத்தை, இயல்பான உடல் இயங்கியல் நகர்வு’ என்று நினைத்துதான் பெண்ணுலகம் இத்தனை காலம் அதனைக் கடந்து வந்தது. ஆனால், நிலைமை சமீபமாக அப்படி இல்லை. ‘மூட்டுவலி, இடுப்புவலி, இதயப் படபடப்பு, திடீர் வியர்வை, தனிமையான பய உணர்வு’ எனப் பல சிக்கல்களை மெனோபாஸ் தோற்றுவிக்கிறதோ எனச் சந்தேகம் உண்டாகிறது. மாதவிடாய் முடிவை பல்நோய்க்கூட்டமாகவும், நோயின் முதல் அறிகுறியாகவும் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். ‘சில மாற்றங்களுக்குத் தயாராகும் மனமும் உடலும் தயங்கித் திணறும் சில பொழுதுகள் மட்டும்தான் அப்படி. அதெல்லாம் சீக்கிரமே சரியாகிடும்’ என்று கூறிக்கொண்டே, ‘எதுக்கும் இந்த டெஸ்ட் எல்லாம் பண்ணிடுங்க…’ என்று ஒரு பட்டியலையும் நீட்டுகிறார்கள் மருத்துவர்கள்.
‘உனக்கு எதுக்கும்மா இப்போ அனார்கலி சுடிதார்?’ என்ற வளர்ந்த குழந்தைகளின் உதாசீனங்களும், கூடவே தொலைந்துபோய்விட்ட அவசர முத்தங்கள், அரவணைப்புகள், ‘அட’ எனும் ஆச்சர்யங்கள், சந்திக்க மறுக்கும் கண்கள்… என கணவரின் விலகல் தரும் வலி, பலருக்கு இப்போது மாதாமாதம் அல்ல… தினமும் உண்டு. ‘முகச் சுருக்கமும் வாடலும் உலர்ந்துபோய்விட்ட சருமமும் மகப்பேறுகள் தந்த தொப்பையும்தான், என்னை இப்படி அவரிடம் இருந்து விலக்கி வைக்கின்றனவா? அல்லது மகன்/மகளின் மொழி, உடை, அசைவு, அலங்காரம் அவர்களது முக்கியங்கள், படிப்பு, பரபரப்பு… என எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியவில்லையே… அதனாலா?’ என்ற குழப்பத்துடன் நகரும் நாட்கள் இவை. உடலும் மனமும் வதைபடும் இந்த நாட்களில் என்ன செய்ய வேண்டும், எதைச் சாப்பிட்டால் மீண்டும் புத்துணர்வு பெறலாம், இது நோயா… அல்லது வெறும் பயமா? ஏராளமான சந்தேகங்கள் மெனோபாஸ் பருவப் பெண்களை அலைக்கழிக்கும். ஆங்கிலத்தில் இதனை Empty nest syndrome என்பார்கள்.

தாய்ப் பறவை, தினம் தினம் தன் கூட்டிலுள்ள குஞ்சுகளுக்கு உணவு எடுத்து வந்து வாயில் புகட்டும். ஒருநாள் அப்படி வரும்போது கூட்டில் எந்தக் குஞ்சும் இல்லாததைக் கண்டு, பதறி அலறி முடங்குமாம். அந்தக் குஞ்சுகளுக்கு இறக்கை வளர்ந்து தனியாகப் பறந்து            போய்விட்டன எனத் தாய்ப் பறவைக்குத் தெரியாது; புரியாது. இந்த வலியை, படபடப்பைத்தான், மாதவிடாய் முடிவில் இருக்கும் தாயுடன் ஒப்பிடுகிறார்கள்.
இனிமேல் கருமுட்டை வேண்டாம் என உடல் நிறுத்திக்கொள்ளும் இந்தப் பருவத்தில்தான், எலும்புகளின் சுண்ணாம்பு அடர்வு குறைய ஆரம்பிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு ‘வி.ஆர்.எஸ்’ எடுத்துக்கொள்வதால், இந்தக் குறைபாடு நிகழ்வதாக நவீன மருத்துவம் கூறுகிறது. இதனால் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ், மகப்பேறு சமயம் விரிந்து சீரான கூபக (pelvis) எலும்புகளைப் பாதிக்கும். அதோடு மாதவிடாயின்போதும் ஓய்வின்றி அடுப்பு ஏற்றி, ரயில் ஏறி, பஸ் ஏறி, எவரும் தன் சிரமம் உணராவண்ணம் ஓடியாடி உழைத்ததில், கால் மூட்டுகளில், கழுத்து – இடுப்பு எலும்புகளில் பெரும்பாலும் கால்சியம் குறையும். இதைத் தவிர்க்க சற்றே அதிகப்படி கால்சியம் சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக தினசரி 1,000 மி.கி கால்சியம் தேவைப்படும்போது, மெனோபாஸ் சமயத்தில் 1,250 மி.கி வரை அவசியமாம். அப்படி எடுக்கத் தவறும்போது, முதுமையில் குளியலறையில் வழுக்கி விழுந்தால், பாட்டிகளுக்கு தொடை எலும்பின் பந்து கழுத்துப்பகுதி உடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்!
மாதவிடாய் முடியும் தருவாயில் கால்சியம் மட்டும் போதாது; வைட்டமின்-டி சத்தும் தேவை என்கிறது அறிவியல். அதனால், இப்போது வைட்டமின்-டி பரிசோதனை கிடுகிடுவெனப் பிரபலமாகி வருகிறது. மெனோபாஸ் மட்டுமல்லாது, சர்க்கரை வியாதி, இதய வியாதி, ரத்தக் கொதிப்பு/கொழுப்பு என எதற்கு வைத்தியம் செய்தாலும், ‘எதுக்கும் வைட்டமின்-டி சரியா இருக்கானு பார்த்துக்கங்க…’ என அறிவுறுத்துகிறார்கள். சூரிய ஒளியில் இருந்து மனித உடல் தானே இதனைத் தயாரித்துக்கொள்ளும் நிலையில், நம்ம ஊரில் குறைச்சலாகவா சூரிய ஒளி இருக்கிறது… இங்க எதுக்கு இதெல்லாம்? என யோசித்தால், உண்மை விவரம் உலுக்குகிறது.
இந்தியரில் 79 சதவிகிதத்தினருக்கு வைட்டமின்-டி மிகக் குறைவாகவும், 15 சதவிகிதத்தினர் பற்றாக்குறையுடனும், 6 சதவிகிதத்தினருக்கு மட்டுமே சரியான அளவிலும் இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. சூரிய ஒளி தரும் யுவி கதிரை, சருமத்துக்கு அடியில் உள்ள கொழுப்புச் சத்தும் ஈரலும் சேர்ந்து ‘வைட்டமின்-டி3’ ஆக உருமாற்றி அனுப்பும் சம்பவம், பெரும்பாலானோருக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துபோனது ஏன் எனப் புரியவே இல்லை. ‘ஏ.சி-யில் வேலை செய்கிறார்கள், சூரிய ஒளியையே பார்ப்பது இல்லை, சன் ஸ்கிரீன் லோஷன் தேய்க்கிறார்கள்…’ எனப் பல காரணங்களை அடுக்குகிறார்கள். ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி, உணவிலும் சூழலிலும் வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்ற ரீதியிலும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
வைட்டமின்-டி சேர்க்காத பால் விநியோகமும், பலர் சைவம் மட்டுமே சாப்பிடுவதும்தான் இதற்குக் காரணங்கள் எனச் சொல்லும் மருத்துவ ஆய்வாளர்கள், அயோடின் சேர்த்த உப்பு போல, ‘வைட்டமின்-டி’யையும் அனைத்திலும் சேருங்கள் எனக் கிட்டத்தட்ட அலறுகிறார்கள். அயோடின் உப்பு தரும் நன்மை-தீமை(?) குறித்த விவாதங்களே இன்னும் நிலுவையில் இருக்கும்போது, இது வேறா எனத் தோன்றுகிறது. அதோடு, அந்த அலறலுக்குப் பின்புறம் இருப்பது அக்கறையா, வணிக் கண்ணியா என்ற பயமும் உள்ளது. இப்போது வாரத்துக்கு ஒருமுறையேனும் வைட்டமின்-டி மாத்திரை சாப்பிடுங்க எனச் சொல்வது மருத்துவ சம்பிரதாயமாகி வருகிறது.
‘அந்த அரசியல் எல்லாம் இருக்கட்டும். முதல்ல எங்களுக்கு கால்சியமும் வைட்டமின்-டி வேறு எங்கு கிடைக்கும்? அதைச் சொல்லுங்க!’ எனக் கேட்போருக்குச் சில செய்திகள்.
பால், கால்சியத்துக்கான சரியான தேர்வு என்றாலும், பால் அருந்துவதால் உண்டாகும் பக்கவிளைவுகளைப் பார்க்கையில், மோர்தான் ‘பெட்டர் சாய்ஸ்’ என்று தோன்றுகிறது. ஒரு குவளை மோரில் கிட்டத்தட்ட 250 மி.கி கால்சியம் கிடைக்கும். சில வகை கீரை, வெண்டைக்காய், சோயா பீன்ஸ், தொலியுடன்கூடிய உருளை, அத்திப்பழம், பாதாம் பருப்பு… இவற்றில் கொஞ்சம் கொஞ்சம் கால்சியம் உண்டு. கீரை, சூரிய ஒளியில் வளரும் சில காளான்கள், மீன், முட்டை, இறைச்சி, ஈரலில்… வைட்டமின் டி அதிகம் கிடைக்கும்.
பெண்களுக்கு மெனோபாஸ் சமயத்தில் வரும் இன்னொரு பிரச்னை, கேன்சர் பயம். புள்ளிவிவரங்கள் சொல்லும் மார்பகப் புற்றின் எதிர்பாராத அளவு உயர்வு, காலங்காலமாக நம்மிடையே உள்ள கர்ப்பப்பை வாய்ப் புற்று இரண்டுமே சமீபத்திய துரித வாழ்விலும், சிதைந்த உணவிலும், மன அழுத்தத்திலும் இன்னும் கூடிக்கொண்டே போகின்றன. ஒவ்வொரு பெண்ணும், இந்தப் பருவத்தில் மார்பகங்களை மேமோகிராம் மூலம் பரிசோதித்துக்கொள்வதும், கர்ப்பப்பை வாய்ப் பகுதிக்கு பாப்ஸ்மியர் சோதனை மேற்கொள்வதும் அவசியமான ஒன்று. தங்கள் பரம்பரையில் முன்பு புற்று வரலாறு இருந்தால்கூட, அவை வரும் வாய்ப்பு அதிகம். நிறைய மகளிர், மாதவிடாய் முடியும் சமயம் வரும் கர்ப்பப்பை நார்க்கட்டியைப் பார்த்து, புற்றுக்கட்டியோ என்ற அச்சத்தில், கர்ப்பப்பையை அறுவைசிகிச்சை செய்து நீக்கிவிடும் போக்கு, மிக அதிகமாக நடக்கிறது. குறிப்பாக, இந்த அறுவைசிகிச்சை கிராமங்களிலும் செமி நகரங்களிலும் அதிகம். புற்றுக்கான மரபு வாய்ப்பு, மிக அதிக ரத்தப்போக்கும் அதனால் ஏற்படும் அனீமியாவையும் தவிர, பிற காரணங்களுக்கு அறுவைசிகிச்சை அவசியம் இல்லை. 30-35 வயதுகளில் ஏற்படும் இந்த வகையான கர்ப்பப்பை நீக்கத்தில், செயற்கையாக நிகழும் மெனோபாஸ், நிறையப் பேருக்கு உடல் எடை திடீர் அதிகரிப்பு, மூட்டுவலி, உளவியல் சிக்கலை ஏற்படுத்தும். அதிக ரத்தப்போக்குடன் சின்ன நார்க்கட்டிகள் இருக்கும்பட்சத்தில், சாப்பாட்டில் துவர்ப்பு சுவை அதிகம் உடைய உணவுகள் சேர்ப்பது அவசியம். வாழைப்பூ பொரியல், வாழைத்தண்டு தயிர்பச்சடி, சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், கிரீன் டீ… போன்றவை துவர்த்து உடல் காப்பவை. எந்தக் கட்டியும் வளரக் கூடாது எனில், இனிப்பு குறிப்பாக வெள்ளை அரக்கனான சர்க்கரையைத் தவிர்ப்பது மிக முக்கியம்.
இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கைதான் மெனோபாஸுக்கான முதல் எண்ணம். ‘நீ ஏன் என்னோட டிசைனர் ஸாரியைக் கட்டக் கூடாது?’ என மகளின் அன்பான அக்கறையும், ‘என்னோட காலேஜ் ஃபங்‌ஷனுக்கு நீ கண்டிப்பா வர்ற… சொல்லிட்டேன்’ என்ற மகனின் பாசமான கண்டிப்பும் மெனோபாஸுக்கான தடுப்பு வேக்சின்கள். ‘தினம் ஓடிக்கிட்டே இருக்கிற… இன்னைக்கு கம்பு தோசையும் கடலைச் சட்னியும் நாங்க செஞ்சு தர்றோம். நீ கொஞ்சம் டி.வி பாரு, புத்தகம் படி, கேண்டி க்ரஷ் விளையாடு…’ என்ற கணவரின் கரிசனமும் மாதவிடாய் சம்பந்தமான, பிரிஸ்கிரிப்ஷனில் இடம்பெறாத மிக முக்கியமான மருந்துகள்!

உணவு யுத்தம் ! – 24




காபி எதற்காக நெஞ்சே?
‘குடும்பப் பெண்கள் எவரும் காபி கடைகளுக்கு வரமாட்டார்கள். அங்கே பரத்தையர்கள் மட்டுமே வருவார்கள்’ என்ற சூழ்நிலை நிலவியதால் பல காபி ஹவுஸ்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ‘ஆண்கள் நேரம் போவது தெரியாமல் காபி குடித்துக்கொண்டு, வேசிகளுடன் அரட்டை அடித்துப் பொழுதைப் போக்குகிறார்கள். இதனால், இரவு தாமதமாக வீடு திரும்பும் ஆண்களின் செக்ஸ் ஆசை குறைந்துவிட்டது’ என மனைவிகள் போர்கொடி தூக்கினார்கள்.

காபி கடைகளுக்கு எதிராகப் பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். காபி குடிப்பதால் ஆண்மை பறிபோகிறது என வழக்கு மன்றத்தில் புகார் அளிக்கப்பட்டு நீதிவிசாரணை நடைபெற்றது.
இன்னொரு பக்கம், ஜெர்மனியில் அறிமுகமான காபி கடைகளில் அதிகம் பெண்கள் கூடுகிறார்கள் என்பதால், ஆண்களுக்கு இடம் கிடைக்காமல் போனது. காபி கடைகள் காதலர்களின் மையமாக உருவானது.
ஆரம்பக் காலங்களில் காபி விற்பனையை அதிகப்படுத்த வேண்டி அதை மருந்துப்பொருள் என விற்பனை செய்ய ஆரம்பித்தனர். சுவையூட்டும் பானமாக மட்டுமின்றி, நரம்புகளுக்குப் புத்துணர்வு தரும் மருந்து எனவும் விற்பனை செய்யப்பட்டது. ஆகவே, காபி மருந்துகடைகளில் வைத்து விற்கப்பட்டது.
17-ம் நூற்றாண்டில் டச்சு வணிகர்கள் மூலம் காபி ஜப்பானுக்கு அறிமுகமானது. அங்கே காபி பெரிய வரவேற்பு பெறவில்லை. 1888-ல்தான் டோக்கியோவில் முதன்முறையாக ஐரோப்பிய காபி கடை ஒன்று திறக்கப்பட்டது. அதற்கு முறையான வரவேற்பு இல்லாமல் போனதால், நான்கு வருடங்களில் மூடப்பட்டது. ஆனால், 1930-களுக்குப் பிறகு ஜப்பானில் மீண்டும் காபி மோகம் தலைதூக்கியது. 30 ஆயிரம் காபி கடைகள் நாடு முழுவதும் உருவாகின. மரபாக தேநீர் அருந்துகிற நாடாக இருந்தபோதும், இன்று ஜப்பான் உலகில் அதிகம் காபி குடிக்கும் நாடுகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகிறது.
காபி தோட்டங்களில் வேலை செய்வதற்காக, ஒரு மில்லியன் ஆப்பிரிக்க மக்கள் கொத்தடிமைகள் ஆக்கப்பட்டார்கள். கரிபீயத் தீவுகளில் காபி விளைவிக்க அடிமைகளே பயன்படுத்தப்பட்டார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போலவே காபி தோட்டங்களிலும் அடிமை முறை பரவலாக இருந்தது. இன்றும் சிக்மகளூரில் உள்ள காபி தோட்டங்களில், பழங்குடி மக்கள் கட்டாய உழைப்பு செலுத்த வேண்டிய சூழல் உள்ளது.
1615-ல் காபி ஐரோப்பாவுக்கு அறிமுகமானபோது, அது உடலையும் மனத்தையும் கெடுக்கும் பானம் என, அதை தடை செய்யும்படியாக போப் ஆண்டவரிடம் கத்தோலிக்கப் பாதிரிகள் முறையிட்டார்கள். ஆனால் அவர் காபியை தடை செய்ய மறுத்துவிட்டார்.
சீனாவுக்கு ஜெசுவிட் பாதிரியார்கள் மூலம் காபி 1800-களில் அறிமுகமானது. ஆரம்ப நாட்களில் சீனர்கள் எவரும் காபி கடைகள் வைப்பதற்கு முன்வரவில்லை என்பதால், இந்தக் கடைகளை மேற்கத்திய வணிகர்களே நடத்தினார்கள். சீன காபி ஐரோப்பிய காபிகளைப் போலின்றி வாசனைப் பொருட்கள் சேர்க்கப்பட்டு புதிய நறுமணத்துடன் புகழ்பெறத் தொடங்கிய பிறகே, சீனர்கள் காபி கடைகளைத் தொடங்கினார்கள். இன்று உலகெங்கும் சீன காபி கடைகள் புகழ்பெற்று விளங்குகின்றன.
எத்தியோப்பியாவில் காபி குடிப்பது என்பது ஒரு சடங்கு. வீட்டுக்கு யாராவது விருந்தினர் வந்தால், அவர்களுக்கு என விசேஷமாக காபி தயாரிப்பார்கள். இதற்காக, காபி கொட்டைகள் வறுத்து அரைக்கப்பட்டு சூடாக காபி தயாரிக்கப்படும். இந்த காபி தயாரிக்க ஒரு மணி நேரமாகும். அப்படித் தயாரான காபியை உடனே குடித்துவிடக் கூடாது. விருந்தினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக காபியைக் குடித்து முடிக்க ஒன்றிரண்டு மணி நேரமாகும். குடிக்கக் குடிக்க காபியை நிரப்பிக்கொண்டே இருப்பார்கள். இதனால், ஒரு வீட்டுக்கு காபி குடிக்கப் போய்வருவதாக இருந்தால், நான்கு மணி நேரம் தேவைப்படும். அந்த அளவுக்கு காபி குடிப்பது எத்தியோப்பியாவில் பண்பாடாக மாறியிருக்கிறது.
உடனடியாகக் குடிப்பதற்கு ஏற்றார்போல இன்ஸ்டன்ட் காபி பவுடர் தயாரிப்பது 1771-ல் பிரிட்டனில் அறிமுகமானது. 1853-ல் அமெரிக்காவில் கேக் வடிவில் காபி பவுடர் தயாரிக்கப்பட்டது. நியூசிலாந்தைச் சேர்ந்த டேவிட் ஸ்ட்ராங் என்பவர் உடனடி காபித் தூளை சந்தையில் அறிமுகம் செய்தார்.
இந்தியாவின் காபி விளைச்சலில் கர்நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் முதன்மையாக உள்ளன. இன்று இந்தியாவில் 25 ஆயிரம் காபி விளைவிப்போர் இருக்கிறார்கள். இவர்களில் 98 சதவிகிதம் பேர் சிறிய உற்பத்தியாளர்கள். 10 ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பில் காபி விளைவிப்பவர்கள். இந்தியாவில் 3,46,995 ஹெக்டேர் பரப்பில் காபி உற்பத்தி செய்யப்படுகிறது.
காபி விற்பனையை ஒழுங்குமுறை செய்வதற்காக இந்திய காபி வாரியம் உருவாக்கப்பட்டு, அதன் வழிகாட்டுதலில் காபி உற்பத்தி நடைபெறுகிறது. இது போலவே காபி உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்கம் மூலம் இந்தியா முழுவதும் காபி கடைகள் திறக்கப்பட்டன.
இந்தியன் காபி ஹவுஸ் எனப்படும் இந்தச் சங்கிலித்தொடர் காபி கடைகள் 1957-ல் அறிமுகமாகின. இந்தியன் காபி ஹவுஸ் கடை புதுடெல்லியில் அக்டோபர் 27, 1957-ல் திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகப் புதுச்சேரி, திருச்சூர், லக்னோ, நாக்பூர் மும்பை, கொல்கத்தா, பூனே, சென்னை என இந்தியா முழுவதும் காபி கடைகள் திறக்கப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்றன. இன்று கேரளாவில் மட்டும் 52 இந்தியன் காபி ஹவுஸ்கள் செயல்படுகின்றன.
யுத்த காலத்தில் காபியின் விலை உயர்ந்த காரணத்தால், சிக்கரி கலந்து குடிக்கும் பழக்கம் உருவானது. சிக்கரி எனப்படும் தாவரம் பீகார், பஞ்சாப், இமாசலப்பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, ஒடிசா, உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இதன் வேரில் இருந்தே சிக்கரி பொடி தயாரிக்கிறார்கள். சிக்கரியில் காஃபீன் கிடையாது. அதை காபியுடன் கலந்தால், வாசனை தூக்கி நிற்கும். அதனால் சிக்கரி கலந்த காபியை பலரும் விரும்புகின்றனர்.
நீராவி மூலம் காபி தயாரிக்கும் எக்ஸ்பிரஸோ இயந்திரம் காபியைப் பிரபலப்படுத்தியது. எக்ஸ்பிரஸோ இயந்திரம் டூரின் நகரத்தைச் சேர்ந்த ஆஞ்சலோ மோரியோன்டோவால் 1884-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த இயந்திரத்தை சற்று மாற்றி, நவீனமாக வடிவமைப்பு செய்தவர் லூயி பெஸிரா. இவர் மிலனை சேர்ந்தவர். இவரது தயாரிப்பை பேவோனி நிறுவனம் விலைக்கு வாங்கிச் சந்தையில் அறிமுகப்படுத்தியது.
ஃபில்டர் காபி தயாரிக்கும் மெஷின் 1908-ல் அறிமுகமானது. ஜெர்மனியைச் சேர்ந்த மெடில்டா என்ற பெண்மணி ஃபில்டர் காபி தயாரித்தார். இந்த ஃபில்டர் மெஷினை மெடில்டா குடும்பத்தினரே சந்தைப்படுத்தினார்கள்.
1833-ல் தானியங்கி காபி இயந்திரத்தை டாக்டர் எர்னெஸ்ட் தயாரித்தார். இன்று காபி கடைகளில் பயன்படுத்தப்படும் எக்ஸ்பிரஸோ மெஷின்களை உருவாக்கியவர் அக்கிலஸ் ககியா.
இன்று பெரும்பான்மை சாலையோரக் கடைகளில் பேப்பர் கப்களில் காபி தருகிறார்கள். பேப்பர் கப்களில் காபி குடிப்பது தவறானது. காரணம், மெழுகு பூசப்பட்ட கப்பில் சூடான காபி நிரப்பப்படும்போது, சூட்டில் மெழுகு உருகி காபியுடன் கலந்துவிடுகிறது. அதைக் குடித்தால் வயிற்றுவலி உருவாக வாய்ப்பு அதிகம்.
காபி தயாரிக்கும் இயந்திரங்களின் வளர்ச்சி ஒரு பக்கமும், ஊடகங்களில் தரப்படும் விளம்பரங்கள் மறுபுறமுமாக, காபியை முக்கிய விற்பனைப் பொருளாக்கியுள்ளன.
காபி கடைகளில் விற்பனை செய்வதற்கு என்றே விசேஷ கேக்குகள், ரொட்டிகள் உருவாகின. காபி கடைகளில் படிப்பதற்கென, காபி டேபிள் புக்ஸ் எனும் அழகிய புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டன. காபி குடிப்பது நம்பிக்கையின், புத்துணர்வின் அடையாளமாக ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகிறது. அது ஒரு மாயையே. இன்றைய காபி மோகத்தின் பின்னால் வணிக நிறுவனங்களின் 50 ஆண்டு இடைவிடாத விளம்பரங்கள் காரணிகளாக உள்ளன.
இன்றைக்கு எது நல்ல காபி என்பதைவிட, அது எந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் காபி என்பதை நோக்கி கவனம் திருப்பப்பட்டிருக்கிறது. அதுதான் வணிகத்தின் தந்திரம்.
‘காப்பி எதற்காக நெஞ்சே?
காப்பி எதற்காக?
கையினில் சுக்குடன் மல்லி இருக்கையில்
காப்பி எதற்காக?’
என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.
இந்தத் தலைமுறைக்கு, பாரதிதாசனையும் தெரியாது, சுக்கு காபியும் பிடிக்காது. பிராண்டட் காபி ஷாப் ஒன்றில், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். அதில் 86 சதவிகிதம் இளைஞர்களே வாடிக்கையாளர்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
எதிர்காலத்தில் ஒரு நபரின் ஒரு நாள் சம்பளம் ஒரு காபியின் விலையாக இருக்கும் என்கிறார்கள். காலம் போகிற போக்கைப் பார்த்தால், அது நடந்துவிடும் என்றே தோன்றுகிறது.

உணவு யுத்தம்!-23


கடவுளும் காபி கடைகளும்
திரைப்படத் துறையைச் சேர்ந்த இளம் இயக்குநர் தனது புதிய திரைப்படம் குறித்து விவாதிப்பதற்காக என்னைச் சந்திக்க விரும்பினார். எங்கே சந்திக்கலாம் எனக் கேட்டேன். ‘காபி ஷாப்புக்கு வந்துவிடுங்கள், அங்கேதான் முழுப்படத்தின் திரைக்கதையும் எழுதினேன்’ என்றார். காபி பப் என்கிற நவீன காபி ஷாப்புகள் பண்பாட்டு மாற்றத்தின் நவீன அடையாளங்கள். அவர் குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனத்தின் காபி ஷாப்புக்குப் போயிருந்தபோது மேற்கத்திய இசையும் இலவச இணைய வசதியுள்ள மேஜை ஒன்றில் அவர் தனியே அமர்ந்திருந்தார்.
எக்ஸ்பிரஸோ, ஐரீஷ், மோச்சா, லாத்தே, டபுள் ஷாட், ப்ளாட் வொயிட், அமெரிக்கானோ, காபச்சினோ, ஐஸ் காபி, என 30-க்கும் மேற்பட்ட சுவைகளில் காபி வகைகள் கொண்ட மெனுவை என்னிடம் நீட்டி, ‘உங்களுக்கு விருப்பமான காபியைச் சொல்லுங்கள்’ என்றார்.
வழக்கமான ஃபில்டர் காபி இங்கே கிடைக்காது என்பதால் காபி லாத்தே ஆர்டர் செய்தேன். லாத்தே காபி இத்தாலியின் சிறப்புப் பானம். அதில் பாலின் நுரை மிக அதிகமாக இருக்கும். இத்தாலியர்களுக்கு மிகவும் விருப்பமான காபி அது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னையில் புதிது புதிதாக 100-க்கும் மேற்பட்ட காபி ஷாப்புகள் வந்துள்ளன. இத்தாலிய காபி, அமெரிக்கக் காபி வகை, அரபு வகைக் காபி, பிரெஞ்சு காபி, மொராகோ காபி எனச் சர்வதேச காபி விதங்கள் அத்தனையும் கிடைக்கின்றன.
நெடுஞ்சாலைகளில் நூறடிக்கு ஒரு கும்பகோணம் காபி கடை. இந்தியாவில் காபி விற்பனை ஆண்டுக்கு 1,400 கோடி ரூபாய். இது 2017-ல் 2,250 கோடியை தொடும் என்கிறார்கள். இவ்வளவு காபி மோகம் எப்படி உருவானது என வியப்பாக இருந்தது.
புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ சிறுகதையில் பூமிக்கு வரும் கடவுளை காபி சாப்பிடத்தான் அழைத்துப் போகிறார் கந்தசாமி பிள்ளை. கடவுளுக்கும் காபி ருசி பிடித்தேயிருக்கிறது.
கடவுள் காப்பியை எடுத்துப் பருகியபோது சோமபானம் குடித்த தேவ களை முகத்தில் தெறித்தது.
”நம்முடைய லீலை” என்றார் கடவுள்.
”உம்முடைய லீலை இல்லைங்காணும். ஹோட்டல்காரன் லீலை. அவன் சிக்கரிப் பவுடரைப் போட்டு வைத்திருக்கிறான்” என்றார் கந்தசாமிப் பிள்ளை
”சிக்கரிப் பவுடர் என்றால்…?” என்று சற்றுச் சந்தேகத்துடன் தலையை நிமிர்த்தினார் கடவுள்.
”சிக்கரிப் பவுடர், காபி மாதிரிதான் இருக்கும்; ஆனால் காப்பி அல்ல; சிலபேர் தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றிவருகிற மாதிரி” என்றார் கந்தசாமிப் பிள்ளை
இப்படிக் கடவுளே சிக்கரி கலந்த காபியை குடித்துத்தான் மனுஷனுடன் நட்புறவு ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதிருக்கிறது. அந்த அளவுக்கு காபி குடிப்பது கைவிடமுடியாத பழக்கமாக மாறிவிட்டிருக்கிறது.
இன்றைக்கும் ஒரு நல்ல காபி குடிக்க வேண்டும் என்பதற்காக ஆட்டோ பிடித்து நல்ல காபி ஹோட்டல் தேடிப்போய்க் குடித்துவருபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஒரு கோப்பை காபி இருந்தால்போதும் காலை உணவு கூடத் தேவையில்லை என்றொரு ரகம் இருக்கிறது. ‘இன்ஸ்டன்ட் காபி பொடியால் தயாரிக்கப்பட்ட காபியை மனுஷன் குடிக்க முடியாது, அது பேதிமருந்து போலிருக்கிறது’ எனச் சலிப்பவர் பிறிதொரு வகை.
ஃபில்டர் காபியிலும் பசும்பால் கொண்டு தயாரிக்கப்படும் காபிக்கு நிகரில்லை எனக் கும்பகோணத்துவாசிகள் புகழ்பாடுகிறார்கள். 
சர்வதேச அளவில் விநோதமான காபி வகைகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதில் ஒரு வகை, புனுகுப் பூனைக்குக் காபிப் பழங்களை உண்ணக் கொடுத்து, அது மலம் கழிக்கும்போது வெளியேறும் கொட்டைகளை எடுத்து அதில் காபி தயாரிக்கிறார்கள். அந்தக் காபி நிகரற்ற ருசி கொண்டது என்கிறார்கள். அதன் விலை 4,000. இப்படி யானை, குரங்குகள், பறவைகள், விலங்குகளின் கழிவுகளில் இருந்து கிடைக்கும் காபி கொட்டைகளைக்கொண்டு காபி தயாரித்துக் குடிப்பது புதிய மோகமாகப் பரவி வருகிறது. ஐரோப்பாவில் காபி மார்டினி என்ற பெயரில் வோட்கா கலந்த காபி விற்கப்படுகிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பு வரை காபி குடிப்பது என்பது அந்தஸ்த்தின், உயர்சாதியின் அடையாளம். டீக்குடிப்பவர்கள் என்றால் சாதாரண ஏழை எளிய மக்கள், உழைப்பாளிகள் என்று அர்த்தம். இன்றும் வட இந்தியாவில் காபி குடிப்பவர்கள் என்றால் மதராஸி என்றுதான் சொல்கிறார்கள். காரணம் தேநீர்தான் வட இந்தியாவில் அதிகம் அருந்தப்படுகிறது.
பெரும்பான்மை சைவ உணவகங்களில் இன்றும் டீ விற்பது கிடையாது. உணவிலும் சாதி கலந்திருக்கிறது. கவனமாகப் பின்பற்றப்படுகிறது நண்பர்களே. இன்றும் வீட்டுக்குள் பனங்கிழங்கு, பெல்லாரி வெங்காயம், கசகசா, சோம்பு போன்றவற்றை அனுமதிக்காத குடும்பங்கள் இருக்கவே செய்கிறார்கள். காரணம் பிடிக்காமல் போய்விட்டது என்பது இல்லை. அது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பயன்படுத்துவது என்ற எண்ணம்.
நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைவைத்து நீங்கள் யார் என்பதை அடையாளம் கண்டுகொள்வதுடன் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் முடிவு செய்துவிடுகிறார்கள். ஒன்றாகக் கூடி உண்பதால் மட்டும் சாதி ஒழிந்துவிடுவது இல்லை.
உணவு எப்படிச் சமைக்கப்படுகிறது என்பதில் தொடங்கி பரிமாறப்படுவது வரை சாதியக்கூறுகள் கலந்துள்ளன. விருந்தினர்களுக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு போடுவது கௌரவத்துக்கானது மட்டும் இல்லை. வெள்ளிக்குத் தீட்டில்லை என்ற சாதிய மனப்போக்கும் உள்ளடக்கியதே. உணவு அரசியலின் முக்கியக் குவிமையம் அது.
குடிதண்ணீரைக்கூட ஒன்றாகப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்காத இந்திய சமூகத்தில் தேநீரும் காபியும் அறிமுகமானதன் வழியே, ஒரே கடையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தேநீரை, காபியை குடிக்கும் விதம் உருவானது எளிய செயல் இல்லை. அது பண்பாட்டு மாற்றத்தின் அடையாளம் என்கிறார் உணவு ஆய்வாளர் ஜி.எல்.புவே. அதே நேரம் இரட்டைக் குவளை முறையும் காபி குடிப்பவன் உயர்ந்தவன் என்ற எண்ணம் உருவானதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது.
பெருநகரங்களில் முளைத்துக் கிளைவிட்டுள்ள காபி ஷாப் கலாசாரம் மாறிவரும் உணவுப் பண்பாட்டின் அடையாளம். காபி ஷாப் என்பது காபி குடிக்கச் செல்லுமிடம் இல்லை. அது இளம் தலைமுறையின் சந்திப்பு வெளி. அங்கே விருப்பமான பெண்ணுடன் அரட்டை அடிக்கவோ, அலுவல் சார்ந்து கூடி விவாதிக்கவோ, வணிகத் தொடர்புகளை உருவாக்கிக்கொள்ளவோதான் வருகிறார்கள்.
இந்தியாவின் முதல் காபி கடை 1780-ல் கல்கத்தாவில் தொடங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ஜான் ஜேக்ஸனால் 1792-ல் மதராஸ் காபி ஹவுஸ் ஆரம்பிக்கப்பட்டது. இங்கே காபி குடிக்க வருபவர்கள் படிப்பதற்காக ஆங்கில நியூஸ் பேப்பர்கள் தரப்பட்டன. இரண்டு நூற்றாண்டுகளில் உலக நாடுகள் எங்கும் காபி அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்க வைக்கக்கூடியது.
காப்பிக் கொட்டையில் பல விதங்கள் உள்ளன. தரத்திலும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இவற்றில் ரோபஸ்டா, அரேபிகா செர்ரி, ப்ளாண்டேஷன் ‘ஏ’, பீபிரி போன்றவை சில ரகங்கள். ஒரு கோப்பை காபியில் 80,140 மில்லி கிராம் வரை காஃபீன் என்ற ரசாயனப் பொருள் கலந்துள்ளது. அதிகம் காபி குடிப்பது பித்தத்தை அதிகரித்து வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், அஜீரணம், நரம்பியல் கோளாறுகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
காபி எப்படி அறிமுகமானது என்பதைப் பற்றிப் பல்வேறு கட்டுக்கதைகள் கூறப்படுகின்றன. இதில் எத்தியோப்பியாவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர் சிலர் தங்களின் ஆடுகள் வழக்கத்துக்கு மாறான ஆற்றலுடன் இரவிலும் தூங்காமல் இருப்பதைக் கண்டு காரணத்தைத் தேடினார்கள்.
அப்போது அந்த ஆடுகள் காப்பிச் செடி இலைகளையும் பழங்களையும் உண்டதால்தான் இப்படி அதிக விழிப்புடனும் ஆற்றலுடனும் உள்ளது எனக் கண்டு தாங்களும் காபியை பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்கிறார்கள்.
இந்தச் சம்பவத்தை நிரூபணம் செய்ய எந்த ஆதாரமும் இல்லை. இது செவிவழிக் கதை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஒன்பதாம் நூற்றாண்டிலே காபி எத்தியோப்பியாவில் அறிமுகமாகிவிட்டது என்பதைச் சான்றுகளுடன் வரலாற்று அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அங்கிருந்து 15-ம் நூற்றாண்டு அளவில் பெர்சியா, துருக்கி, மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கும் காபி பரவியிருக்கக் கூடும். பின்பு அங்கிருந்து டச்சு வணிகர்கள் மூலம் ஐரோப்பாவுக்கு அறிமுகமானது.
அரபு நாடுகள் காபிசெடியை யாரும் வெளிநாடுகளுக்குக் கொண்டு போகத் தடை விதித்திருந்தது. 1690-ல் அதை மீறி டச்சு வணிகர்கள் காபிச் செடியைக் கொண்டுபோய் ஜாவா நாட்டில் பயிர் செய்தார்கள்.
17-ம் நூற்றாண்டில் பாபா பூதன் என்ற சூபி ஞானி இந்தியாவிலிருந்து மெக்கா, ஏமன் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பி வரும்போது ரகசியமாக ஏழு காபிக் கொட்டைகளைக் கொண்டுவந்தார். அந்தக் காபி விதைகளைச் சிக்மகளூர் மாவட்டத்திலுள்ள சந்திரகிரி மலையில் பயிரிட்டார். அப்படித்தான் காபி இந்தியாவுக்கு அறிமுகமானது. அதனால்தான் இன்றும் கர்நாடகாவில் காபி புகழ்பெற்று விளங்குகிறது என்கிறார்கள்.
காபி வளர்ச்சியில் பிரிட்டிஷ் வணிகர்கள் அதிக ஈடுபாடு காட்டினார்கள். அவர்களின் முயற்சியின் காரணமாகவே இலங்கையிலும் இந்தியாவிலும் காபி வணிகப் பயிராக மாறியது.
கெய்ரோவில்தான் முதன்முதலில் காபி கடைகள் திறக்கப்பட்டன. 17-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நகரங்களில் காபிக் கடைகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. காபி கடைகள் அரசியல் விவாதங்களுக்கான பொதுவெளியாக உருமாறின. அங்கே இலக்கிய மன்றங்கள் தொடங்கப்பட்டன. புகழ்பெற்ற எழுத்தாளர் வால்டேர் ஒரு நாளுக்கு 40 கோப்பை காபி சாப்பிட்டதோடு அதைப் புகழ்ந்து எழுதவும் செய்தார்.
இங்கிலாந்தில் காபி கடைகளில் பகல் இரவாக எழுத்தாளர்கள், கவிஞர்கள், அரசியல்வாதிகள் ஒன்றுகூடினார்கள். ஆகவே, முக்கியமான தபால்கள் காபி கடைகளின் முகவரிகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டன. பிரபல நாவலாசிரியான ஆலிவர் கோல்டு ஸ்மித் தனது நாவலை ஒரு காபி கடையில் வைத்துதான் எழுதினார்.
காபி என்ற ஆங்கிலச் சொல் 1592-ல் டச்சு மொழிச் சொல்லான Koffie என்பதில் இருந்து உருவானது. அதன் மூலச்சொல்  qahwa என்ற அரபி சொல்லாகும்.
கிழக்கிந்திய கம்பெனியின் வணிகம் வழியாக இங்கிலாந்துக்குக் காபி 16-ம் நூற்றாண்டில் அறிமுகமானது. 1651-ல் இங்கிலாந்தின் முதல் காபி கடை புனித மைக்கேல் வீதி என்ற இடத்தில் டேனியல் எட்வர்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. துருக்கி வணிகரின் முயற்சியால் இந்தக் கடை தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்ட்டில் உள்ள குயின்ஸ் லேனில் 1654-ல் இன்னொரு காபி கடை திறக்கப்பட்டது. அந்தக் கடை இன்றும் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
1675-க்குள் இங்கிலாந்தில் 3,000 காபி கடைகள் திறக்கப்பட்டன. காபி கடைகளில் வெட்டி அரட்டை அடிக்கிறார்கள். இதனால் தேவையற்ற மதச் சர்ச்சை உருவாகின்றன எனக் கருதிய மன்னர் இரண்டாம் சார்லஸ் காபி கடைகளை மூடும்படி உத்தரவிட்டார். அதன் காரணமாகக் காபி வணிகத்தில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது, ஆனால் காபி கடைகள் முழுமையாக மூடப்படவில்லை. பெண்களும் காபி கடைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய சம்பவமும் நடந்தது.