Nov 24, 2017

நூறாவது இடத்தில் என்ன பெருமை இருக்கிறது?





ப.சிதம்பரத்திடம் பேட்டி காண்பது, பொருளாதார வகுப்பு ஒன்றில் பங்கேற்பதற்குச் சமம்.  பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி, தற்போதைய இந்தியப் பொருளாதாரத்தின் நிலை என முன்னாள் நிதியமைச்சரிடம் பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ``காலை 11 மணிக்குச் சந்திக்கலாம். ஆனால், மேலேகுறிப்பிட்ட மூன்று விஷயங்கள்தான் பேசுபொருளாக இருக்க வேண்டும்’’ என்கிற நிபந்தனையோடு பேட்டிக்கு அழைத்தார் ப.சி.


`` `டிமானிட்டைசேஷன் அறிவிப்பு வந்த உடனேயே கள்ளப் பணம், கறுப்புப் பணம், ஊழல் மூன்றையுமே இதனால் ஒழிக்கமுடியாது என்று சொன்னேன். நான் சொன்னதுதான் நடந்திருக்கிறது’ என்று சொல்கிறீர்கள். அப்படியானால், அந்த நோக்கங்கள் எப்போதும் நிறைவேற்றப்பட முடியாதவையா?’’  


``நான் சொல்வதை நீங்கள் நன்றாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ‘அந்த நோக்கங்கள் நிறைவேற்றப்பட முடியாதவை’ என்று நான் சொல்லவே இல்லை. ஆனால், ‘பண மதிப்பு நீக்கத்தால், அதைச் செய்ய முடியாது’ என்றுதான் சொல்கிறேன். நான் சொன்னதுதானே இப்போது நடந்துள்ளது! அந்த நோக்கங்களை அடைய வேண்டுமானால், அதற்கு வேறு வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். சீனாவில் ஊழலுக்கு எதிராகக்  கடுமையான நடவடிக்கைகளை அந்த நாட்டின் அதிபர் எடுக்கிறார். பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலமாகவா அவர் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறார்?

இல்லை, வேறு எந்த நாட்டிலாவது பண மதிப்பு நீக்க நடவடிக்கை  எடுத்து  ஊழலை ஒழிக்க முற்பட்டுள் ளார்களா? இல்லையே!  உண்மையில், ஊழலை ஒழிப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுத்தால், அதை நாங்கள் வரவேற்போம். ஆனால், பண மதிப்பு நீக்கம் அதற்கு வழியல்ல என்பதைத்தான் எடுத்துரைக்கிறோம்.” 


``பண மதிப்பு நீக்க நடவடிக்கைமூலம் ஒரேயொரு நன்மை கூடவா ஏற்படவில்லை?’’ 



``ஒரு நன்மையாவது ஏற்பட்டு இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். நானும் தேடித் தேடிப் பார்க்கிறேன். ஒன்றும் ஏற்படவில்லை. ஆனால், மக்கள் மனதில் ஓர் அச்சம் ஏற்பட்டுள்ளது. ‘பெரிய அளவிலான தொகையை ரொக்கத்தில் புழங்கக் கூடாது’ என்ற அச்சம் மக்களிடம் உருவாகி உள்ளது. ஆனால், ஒரு ஜனநாயக நாட்டில், அச்சத்தின் மூலமாகச் சீர்திருத்தம் கொண்டுவர முடியாது; அப்படிக் கொண்டுவரவும் கூடாது. பொறுப்பான விதிகள், பொறுப்பான சட்டங்கள், பொறுப்பான நிர்வாக நடவடிக்கைகள் மூலமாகத்தான் மக்கள் மத்தியில் ஒரு மனப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்; அப்படித்தான் ஏற்படுத்தவும் முடியும். மாறாக, அச்சத்தின் மூலம் ஒரு சீர்த்திருத்தத்தைக் கொண்டுவந்தால், அந்த அச்சம் தொடக்கத்தில் வேண்டுமானால், கொஞ்சம் வீரியமாக இருக்கும்; போகப்போக அதுவும் மெல்ல மெல்ல மறைந்துவிடும். அதற்கு இந்தப் பண மதிப்பு நீக்க நடவடிக்கை மிகச் சிறந்த உதாரணம். கடந்த டிசம்பர் மாதத்தில் மக்களிடம் ரொக்கப் புழக்கம் குறித்து இருந்த அச்சம், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இல்லையே!’’ 



`` `பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கறுப்புப் பணம் வெள்ளைப் பணமாக மாறிவிட்டது’ என்று எப்படிச் சொல்கிறீர்கள்?’’ 



``15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் நோட்டைச் செல்லாது என்று அறிவித்துவிட்டு, எங்களுக்கு இதில் 3 லட்சம் கோடி மிஞ்சப்போகிறது என்று மார் தட்டினார்கள். ஆனால், இன்றைக்கு நடந்தது என்ன? 15 லட்சத்து 44 ஆயிரம் கோடியில், 15 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்கு வந்துவிட்டது. வங்கிக்கு வராதது வெறும் 16 ஆயிரம் கோடி. அதிலும் பெரும்பகுதி நேபாளம், பூட்டானில் சிக்கி உள்ளது. இன்னும் கொஞ்சம் என்.ஆர்.ஐ கைகளில் இருக்கிறது. அதுபோக, ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாதவர்கள் கையில் கொஞ்சம் இருக்கிறது. அப்படியானால் என்ன அர்த்தம்... கறுப்புப் பணமும், கள்ளப் பணமும் வங்கிக்கு வந்து தற்போது வெள்ளைப் பணமாகிவிட்டது. ஆகவேதான், நான் குற்றம் சாட்டுகிறேன். வேறு பலரும் இந்தக் குற்றத்தைச் சாட்டுகிறார்கள். பெரிய கறுப்புப் பண முதலைகள், தங்களின் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு அரசே இந்த வழியை வகுத்துத் தந்ததோ என்று!’’ 



``அதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதே?’’



``விசாரணை நடத்தட்டும். ஆனால், இன்று... மொத்தக் கறுப்புப் பணமும், வெள்ளைப் பணமாக மாறி, வங்கிகளில் கம்பீரமாக உட்கார்ந்துள்ளதே! அது யார் கையில் இருந்த பணம் என்பதற்கு இன்னும் பதில் இல்லையே. அந்த விசாரணையை மேற்கொள்வதிலும் சிக்கல் இருக்கிறதே? ரிசர்வ் வங்கி, எந்த வங்கிக் கிளைக்கு, எந்த எண்ணில் உள்ள பணத்தை அனுப்பினோம் என்ற ‘டேட்டாவை’ பராமரிக்க வில்லை. அதனால், அதிலும் சிக்கல் இருக்கிறதே!”



``டிஜிட்டல் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் முறையில் வணிகம் செய்யும் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் சிலர் சொல்கிறார்களே?’’ 



``தனி மனிதர்கள் செய்யும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்பதை அளவீடாகக் கொண்டால், அவர்களுடைய 10 பணப்பரிவர்த்தனை களில்  ஒன்றிரண்டு அதிகரித்துள்ளன. ஆனால், நாட்டின் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனையை அளவீடாக எடுத்துக் கொண்டால், அது மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டதாகப் புள்ளிவிபரங்கள் சொல்லவில்லை. கடந்த நவம்பர் மாதம், டிஜிட்டல் பரிவர்த்தனையான பணத்தின் மதிப்பு 94 லட்சம் கோடி. இது கடந்த மார்ச் மாதத்தில் 149 லட்சம் கோடியாக உச்சம் பெற்றுள்ளது. ஆனால், கடந்த அக்டோபர் மாதத்தில் 99 லட்சம் கோடியாக மீண்டும் கீழிறங்கிவிட்டது. அதாவது, டிஜிட்டல் பரிவர்த்தனை மேலே ஏறி, பிறகு மீண்டும் இறங்கி முந்தைய இடத்திற்குப் பக்கத்திலேயே வந்துவிட்டது. ஆக, டிஜிட்டல் பரிவர்த்தனை மிகப்பெரிய அளவில் வளரவில்லை; அது வளர்ந்ததற்கு ஆதாரங்களும் இல்லை.’’



``பண மதிப்பு நீக்கம் என்பது உங்கள் எண்ணத்திலேயே உதிக்கவில்லை; சரி. ஆனால், ஜி.எஸ்.டி உங்களுடைய எண்ணத்தில் பிறந்த திட்டம்தானே? நீங்கள் அதையும் கடுமையாக இப்போது விமர்சிக்கிறீர்களே?’’ 



``நாங்கள் சொன்னதை அவர்கள் அமல் செய்திருந்தால், நாங்கள் விமர்சித்திருக்க மாட்டோம்; மாறாக, பாராட்டி இருப்போம்! ஆனால், இவர்கள் அப்படிச் செய்யவில்லை. நாங்கள் சொன்னது ‘ஒரு நாடு-ஒரு வரி; எளிதான வரி முறை; எளிதான விதி’. சிங்கப்பூரில் ஒரு வரி, மலேசியாவில் ஒரு வரி, ஆஸ்திரேலியாவில் ஒரு வரி... அதைப்போன்ற  ஒரு வரி முறைதான் ஜி.எஸ்.டி. ஆனால், இவர்கள் கையில்போன ஜி.எஸ்.டி என்பது `குரங்கு கையில் பூமாலை’ போலாகிவிட்டது. 8 வரி விகிதங்களை விதித்துள்ளனர். 0, 3, 5, 12, 18, 28, 40 மற்றும் அதற்கு மேல் செஸ் வரி. மோட்டார் காருக்கு 20 சதவிகித செஸ் வரி இருக்கிறது.   இதற்குப் பெயர் ஜி.எஸ்.டி-யா? இல்லை. இதற்கு, அவர்கள் வேறு எதாவது ஒரு பெயர் வைக்க வேண்டுமேயொழிய, இதை ஜி.எஸ்.டி என்று சொல்லவே கூடாது. 



இவர்கள் அமல்படுத்தி இருப்பதில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவரும் 3 ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்! இதையா நாங்கள் சொன்னோம்? ஒரு மாநிலத்தில் ஒரு நிறுவனம் தொழில் செய்தால், 37 ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்; 10 மாநிலத்தில் தொழில் செய்தால், 370 ரிட்டன் ஃபைல் செய்ய வேண்டும்; ஒரு வருடத்துக்கு 36 ரிட்டன். அதோடு, ஆண்டு ரிட்டன் ஒன்று சேர்த்து மொத்தம் 37. இந்தியா முழுவதும் தொழில் செய்யக்கூடிய நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் எல்லாம் 1000 ரிட்டன்களுக்குமேல் ஃபைல் செய்ய வேண்டும். இதையா நாங்கள் சொன்னோம். இதைவிட மிகமிக முக்கியமான கேடு என்னவென்றால்... வரிச்சுமை. நாங்கள் என்ன சொன்னோம்... இந்த வரி, நியாயமான வரியாக இருக்கும் என்று சொன்னோம்; இந்தவரி மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாது என்று சொன்னோம். நாங்கள் சிந்தனையில் வைத்திருந்த ஜி.எஸ்.டி என்பது வேறு. இவர்கள் அமலுக்குக் கொண்டுவந்துள்ள வரி என்பது முற்றிலும் வேறு! 4 மாதங்கள் 10 நாள்கள் கழித்து ஞானோதயம் பிறந்து, அவசர அவசரமாக 170 பொருள்களில் 28 சதவிகிதத்தை 12, 18 என்று குறைத்திருக்கிறார்கள்; ஏன் இந்த ஞானோதயம் அப்போது பிறக்கவில்லை? நாடாளுமன்றத்தில் நாங்கள் சொன்னபோது மூர்க்கத்தனமாக மறுத்தார்களே! ஏன்?’’

``நீங்கள் குறிப்பிட்ட ஜி.எஸ்.டி-யில் இவ்வளவு நன்மைகள் உண்டென்றால், அதை பி.ஜே.பி அரசாங்கம் செய்துவிட்டுப் பெயர் வாங்கியிருப்பார்களே. பிறகு, அதை அவர்கள் நிராகரிக்க என்ன காரணம்?’’ 


``அறியாமைதான் காரணம். அவர்களுக்குப் புரியவில்லை. அறியாமையோடு சேர்ந்த முரட்டுப் பிடிவாதம். அதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.’’ 



`` `ஜி.எஸ்.டி-யை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் வரும். அதை நாங்கள் அனுபவத்தின்மூலம் சரி செய்வோம்’ என்றது மத்திய பா.ஜ.க அரசு. அதை இப்போது கடைபிடிக்கவும் செய்கிறதே?’’ 



`` ‘நாங்கள் எங்களுடைய அனுபவத்தில் இருந்து பிழையைத் திருத்திக்கொள்வோம்’ என்றால், உங்களுக்கு அனுபவம் வந்து அந்தப் பிழையைத் திருத்திக் கொள்ளும்வரை, அந்தச் சுமையை மக்கள் அனுபவிக்க வேண்டும் என்று அர்த்தமா? ஏற்கனவே, அனுபவம் உள்ளவர்கள் அதைச் சுட்டிக்காட்டும்போது, அந்த அனுபவ முறையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை? நீங்கள் அனுபவம் பெற்றுத் திருந்தும்வரை, அந்தத் துன்பங்களை மக்கள் ஏன் அனுபவிக்க வேண்டும்?  திருக்குறள் 551-ல் நமக்குச் சொல்லும் பாடம் என்ன? ஓர் அரசு மக்களுக்குத் தீமை இழைக்கக் கூடாது.  அரசு நன்மை இழைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; தீமை இழைக்கக் கூடாது.’’ 



`` ஜி.எஸ்.டி-யால் எந்தப் பலனும் இல்லை என்று சொல்கிறீர்களா?’’ 



``பலன் உண்டு; அது வரும். எப்போது வரும் என்றால், நாங்கள் சுட்டிக்காட்டிய பிழைகளை எல்லாம் திருத்தம் செய்து, தற்போது நடைமுறையில் உள்ள வரியை, உண்மையான ஜி.எஸ்.டி-யாகக் கொண்டுவரும் போது, பலனும் வரும். முதலில் 28 சதவிகித வரியை ஒழிக்க வேண்டும்; உச்ச வரி என்பது 18 சதவிகிதம் என்பதைக் கொண்டுவர வேண்டும்;  எந்த வரியாக இருந்தாலும் எந்த வரி விகிதமாக இருந்தாலும் 18 சதவிகிதத்துக்கு மிகாது என்பதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்; அனைத்துச் சேவைகளுக்கும் அனைத்துப் பொருள்களுக்கும், ஒரே வரி என்ற கொள்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; பிறகு, அந்த வரியைக் கட்டுவதற்கு எளிதான விதிகளை அவர்கள் உருவாக்க வேண்டும்; உங்களுக்கு எழுத முடியவில்லை என்றால், யாரையாவது நான்கு பேரை அழைத்து, “அய்யா எளிதான விதிகளை எழுதித் தாருங்கள்” என்று கேட்க வேண்டும். உங்களுக்குத்தான் எழுதத் தெரியவில்லையே... பிறகு ஏன் நீங்களே விதிகளை எழுதுகிறீர்கள். மாதம் 3 ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்... காரைக்குடியில் ஜவுளிக்கடையும் செருப்புக்கடையும் வைத்திருப்பவர்கள் இதை எப்படிச் செய்ய முடியும்.  அவர்கள் பில் புக் வைத்துள்ளனர்; நாளேடு, பேரேடு பராமரிக்கின்றனர். திடீரென்று அந்தக் கடைக் காரரைப் பார்த்து, “நீ மாதம் மூன்று ரிட்டன்... ஆன்-லைன், கம்ப்யூட்டரில் ஃபைல் செய்ய வேண்டும்” என்று சொன்னால், அதை எப்படி அவரால் செய்ய முடியும்? 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து, பயிற்சி பெற்றவர்களை வைத்துத்தானே அதைச் செய்ய வேண்டி உள்ளது. இது கட்டுப்படியாகுமா? நான் சொல்லும் இந்த உதாரணம், முனிசிபல் நகரத்தில்! இதைப்போல எத்தனை நகரங்கள் நாடு முழுவதும் உள்ளன; எத்தனை ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் எப்படி ஆன்-லைனில் ஃபைல் செய்வார்கள். ஆன்-லைனில் ஃபைல் செய்ய வேண்டும் என்றால், வை-ஃபை வசதி வேண்டும்; தடையில்லாத மின்சாரம் வேண்டும்; மின் கணினிப் பயிற்சி வேண்டும். இந்தப் பயிற்சிகளை எல்லாம் இந்த அரசு கொடுத்துவிட்டதா? இந்தியாவில் கோடிக்கணக்கான வியாபாரிகளுக்கு, வர்த்தகர்களுக்கு, கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த அரசு பயிற்சி கொடுத்துவிட்டதா?’’ 



``கடந்த ஐ.மு.கூட்டணி ஆட்சி, தற்போதைய பாரதிய ஜனதா ஆட்சி... இரண்டிலும் நிலவிய பொருளாதார வளர்ச்சியை ஒப்பிட்டுச் சொல்ல முடியுமா?’’ 



``முதல் 5 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சராசரி வளர்ச்சி 8.5 சதவிகிதம். மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக 9 சதவிகிதத்துக்கும் அதிகமான வளர்ச்சி. அந்த 5 ஆண்டுகள் தான் சுதந்திர இந்தியாவில் பொருளாதாரத் துறையின் பொற்காலம் என்பதை உலகம் முழுவதுமே ஒப்புக் கொண்டது. மொத்தம் 10 ஆண்டுகளையும் எடுத்துக் கொண்டால், சராசரி வளர்ச்சி என்பது 7.5 சதவிகிதம். பாரதிய ஜனதா கட்சியின் மூன்று ஆண்டுகளில்  சராசரி வளர்ச்சி என்ன? 2013-14 ல் நாங்கள் பதவியில் இருந்து விலகும்போது, அந்த ஆண்டு ஏற்றுமதி 300 பில்லியன் டாலரைத் தாண்டியது. அதாவது 30 ஆயிரம் கோடி டாலரைத் தாண்டியது. இந்த மூன்று ஆண்டுகள் பாரதிய ஜனதா ஆட்சியில், எந்த ஆண்டும் ஏற்றுமதி 300 பில்லியன் டாலரைத் தாண்டவில்லை. ஆண்டுக்கு ஆண்டு ஏற்றுமதி உயர வேண்டும். ஆனால், 2013-14-ல் அடைந்த உச்சத்தை இவர்கள் இன்னும் தாண்டவில்லை. எங்கள் ஆட்சியில் தனியார் முதலீடு மொத்த ஜி.டி.பி-யில் 35 சதவிகிதம். 37 சதவிகிதத்தைக் கூட நாங்கள் தொட்டோம். இன்று ஜி.டி.பி-யில் என்ன நிலை? 28 சதவிகிதம். அதாவது 7 முதல் 8 சதவிகிதம் சரிந்திருக்கிறது; குறைந்திருக்கிறது. தனியார் முதலீடே கிடையாது. அதனால்தான், அரசு இப்போது வரியைப்போட்டுச் செலவழிக்கிறது. தனியார் முதலீடு கணிசமாகக் குறைந்துள்ளது. சிறு தொழில்களுக்கு மைனஸ் 5 சதவிகிதம், நடுத்தரத் தொழில்களுக்கு மைனஸ் 3 சதவிகிதம் கடன் கொடுக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் சிறு-குறு தொழில்களுக்கு, இவ்வளவு குறைவாகக் கடன் கொடுக்கப்பட்டதே கிடையாது. ஆகவே தான், சிறு-நடுத்தரத் தொழில்கள் பெருகவில்லை. அதில் வேலைவாய்ப்புகளும் கிடைக்கவில்லை. தொழில்துறைக்கு கடன் வளர்ச்சி நெகட்டிவ். கடந்த ஆண்டுக் கடன் கொடுத்தைவிட இந்த ஆண்டுக் கூடுதலாகக் கடன் கொடுத்தால், அதுதான் வளர்ச்சி. இது உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள குறியீடு. தொழிலுக்கு முதலீடு வேண்டும். முதலீடு என்றால் என்ன? கடன் வாங்கிய பணம், சொந்தப் பணம் என்ற இரண்டும் சேர்ந்ததுதான் முதலீடு. சொந்தப் பணத்தைப் போட கடன் வாங்க வேண்டும். கடன் வாங்கிய பணத்துக்கு ஈடாகச் சொந்தப் பணத்தைப் போட வேண்டும். கடனே வாங்கவில்லை என்றால், சொந்தப் பணமும் போட வில்லை... தொழிலும் தொடங்கவில்லை என்றுதானே அர்த்தம். இது அடிப்படையான பொருளாதார அறிவுள் ளவர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.  கடன் வளர்ச்சி என்பது நாட்டின் வளர்ச்சியின் உண்மையான குறியீடு. 



ஆக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியிலும் தற்போதைய பாரதிய ஜனதாவின் ஆட்சியிலும் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி உள்ளங்கை நெல்லிக்கனி.’’

``உங்கள் ஆட்சியில் வாராக் கடன்களாக நீங்கள் விட்டுச் சென்றதால், இன்றைய அரசாங்கத்துக்குப் பெரும்சுமை ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறதே?’’ 


``வாராக் கடன் என்பது திடீரென்று வரவில்லை. பொருளாதார வளர்ச்சி 7 அல்லது 8 சதவிகிதம் தொடர்ந்து இருந்தால், வாராக் கடன் ஆகியிருக்காது. அரசு சொல்லும் புள்ளிவிபரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். 31 மார்ச் 2014-ல் வாராக் கடன் 3 லட்சம் கோடி. அதைத்தவிர மற்ற கடன் எல்லாம் வந்த கடன்தானே! வட்டியும் தவணை தவறாமல் அசலும் முறையாகக் கட்டப்பட்ட கடன்தானே! சரி, அந்த வாராக் கடன் என்பது மூன்று லட்சம் கோடி மட்டுமே. இன்றைக்கு வராக் கடன் எவ்வளவு? 10 லட்சம் கோடி. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ஒழுங்காகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த கடன், இப்போது வராக் கடனாக மாறியிருக்கிறது. இது உங்கள் ஆட்சியில் தானே மாறியிருக்கிறது. இது ஏன் வாராக் கடனாக மாறியிருக்கிறது. பொருளாதாரம் சரிந்துவிட்டதால், இது வாராக் கடனாக மாறியிருக்கிறது. பொருளாதாரம் நிமிர்ந்து வளர்ந்திருந்தால், அவனுடைய தொழிலும் நன்றாக நடந்திருக்கும். அதிகமான பொருள்களை விற்றிருப்பார்கள். கடனைக் கட்டியிருப்பார்கள். ஆனால், பொருளாதாரம் சரிந்ததால், தொழில் சரிந்தது. தொழில் சரிந்ததால், வியாபாரம் சரிந்தது. அதனால், வராக் கடன் அதிகரித்தது.’’ 



`` `ஜி.டி.பி-யில் காங்கிரஸ் சொல்லும் தொழில் வளர்ச்சி என்பது மாயத்தோற்றம். உண்மையில் அது வேலை வாய்ப்புக்களை உருவாக்கவில்லை; எங்கள் அரசில்தான் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன’ என்று பா.ஜ.க சொல்கிறதே?’’  



``சி.எம்.ஐ.இ-யின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 6 மாதத்தில் 19 லட்சத்து 60 ஆயிரம் வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை அரசு இன்னும் மறுக்கவில்லை; மாற்றுப் புள்ளி விபரத்தையும் கொடுக்கவில்லை. கல்லூரி நடத்துபவர்கள் கேம்பஸ் வேலைவாய்ப்பு 40 சதவிகிதம் சரிந்திருக்கிறது என்கிறார்கள். தொழில் முனைவோர் கூட்டங்களில் கலந்து கொள்ளும் சமயங்களில், ‘கடந்த 12 மாதங்களில், யார் யாருடைய தொழிலில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, புதிய ஆள்களை நியமித்து இருக்கிறீர்கள்’ என்று நான் கேட்கிறேன். என் முன்னால், ஒரு கை கூட உயரவில்லை. இதுதான் உண்மை நிலவரம்.’’ 



``உலக வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில், தொழில் எளிதாகத் தொடங்குவதற்கு வசதியான நாடுகளின் பட்டியலில், இந்தியா 130-வது இடத்தில் இருந்து 100-வது இடத்துக்கு முன்னேறி உள்ளதே! பண மதிப்பு நீக்க நடவடிக்கை மொத்தமாக இந்தியப் பொருளாதார வளர்ச்சியை வீழ்ச்சி அடைய வைத்துள்ளது என்பது உண்மையானால், இது எப்படிச் சாத்தியமாகும்?’’  



``130-வது இடத்தில் இருந்து 100-வது இடத்துக்கு எப்படி வந்தோம் என்று கேட்கிறீர்கள்? இது நல்ல கேள்வி. உலக வங்கியின் அந்தக் கூற்றுக்கு, ஆதாரமாக நடத்தப்பட்ட ஆய்வு, இந்தியாவில் இரண்டு நகரங்களில் மட்டும் நடப்பது. ஒன்று மும்பை; மற்றொன்று டெல்லி. இந்த இரண்டு நகரங்களில், இரண்டு இடங்களில் ஏற்பட்ட கணிசமான முன்னேற்றத்தால், இந்தியாவின் இடம் உயர்ந்துள்ளது. அதில் ஒன்று, மும்பையிலும் டெல்லியிலும் மின்சார இணைப்பு பெறுவதற்கான அவகாசம் தற்போது குறைக்கப்பட்டு இருப்பது; இப்போது அந்த இரண்டு நகரங்களில் மின் இணைப்பு பெறுவதற்கான கால அவகாசம் வெகுவாகக் குறைந்துள்ளது. இரண்டாவது Insolvency and Bankruptcy Code சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி இருக்கிறது. தமிழில்  `மஞ்சள் கடிதாசி கொடுத்தாச்சு, போண்டியாகி விட்டது, திவாலான கம்பெனி’  என்று சொல்கிறோம் இல்லையா... அதுதான். அதற்கு நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றி, கம்பெனிகள் திவாலாவதை விரைவில் முடித்து வைப்பதற்கு ஒரு Tribunal-ஐ நிறுவி இருக்கிறது. அவ்வளவுதான்! மேலும் நூறாவது இடம் என்பது முதல் இடம் அல்ல; நூறாவது இடம் என்பது நூறாவது இடம்தான்! இதில் என்ன பெருமை இருக்கிறது.’’



``மத்திய பா.ஜ.க அரசின் பொருளாதார நடவடிக்கைகளை நீங்கள் தொடர்ந்து கறாராக விமர்சிப்பதால்தான், உங்களை மோடி தனிப்பட்ட முறையில் தாக்குகிறாரா?’’



``இது வரம்பு மீறிய கேள்வி. நீங்கள் வரம்பை மீறிவிட்டீர்கள். ஒப்புக் கொண்ட  பேட்டியின் பொருள்களில் இதுபோன்ற கேள்விகள் வராது. ஆனாலும், நான் பதில் சொல்கிறேன். நான் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, மோடி குஜராத் முதல்வராக இருந்தார். அப்போது டெல்லியில் நடக்கும் முதல் அமைச்சர்கள் கூட்டங்களில் அவர் கலந்துகொண்டுள்ளார். அப்போது ஓரிரு முறை அவரைப் பார்த்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் அவரைச் சந்தித்ததே இல்லை. பேட்டியை இத்தோடு முடித்துக்கொள்ளலாம்” என எழுந்து நிற்கிறார் ப.சிதம்பரம்.
Thanks Anatha vikatan

Nov 23, 2017

தர்ம யுத்தமா..?


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பை எதிர்த்து கழகம் சார்பில் தொடர்ந்துள்ள வழக்கில் கழக வழக்கறிஞர் சாதுர்யமாக வாதங்களை எடுத்து வைத்திருக்கிறார். கருத்து வேறுபாடு என்பது கட்சித் தாவலாகக் கருத முடியாது. கட்சித் தாவல் சட்டத்திற்கும் அது உட்பட்டதல்ல. ஆளும் கட்சிக்கு எதிராக கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, கட்சியை விட்டு விலகி னாலோ மட்டுமே கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக் கையை சபாநாயகர் எடுக்க முடியும். ஆளுநரை நேரே சந்தித்து கடிதம் கொடுப்ப- த- £ல் மட்டுமே கட்சித் தாவல் சட்டத்தைத் தவ-றாகப் பயன்படுத்த முடியாது. சட்டத்தின் இயற்கை நீதிக்கு எதிராக சபாநாயகர் தகுதி இழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார் என்று வழக்கறிஞர் வாதம் செய்திருக்கிறார். ஆளும் கட்சிக்கு எதிராக கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்த 12 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் வழக்கறிஞர் வாதம் செய்திருக்கிறார். இந்த பன்னீர், பாண்டியராஜன் உட்பட 12 பேரையும் தகுதி நீக்கம் செய்துவிட்டால் பன்னீர் எங்கு சென்று தர்ம யுத்தம் நடத்துவார்? என கூட இருக்கும் கொட்டைப் பாக்கு மண்டைகள்தான் பதில் சொல்ல வேண்டும்! ஆக, விரைவில் வெளிவர இருக்கும் தீர்ப்பானது உண்மையான நீதியை வெளிச்சம் போட்டுக் காட்டும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. கோமாளிகள் கூட்டுச் சேர்ந்து எடுத்த முடிவு எந்த அளவிற்கு கேவலமானது என்பதும் மக்களுக்குத் தெரிய வரும். சென்ற வருடம் இதே மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவர் இந்த வருடம் இதே மாதத்தில் துணை முதலமைச்சராக பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார். தற்போது நிதித் துறையை கையில் வைத்திருக்கும் பன்னீர், தனக்கு நிதியைப் பற்றி எதுவும் தெரியாத காரணத்தால் மீன்வளத்தை முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ள அனுப்புகிறார்! ஆனால், மீனவளத்துக்கும் நிதியைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பது மீன்வளத்தின் நடவடிக்கையைப் பார்க்கும்போது தெரிகிறது. நிதி, நீதி & இரண்டிலும் சதி செய்து விதி விளையாடு-கிறது. இது ஒருபுறம் இருக்க, கோவையில் ஆய்வு நடத்திய ஆளுநர் துறைகள் பற்றிய ஆய்வு நடத்தவில்லை; பொழுது போகாதத- £ல் கலந்துரையாடல் நடத்தினார் என்று சப்பைக்கட்டு செய்து எடப்பாடியார் 
பேசி-யிருக்-கிறார். தலைமைச் செயலகத்திலேயே ஆளுநருக்கு தனி அறை என்பது இந்திய சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்-படுவதுதான் ஆளுநர் என்று தற்போது ஆட்சி-யாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், ஆளுங்கட்சி சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் முறைகேடுகள் இவற்றைப் 
பற்றி அறிக்கை ஒன்றை மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழு தயாரித்து வருகிறது. அது விரைவில் ஆளுநர் வசம் அளிக்கப்படும் என்றும் தெரிகிறது. ஆளுங்கட்சிக்கு ஆப்பு வைக்கத்தான் ஆளுநர் வந்திருக்கிறார் என்று ஆளும் தரப்பிற்கு இப்போதுதான் புரிய ஆரம்பித்திருக்கிறது. எப்படியோ, நல்லது நடந்தால் சரி! கடந்த ஓர் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார நிலை கீழே இறங்கி வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டி- ருக்கிறது என்பதை மறைத்து, இந்தியாவில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருப்பதாக அண்டப் புளுகை பன்னீர் நந்தம்பாக்கம் தொழில் மாநாட்டில் கூறியிருக்கிறார். நிதியைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்பதை நாகரீகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆளுநர் தற்போது ஒவ்வொரு துறை யாக ஆய்வு செய்து தன் பங்குக்கு ஒரு புதிய ‘தர்ம யுத்தம்’ ஒன்றை தொடங்கி யிருக்கி- றாரோ என்று மக்கள் நினைக்கத் தொடங்கி-யிருக்-கிறார்கள். ஏற்கெனவே ‘தர்ம யுத்தம்’ என்ற பெயரில் அதர்ம யுத்தத்தை நடத்திய துரோகிகள் தற்போது ஆளுநரின் தர்ம யுத்தத்தைப் பார்த்து ஆடிப் போயிருக்கிறார்கள் என்றும் அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஆளுங்கட்சியினர் பற்றிய குறைகளை மாவட்ட ரீதியாக மக்கள் ஒன்று சேர்ந்து ஆளுநரிடம் மனு கொடுக்கத் தயாராகி வருகிறார்கள் என்ற செய்தியும் ஆளும் தரப்பினரை பேதியடையச் செய்திருக்கிறது! ஆளுநரின் நடவடிக்கை ஆளும் தரப்பிற்கு உளவியல் ரீதியாக பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள். 
 சோழா அமுதன்

Nov 22, 2017

பயமா எங்களுக்கா ? எந்தப் பயமும் இல்லை! - நடராசன் அதிரடி

‘‘வாங்க... வாங்க... வெளியில என்ன பேசிக்கிறாங்க?’’ என்று நம்மை வரவேற்ற நடராசனின் கைகளில் அன்றைய நாளிதழ்கள் இருந்தன. ‘‘முட்டை விலை ஏழு ரூபாயா ஆகிடுச்சே... உற்பத்தியில எந்தப் பிரச்னையும் இல்லையே! அப்புறம் ஏன் விலையைக் கூட்டியிருக்காங்க... ஜி.எஸ்.டியா?’’ என நம்மைக் கேள்விகேட்டார்.



மரணத்தைத் தொட்டுவிட்டு மீண்டுவந்திருக்கிறார் சசிகலாவின் கணவர் நடராசன். சசிகலாவின் குடும்பம் மொத்தத்தையும் ஐ.டி ரெய்டுகள் சூறாவளியாய்ச் சுழற்றியடிக்கும் சூழலில், உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சையை முடித்துவிட்டு முழுமையான ஓய்வில் இருக்கும் நடராசனை, அவரின் தம்பி ராமச்சந்திரனின் இல்லத்தில் சந்தித்தோம். உடலில் தளர்வும் சோர்வும் தெரிந்தாலும், மனதளவில் உற்சாகமாக இருப்பது அவர் பேச்சில் தெரிகிறது. யாருக்கோ புரியவேண்டிய வகையில் அர்த்தம் பொதிந்துப் பேசுவது நடராசனின் வழக்கம். அது மாறவே இல்லை.


‘‘உடல்நிலை எப்படி இருக்கிறது?’’ 


‘‘நீங்களே சொல்லுங்க... நான் எப்படி இருக்கேன்? நல்லாத்தானே இருக்கேன். ஓய்வு உடம்புக்குத்தான். காலையில் அப்பார்ட்மென்ட்டுக்கு வெளியே வாக்கிங் போறேன். அப்புறம் செய்திகளைப் பாக்குறது, படிக்கிறது, ‘செக்கப்’புக்குப் போறதுன்னு நேரம் சரியா இருக்கு. வாக்கிங் போறப்ப நம்மள அடையாளம் கண்டுபிடிச்சுடுறாங்க. எல்லா ஃபிளாட்ல இருந்தும் ஆச்சர்யமா எட்டிப் பாத்தாங்க. மறுநாளே வந்து அறிமுகப்படுத்திக் கிட்டு சகஜமா பேச ஆரம்பிச்சுட்டாங்க. நிறைய பெண்கள் வந்து, ‘எப்படி இருக்கீங்க’ன்னு விசாரிக்கிறாங்க. ஆட்டோகிராஃப்லாம்கூட கேட்குறாங்க. ஒரு பிரியத்துல அப்படிப் பேசுறாங்க.’’  



‘‘மருத்துவமனையில் உங்கள் மனைவி சசிகலா வந்து பார்த்தபோது, உங்களுக்குச் சுயநினைவு இருந்ததா, பேசினீர்களா?’’ 



‘‘கணவன்-மனைவி பாத்துக்கிட்டா பேசாம இருப்பாங்களா? அந்த நேரத்துல ரெண்டு பேரும் சந்திச்சது ஒரு சந்தோஷம். அது ஆறுதலா, தெம்பா இருக்கும்ல! ‘என்ன பேசுனீங்க’ன்னுலாம் நீங்க கேட்கக்கூடாது. அது பர்சனல். கணவன்-மனைவிக்கு இடையில பேச ஆயிரம் இருக்கும்! ஆனா, உங்களுக்கு ஒரு போட்டோ காட்டுறேன் பாருங்க... (மொபைலில் இருந்து எடுத்துக்காட்டுகிறார். அந்த போட்டோவில், நடராசன் பெட்டுக்கு அருகில் சசிகலா உட்கார்ந்திருக்கிறார். லட்டு போன்ற பத்துக்கும் மேற்பட்ட அழகழகான குழந்தைகள் சிரித்துக்கொண்டு நிற்க, அவர்களை அணைத்தபடி சசிகலா பூரிப்புடன் காணப்படுகிறார்.) எல்லாம் பேரப் பசங்க. இது பழனிவேல் பேத்தி, இது ராமச்சந்திரனோட பேரன்...’’



‘‘உங்கள் குடும்பத்தைக் குறிவைத்து மிகப்பெரிய ரெய்டை வருமானவரித் துறை நடத்தியுள்ளதே?’’ 



‘‘நடத்தட்டும்! ரெய்டு இன்னைக்கு மட்டுமா நடக்குது! முன்னாடி ப.சிதம்பரம் சென்ட்ரல் மினிஸ்டரா இருந்தப்பவும்தான் நடந்துச்சு. அதனால என்ன ஆகப்போகுது? எங்கள் குடும்பத்தில் யாருக்கும் எந்தப் பயமும் இல்லை. ரெய்டுல என்ன கிடைச்சது? தஞ்சாவூர்ல இருக்கிற என் வீட்டுக்கு அதிகாரிகள் போயிருக்காங்க. அங்க இருந்த பையன் பிரபு, ‘ரெய்டு பண்ண ஆர்டர் இருக்கா’ன்னு கேட்டதுக்கு, திவாகரன் பேருக்கு வந்த ஆர்டரை அந்த அதிகாரிகள் காமிச்சுருக்காங்க. பிரபு அதைப் பாத்துட்டு, ‘இது நடராசன் சாரோட வீடு’ன்னு சொல்லவும்... ‘அய்யோ! மாத்தி வந்துட்டோம்’ன்னு அந்த அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. அதன்பிறகு, ‘வந்ததுக்கு வேணும்னா சோதனை பண்ணிக்கோங்க’ன்னு சொல்லி அந்தப் பையனும் எல்லா அறைகளுக்கும் அழைச்சுட்டுப் போயிருக்கான். என்ன கிடைச்சுச்சு அங்க? ஒண்ணும் இல்ல. எங்க அம்மா வெத்தலைப் பெட்டியில இருந்த 180 ரூபாயைப் பிடிச்சு, அதை தினகரன் கணக்குல வரவு வெச்சுட்டுப் போயிருக்காங்க. வீட்டு மாடியில ஒரு ரூம்ல இருந்த அலமாரிக்குச் சாவி தொலைஞ்சு போச்சு போல! அதனால அதைத் திறக்க முடியாம, அதுக்கு மட்டும் சீல் வெச்சுட்டுப் போயிருக்காங்க.’’



‘‘இந்தச் சோதனையை, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று நினைக்கிறீர்களா?’’ 



‘‘சென்ட்ரல் மினிஸ்டரா ப.சிதம்பரம் இருந்தப்போ, என்னோட ‘தமிழரசி’ பத்திரிகைல புகுந்து ரெய்டு பண்ணாங்க. அப்பவும் ஒண்ணும் கிடைக்கல. அது வேற பிரச்னை. அதை இப்ப நான் ஏன் சொல்றேன்னா, அதே சிதம்பரம் வீட்லயும் சமீபத்துல ரெய்டு நடந்துச்சு. அப்போ, ‘என்னைத் தாக்க என் குடும்பத்தை மோடி குறிவைக்கிறார்’னு சிதம்பரம் சொன்னார். சிதம்பரம் அப்படி சொன்னப்போ, நான் ஓர் அறிக்கை விட்டேன். அதுல, ‘உங்க வீட்ல நடந்தா பழிவாங்கும் நடவடிக்கை... நீங்க எங்க வீட்ல ரெய்டு நடத்துனா, அது நேர்மையான நடவடிக்கையா’ன்னு கேட்டிருந்தேன். நான் ஒருத்தன்தான் அவரை அப்படிக் கேள்வி கேட்டு அறிக்கைவிட்டேன். இதை நான் ஏன் இங்க சொல்றேன்னா... சிதம்பரம் என்ன சாதாரண ஆளா? சென்ட்ரல் மினிஸ்டரா இருந்தவர். அங்க உள்ள நடைமுறைகள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. அப்படி இருந்தும், அவர் வீட்ல நடந்த ரெய்டை ‘பழிவாங்கல் நடவடிக்கை’ன்னு அவரே சொல்றார்னா... அதுக்கும் வாய்ப்பு இருக்குன்னுதானே அர்த்தம். நடக்கட்டும்... பாப்போம்!’’  



‘‘கவர்னர் இப்போது ஆய்வுக்குப் போகிறார். அது சர்ச்சை ஆகியுள்ளதே?’’ 



‘‘அவங்களை நல்லவங்களா காட்டிக்க இந்த மாதிரி ஏதாவது பண்றாங்க; பண்ணட்டும். மக்கள் நம்பிருவாங்களா? எல்லாத்தையும் பார்த்துட்டுத்தானே இருக்காங்க. மகாபாரதத்துல துரியோதனன் கதை  வரும். துரியோதனன்கிட்ட, ‘சபையில இருக்கவங்கள்ல நல்லவங்க யார்’ன்னு கேப்பாங்க. துரியோதனன் கண்ணுக்கு அந்தச் சபையில இருக்க யாரும் நல்லவங்களா தெரியமாட்டாங்க. அதனால, ‘எல்லாரும் கெட்டவங்கதான்’னு துரியோதனன் சொல்லுவான். அதே வேலைய தர்மர்கிட்ட கொடுப்பாங்க. அவர் கண்ணுக்கு எல்லாருமே நல்லவங்களாத்தான் தெரிவாங்க. நாம பார்க்கும் விதத்துலதானே இருக்கு. நல்ல கண்களால பாத்தா... எல்லாம் நல்லதாத்தான் தெரியும். கெட்ட கண்ணால பார்த்தா... எல்லாம் கெட்டதாகத்தான் தெரியும்.’’ 



‘‘கவர்னரின் ஆய்வு நடவடிக்கையை முதல்வரும் அமைச்சர்களும் வரவேற்கிறார்களே?’’ 



‘‘அவங்க வேற என்ன செய்வாங்க? அதைத்தானே செய்ய முடியும். அவங்களுக்குச் சொந்தப் பிரச்னைகளும் இருக்கு; மாநிலப் பிரச்னைகளும் இருக்கு. எல்லாத்துலயும் இருந்து அவங்கள காப்பாத்திக்கணும்னா, அதைத்தானே செஞ்சாகணும். வேற என்ன அவங்ககிட்ட இருந்து எதிர்பார்க்க முடியும்?’’ 



‘‘நீங்கள் சிகிச்சை முடிந்துவந்த பிறகு, உங்களிடம் முதல்வர், துணை முதல்வர் தரப்பிலிருந்து யாராவது பேசினார்களா?’’ 



‘‘யார்கிட்டயும் பேசணும்னு எந்த அவசியமும் எனக்கு இல்ல; பேசி என்ன ஆகப்போகுது? ஆனா, ‘எடப்பாடிக்கும், பன்னீருக்கும் பிரச்னை இருக்குண்ணே! இப்போ கூப்பிட்டா பன்னீர் நம்ம பக்கம் ஓடிவந்துடுவார்’ன்னு பசங்க சொன்னாங்க. ‘நாம பண்ற வேலையாடா இது? அவராத்தான போனார்; அவரைப்போய் நாம ஏன் கூப்பிடணும்’னு சொல்லிட்டேன். அவ்வளவுதான்.’’



‘‘தினகரன் நிதானமாக எல்லாப் பிரச்னைகளையும் எதிர்கொள்கிறார். அதில் உங்களுக்குத் திருப்தியா?’’
(சிறிது யோசனைக்குப் பிறகு) ‘‘இப்போ அதைப் பண்ணித்தானே ஆகணும். ஆனா, ஒண்ணு புரிஞ்சுக்கணும். எல்லாருக்கும் ஒரு சுயமரியாதை உணர்வு, தனி மனித உரிமை எல்லாம் இருக்கு. அதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கணும். அப்படி இருந்தா, யாருக்கும் எந்தப் பிரச்னையும் வராது; வந்திருக்கவும் செய்யாது!’’


‘‘நீங்கள் சொல்வதைப் பார்த்தால்... தினகரன், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது போல் தெரிகிறதே?’’ 


‘‘ஒற்றுமையா... வேற்றுமையில் ஒற்றுமையா... ஒற்றுமையில் வேற்றுமையா... எப்படிச் சொல்றீங்க? (நம்மைக் கூர்மையாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இந்தக் கேள்வியைக் கேட்கிறார்). மூணு பேர் மட்டும் என்ன... எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்னுதான் சொல்றேன். சின்னச் சின்ன வேற்றுமை, மனஸ்தாபம் இருந்தாலும் அதையும் ஒற்றுமையா இருந்துதான் எதிர்கொள்ளணும். அப்படி இருந்தா, அவங்களுக்கும் நல்லது; கட்சிக்கும் நல்லது; எல்லாருக்கும் நல்லது.’’ 



‘‘வருமானவரித்   துறை  சோதனையால், குடும்பத்தினர் சோர்ந்துபோயுள்ளார்களா?’’ 



‘‘யாரும் சோர்ந்து போகவில்லை! ஒவ்வொருத்தரும் ஓர் எல்லையை நிர்ணயிச்சுக்கணும். நமக்கு எது தேவையோ, அதை எல்லையா வெச்சுக்கணும். நிம்மதியா தூங்குறதுக்கு ஒரு பாய், தலையணை இருந்தா போதும். அதை ரோட்ல, ரயில்வே ஸ்டேஷன்லன்னு எங்க வேணும்னாலும் விரிச்சுப் படுத்துடலாம்ல. நான் அப்படிப் படுத்துருவேன். உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா? வசதி வந்தா, பெட், மெத்தைன்னு ‘கம்ஃபர்ட் லெவல்’ கூடும். அது வேற! ஆனா, ‘நமக்கு என்ன தேவை... எவ்வளவு தேவை’ன்னு அளவைச் சரியா நிர்ணயிச்சுக்கிட்டு வாழ்ந்தா, இந்த ரெய்டுலாம் நம்ம பக்கத்துல கூட வர முடியாது. இப்போ என் பக்கத்துலயே வர முடியலையே! அதைப் புரிஞ்சுக்கணும்.’’ 



‘‘இரட்டை இலைச் சின்ன வழக்கு...’’ 



‘‘1989-ல அந்தச் சின்னத்தை மீட்டுக்கொடுத்தது யாரு? இந்த நடராசன்தான். டெல்லியில அப்போ பல அ.தி.மு.க தலைவர்களும் இருந்தாங்க. வேறு ஒரு வேலைய முடிச்சுட்டுக் கிளம்புற அவசரத்துல இருந்த அந்தத் தலைவர்கள்கிட்ட, ‘எல்லாரும் வெயிட் பண்ணுங்க. இன்னொரு சஸ்பென்ஸ் செய்தி இருக்கு’ன்னு சொன்னேன். கொஞ்ச நேரத்துல இரட்டை இலை திரும்பக் கிடைச்ச செய்தி வந்தது. அப்போ ராகவானந்தம் இருந்தார். ‘இந்த லெட்டரை நானே போய் ஜெயலலிதா மேடம்கிட்ட கொடுக்கிறேன்’னு ஆர்வமா சொன்னார். நான்தான் அவர் கையில அதைக் கொடுத்து அனுப்புனேன். இப்போ திரும்பவும் அந்தச் சின்னத்துக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கு. அது யாரால வந்துச்சு? எல்லாம், இங்க இருந்தவங்க செஞ்ச வேலைகளாலதானே. எங்க சுத்துனாலும் இங்கதான வரணும்; வரட்டும். அது பெரிய பிரச்னை இல்லை!’’



- ஜோ.ஸ்டாலின், ஓவியம்: பிரேம் டாவின்ஸி
நன்றி ஜூவி